Friday, July 15, 2011

சூடு பிடிக்கும் நித்தி வீடியோஸ்!


'நித்தியானந்தா - ரஞ்சிதா' என்று ஒரு வீடியோ திடீர் 'ஈவினிங் ஷோ'வாக தொலைக்காட்சியில் வெளியாகி... தமிழக மக்களை மூச்சுத் திணறவைத்தது பழைய பரபரப்பு. ''இந்த வீடியோ ஃபோர்ஜரியாகத் தயாரிக்கப்பட்டது. இதைத் தயாரித்தவர்கள் யார்? இதன் பின்னணி என்ன என்பதை இப்போது சொல்ல மாட்டேன். சொன்னால், என்னுடைய உயிருக்கேகூட அது ஆபத்தாக மாறிவிடும்!'' என்று ஆரம்பத்தில் சொல்லி வந்த நித்தியானந்தா... அதன் பிறகு மெதுமெதுவாக சில 'மோட்டிவ்'களை இலைமறை காயாகச் சுட்டிக்காட்ட ஆரம்பித்தார். இப்போதோ ''அது மொத்தமும் மார்ஃபிங்... பின்னால் இருந்தது பிளாக்மெயில் மோட்டிவ்!'' என்ற கோஷத்துடன்
படுஸ்பீடாக சென்னையை வலம் வர ஆரம்பித்துள்ளார். முதல் நாள் நடிகை ரஞ்சிதாவும், மறு நாள் நித்தியானந்தா - கம் - ரஞ்சிதாவுமாக குரு - பக்த சமேதராக சென்னை மீடியாக்களுக்கு கடந்த 13-ம் தேதி 'தரிசனம்’ கொடுத்தார்கள்.
'வீடியோ விவகாரத்துக்குப் பிறகு சென்னை பக்கமே தலைவைத்துப் படுக்காமல் இருந்தவர்களுக்கு நம்பிக்கை கொடுத்து, சன் குழுமத்துக்கு எதிராகப் புகார் கொடுக்க வைத்ததே ஜெயலலிதா அரசுதான்!’ என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
நித்தியானந்தா தொடர்பான வீடியோ உண்மையானதுதான் என்று கர்நாடக மாநில போலீஸார் சொல்கிறார்கள். இது தொடர்பாக நம்மிடம் பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர், ''இது உண்மையானதுதான் என்பதை ஆராய்ந்து கண்டுபிடித்துள்ளோம். இது தொடர்பான வழக்கு வரும்போது, கோர்ட்டில் நிரூபிப்போம். மற்றபடி நித்தியானந்தா சென்னை சென்று மீடியாக்களில் பேசுவதற்கு எல்லாம் நாங்கள் பதில் சொல்ல முடியாது. அதில் பொலிடிக்கல் மோட்டிவ் உள்ளது!'' என்று சொன்னார்.
பெங்களூருவைச் சேர்ந்த தடயவியல் துறையின் முன்னாள் இயக்குநர் சந்திரசேகரிடம் பேசினோம். ''அந்த படுக்கை அறை வீடியோ வெளியானதுமே ஒரு தனியார் டி.வி. சேனல் மூலமாக எனக்கு ஒரு சி.டி. கொடுத்தார்கள். அதை நான் ஆராய்ந்து பார்த்ததில் மார்ஃபிங் செய்யப்பட்டதைப்போலத் தெரியவில்லை. கேமராவை ரகசியமாக ஒரு இடத்தில் ஃபிக்ஸ் செய்துவைத்து எடுக்கப்பட்டு இருக்கிறது. மார்ஃபிங் என்றால் வெவ்வேறு கேமராக்களில் பதிவான காட்சிகளின் கலவையாக இருக்க வேண்டும். ஆனால், இந்த வீடியோவில் உள்ள காட்சிகளை எடுக்க ஒரே கேமராதான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது!'' என்று உறுதியாகச் சொன்னார்.
அப்படி இருக்க நித்தியானந்தா தரப்பின் வாதம்தான் என்ன?
சென்னை வந்த நடிகை ரஞ்சிதாவை, தாஜ் கன்னிமாரா ஹோட்டலில் சந்தித்தோம். ''எனக்கு வாழ்வு கொடுத்து ஆளாக்கியது சென்னைதான். ஆனால், கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக இந்த மண்ணில் என்னைக் கால் மிதிக்கவிடாமல் செய்துவிட்டார்கள். தப்பு செய்து அதற்காகத் தண்டனை கொடுத்து இருந்தால், கவலைப்பட்டு இருக்க மாட்டேன். ஆனால், செய்யாத தப்புக்கு நான் தண்டனை அனுபவித்தேன். அனுபவித்த எனக்குத்தான் அந்த வலி புரியும். ஒவ்வொரு நாளும் தூக்கம் இல்லாமல் நான் பட்ட வேதனைகள் கொஞ்சம்நஞ்சம் இல்லை...'' என்றவரிடம் கேள்விகள் கேட்டோம்.
''அந்த வீடியோ பற்றி என்னதான் சொல்கிறீர்கள்?''
''ஒரு நாள் திடீர் என்று லெனின் கருப்பன் என்கிற தர்மானந்தா, என்னை சந்திக்க வந்தார். ஆசிரமத்தின் முன்னாள் சீடரான அவர் அந்த வீடியோவை என்னிடம் காட்டினார். பார்த்ததும் அதிர்ந்து​விட்டேன். 'இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லையே... அப்புறம் எப்படி?’ என்று கத்தினேன். 'அது எங்களுக்கும் தெரியும். இது நாங்களே உருவாக்கிய வீடியோ. இதை வெளியிடாமல் இருக்க வேண்டுமானால், நாங்கள் சொல்​வதை நீ கேட்கணும்!’ என்று சொன்ன லெனின், இந்த வீடி​யோவைக் காட்டி என்னிடம் தவறாக நடந்துகொள்ளவும் முயற்சி செய்தார். நான் அவரைத் திட்டி அனுப்பினேன்.
அதற்குப் பிறகு, 'நாங்கள் நான்கு பேர் சேர்ந்துதான் இதைத் தயாரித்தோம். வீடியோவை சன் டி.வி-யிலும், போட்டோவை நக்கீரன் பத்திரிகையிலும் வெளி​யிடாமல் இருக்க வேண்டும் என்றால்,  60 கோடி கொடுக்கணும்’ என அடுத்த மிரட்டல் வந்தது. 'போலியான வீடியோவை வைத்து உங்களால் என்ன பண்ண முடியும்?’ என்று கேட்டேன். 'அது நமக்கு மட்டும்தானே தெரியும். எங்களுடைய நோக்கம் சாமியின் பேரைக் கெடுக்கணும்!’ என்று சொன்னார்கள். நான் எவ்வளவோ பேசிப் பார்த்தேன். அவர்கள் கேட்கும் மன நிலையில் இல்லை.
அடுத்த சில நாட்களில் டி.வி-யிலும், பத்திரிகையிலும் வெளியிட்டு, எங்களை எவ்​வ​ளவு கேவலப்படுத்த முடியு​மோ... அவ்வளவு கேவலப்​படுத்தினார்கள்!''
''அந்த வீடியோவில் அத்தனை விவரமாகவும் துல்லியமாகவும் உள்ள காட்சிகளை 'மார்ஃபிங்' செய்து ஒட்டுவேலையில் காட்டி இருக்க முடியாது என்று சொல்கிறார்களே?''
''அது மார்ஃபிங் செய்யப்​பட்டதுதான்!
அந்த வீடியோ ஒளிபரப்பான அன்று இரவு, 'நீங்க சாமிக்கு எதிராகத்தான் பேட்டி கொடுக்​கணும். அதையும் மீறி ஏதாவது வாய் திறந்தீங்கன்னா, என்ன நடக்கும்னு தெரியாது’ என்று எனக்கு மிரட்டல் வந்தது. உடனே, மிரட்டியவர்கள் மீது புகார் கொடுக்கக் கிளம்பினேன். மறுபடியும் டி.வி. தரப்பில் இருந்து போன் வந்தது. 'மெட்ராஸ் பக்கம் காலெடுத்து வைத்தால், பொய் கேஸ் போட்டு உன்னை உள்ளே தள்ளுவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டோம். நீ வாயே திறக்கக் கூடாது!’ என மிரட்டினார்கள். அந்தச் சூழ்நிலையில் ஆட்சி, அதிகாரம் எல்லாம் அவர்கள் கையில் இருந்தது. அதை மீறி நான் கொடுத்து இருந்தாலும் எந்த நடவடிக்கையும் எடுத்திருக்க மாட்டார்கள்.
இப்போது ஆட்சி மாறிவிட்டது. முதல்வர் ஜெயலலிதா மேடம், தப்பு செய்தவர்களை உள்ளே தள்ளிக்கொண்டு இருக்கிறார். இந்த சமயத்தில் நாமும் புகார் கொடுத்தால் நீதி கிடைக்கும் என்று நம்பித்தான், சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்தேன்.
'சம்பந்தமே இல்லாத என்னை சுவாமியோடு இணைத்து ஒரு வீடியோ தயாரித்து, அதை வெளியிட்ட டி.வி. மீதும், என்னை மிரட்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!’ என்று புகார் கொடுத்தேன். சன் குழுமத்தைச் சேர்ந்த சிலரது பெயரையும் என் புகாரில் சொல்லி இருக்கிறேன். 'அவங்க பேரை இப்போது வெளியில் சொன்னால், அவர்கள் வெளிநாட்டுக்குத் தப்பிப் போக வாய்ப்பு இருக்கிறது. அதனால், விசாரணை முடியும் வரை அதை வெளியில் சொல்ல வேண்டாம்’ என போலீஸ் தரப்பில் சொன்னார்கள். அதனால் அதை உங்களிடம் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன்!'' என்று சொல்கிறார் ரஞ்சிதா.
''அந்த வீடியோ முழுக்கவுமே பொய்க் காட்சி. அப்படி எதுவும் நடக்கவே இல்லை என்று கூறும் நித்தியானந்தா தரப்பு, தங்கள் பக்தர்களிடம் பணமும் நிலமும் கேட்டு சிலர்  பிளாக்மெயில் செய்தததாகவும் அதில் சிலர் பணம் கொடுத்துவிட்டதாகவும் கூறுவது எப்படி?
நித்தியானந்தா குரூப்பைப் பார்த்தால், தப்பே செய்யாமல் மிரட்டலுக்குப் பணிகிற ரகம் மாதிரியா தெரிகிறது?'' என்று சிலர் கேட்பதற்குத்தான் பதிலே இல்லை!
- கே.ராஜாதிருவேங்கடம், படங்கள்: சு.குமரேசன்
''மிரட்டியதற்கு ஆதாரம் இருக்கிறது!''
சென்னை எழும்பூரில் உள்ள மெரினா டவர் ஹோட்டலில் பத்திரிகை யாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார் நித்தியானந்தா. அவர் வந்த சில நிமிடங்களில் ரஞ்சிதாவும் ஏக சிரிப்போடு வந்து அமர்ந்தார்.
''தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்று நல்லாட்சி நடத்திக்கொண்டு இருக்கும் மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு தியான பீடத்தின் சார்பாக வாழ்த்துகளையும் ஆசீர்வாதங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்...'' என ஜெ. புராணத்தோடுதான் பேச்சை ஆரம்பித்தார் நித்தியானந்தா.
''சென்னையில் எங்களது ஆசிரமத்தின் கிளையைத் தொடங்க பக்தர் ஒருவர் நிலம் கொடுப்பதாகச் சொல்லி இருந்தார். அதைக் கைப்பற்ற சன் டி.வி-யை சேர்ந்தவர்கள் முயற்சித்தார்கள். அது முடியாமல் போனது. அந்தக் கோபத்தில் தான் என்னைப் பழிவாங்க மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோவை ஒளிபரப்பி அசிங்கப்படுத்தினார்கள். இதற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறது. வீதிக்கு வீதி அசிங்கமான போஸ்டர்களை ஒட்டினார்கள். பணத்துக்காக அந்த வீடியோவைக் கோடி கோடியாக விற்பனை செய்தார்கள்!'' என்று குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போனார்.
எக்குத்தப்பான கேள்விகள் சில நிருபர்களிடம் இருந்து வந்தபோது, அதற்கெல் லாம் அசராமல் நித்தியானந்தா தந்த பதில்களைப் பார்த்தால்... அவருக்குப் பின்னாலும் இப்போது பக்காவான அரசியல் பலம் சேர்ந்துவிட்டது என்பது தெளிவாகப் புரிந்தது! 

வெள்ளைத் தாடி... துள்ளல் நடை! வந்தாச்சு ரஜினி


வெள்ளைத் தாடி... துள்ளல் நடை!

வந்தாச்சு ரஜினி

சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவ மனையில் ஒன்றரை மாதங்கள் சிகிச்சை முடிந்து மீண்டும் சென்னை மண்ணில் கால் வைத்திருக்கிறார் ரஜினிகாந்த்.
 கடந்த 13-ம் தேதி, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ரஜினி வந்து இறங்க... மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து வந்த ரசிகர்கள் தேனீக் களைப்போல் மொய்த்தனர். 'சாமியே ரஜினியே... கடவுளே ரஜினியே...’ என்று ரசிகர்கள் எழுப்பிய 'ரஜினி கோஷம்’ விமான சத்தத்தை மீறி ஒலித்தது. 'எந்த வழியில் ரஜினி வெளியே வருவார்’ என்ற தகவலை அதிகாரிகள் வெளியிடாமல் இருக்கவே, ரசிகர்கள் தவித்துக்கொண்டு அலை பாய்ந்தனர். கடைசியில், வி.வி.ஐ.பி-க்களுக்கான 6-ம் எண் வாசல் வழியாகத்தான் ரஜினி வருகிறார் என்று தெரிய வந்ததும், அங்கே எல்லோரும் குவிந்தனர். ரஜினி வரும் வழியில் முழுக்க போலீஸ் குவிக்கப்பட்டது.
'விமான நிலையத்தில் சில அடிகள் நடப்பார். சுற்றி உள்ள மீடியா மற்றும் ரசிகர்களுக்கு கை அசைப்பார். பின்னர் தன் இன்னோவா காரில் புறப்படுவார்’ என்று பலர் கற்பனைக் குதிரையை ஓடவிட்டனர். வேறு சிலர், 'ரஜினி வீல் சேரில் வருவாரோ... ஒருவேளை யாருக்கும் தெரியாமல் அவர் போயஸ் கார்டன் போய்விடுவாரோ?’ என்று சந்தேகத்தை எழுப்பினர்.
சரியாக இரவு 10-மணிக்கு 6-ம் எண் கேட் வழியாக அனைவரின் அனுமானத்தையும் தவிடுபொடியாக்கி, 'சிங்கம் ஒன்று புறப்பட்டதே...’ ஸ்டைலில் துள்ளிக் குதித்து வந்தார் ரஜினி. ரசிகர்கள் கூட்டத்தில் அவரது இன்னோவா கார் மிதந்தது. இரவு 10-மணிக்கு மேல் பெண்கள் கூட்டம் பெரும் திரளாகக் கூடியதைப் பார்த்து பலரும் ஆச்சர்யத்தில் புருவம் உயர்த்தினர்.  ஆனாலும் ரஜினியை வரவேற்க ஒரு சினிமா புள்ளிகூட வரவில்லை. நடிகர் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் எட்டிப் பார்க்கவில்லை. 
மீனம்பாக்கத்தில் மேடை அமைத்து மீடியா வுக்குப் பேட்டியும், ரசிகர்களுக்கு நன்றியும் சொல்லும்விதமாக முதலில் திட்டமாம். 
''உங்களுக்குக் கிட்னி கோளாறா?'' என்பது போன்ற கேள்விகளால் ரஜினி மனசு சங்கப் படும் என்பதால், அந்தத் திட்டத்தைத் தவிர்த்து விட்டனர். போயஸ் கார்டன் வீட்டில் ரஜினியை தங்கவைத்தால், குசலம் விசாரிக்க அதிக எண்ணிக்கையில் ஆட்கள் வருவார்கள். அவரது ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் என்பதால், கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
1984-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஆட்சியில், ஆசிரியர் கள் பிரச்னை, அரசு ஊழியர்கள் போராட்டம் என்று பல பிரச்னைகள் தலை விரித்து ஆடின. ஆட்சியும் தடுமாறத் தொடங்கியது. அந்த சமயத்தில் எம்.ஜி.ஆர் உடல்நிலையில் திடீரென கோளாறு ஏற்பட... உடனே, எம்.ஜி.ஆர் மீது இருந்த சின்னச் சின்னக் கோபதாபங்களை மறந்துவிட்டு, தமிழ்நாடே அலகு குத்தி, பால் குடம் எடுத்து அவர் நலம் பெற வேண்டும் என இறைஞ்சியது.
அதுபோலவே, கடந்த தி.மு.க. ஆட்சியில் தமிழ் சினிமாவே கருணாநிதி குடும்பத்தின் பிடியில் அகப்பட்டு தவித்துக்கொண்டு இருந்தது. அந்த நேரத்தில் ரஜினியோ, கருணாநிதியின் குடும்பக் கல்யாணத்துக்காக மதுரைக்குப் போனார், அந்தக் கட்சியின் விழாக்களிலும் கலந்துகொண்டார். இதனால் சினிமாக்காரர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் மத்தியிலும் ரஜினி மீது சின்னக் கசப்பு இருந்தது. ஆனால், ரஜினி எப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரோ... அடுத்த நிமிடமே அத்தனை கசப்பும் காணாமல் போக... தமிழ் நாட்டில் மசூதி, சர்ச், கோயில் என எல்லா இடங்களிலும் மனமுருகப் பிரார்த்தனைகள் செய்தனர்.
இதோ, வெள்ளித் தாடியோடு மீண்டும் துள்ளி வந்துவிட்டார் ரஜினி!