Wednesday, November 30, 2011

போராட்டம் செயாதவன் ஜடம் -- பிரபாகரன் பேட்டி (28.5.1986)

மிழர்கள் பெருவாரியாக வாழும் யாழ்ப்​பாணம் மீது ஜெயவர்த்​தனாவின் விமானங்கள் வெறித்த​னமாகக் குண்டுகளை வீச... சிங்களர் படை நகருக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தக் கிளம்பிவிட்டது என்னும் செய்தி நம்மை பதைபதைக்கச் செய்தது. 


இருப்பினும், தொடர்ந்து விடுதலைப் புலிகள் நிகழ்த்திய வீராவேசமான எதிர்த் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் சிங்கள ராணுவம் திணறிப்போய் பின்வாங்குகிறது என்னும் செய்தி சற்று நிம்மதியைத் தருகிறது.
விடுதலைப் புலிகளால் சகல வசதி​களோடு இருக்கும் சிங்கள ராணுவத்தைத் தொடர்ந்து சமாளிக்க முடியுமா..? சிங்கள ஓநாய்கள் ஒருவேளை உள்ளே புகுந்துவிட்டால், அப்பாவித் தமிழ் மக்களின் கதி என்னவாகும்..? இதுபோன்ற கவலைகள் வேறு மனதை நெருடின. உண்மையில் அங்கு தற்போது நிலைமை எப்படி இருக்கிறது? இதுபற்றி யார் நேரடியாக நமக்குத் தகவல் சொல்வார்கள்?
திடீரென்று, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் சென்னைக்கு வந்திருக்கும் தகவல் கிடைத்தது. (அவர் சென்னையில் இருக்கிறாரா, இலங்கையில் இருக்கிறாரா என்பதெல்லாம் ரகசியம் என்பதால், நினைத்ததும் சந்தித்துவிட முடியாத நிலை!) தொடர்புகொண்டோம். மறுநாள் காலை சந்திக்கலாம் என்று தகவல் வந்தது. கூடவே, 'நாங்கள் வந்து அழைத்துப் போவோம்’ என்று சொல்லி அனுப்பினார்கள்.
மறுநாள் காலை 9 மணிக்குஇரும்பைப் போல் உடல்வாகுகொண்ட மூன்று இளைஞர்​களுடன் ஒரு வேன் நம் அலுவலகத்துக்கு வந்து நிற்க, ஏறி அமர்ந்தோம். இளம் புலிகள் சென்னை வீதிகளில், படு லாகவமாக வேனை ஓட்டுகிறார்கள்!
சென்னை இந்திரா நகரில் உள்ள தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலை​மையகம்... தேதி மே 21. காலை மணி 9.30.
வீட்டைச் சுற்றி விடுதலைப் புலி இயக்கத்தின் இளைஞர்கள்... உள்ளே மாடி ஹாலில் -
'தம்பி’ என்று செல்லமாக அழைக்கப்படும் அவர்கள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்!சற்று பருமனான, ஆனால் வலுவான உடல்வாகு... ரொம்ப உயரம் இல்லை. வகிடு இல்லாமல் மொத்தமாகத் தூக்கி வாரப்பட்ட சீரான தலைமுடி... தீர்க்கமான விழிகள்... நேருக்கு நேர் நம் கண்களைப் பார்த்துப் பேசுகிறார். அடர்த்தியான கச்சிதமான மீசை பிரபாகரனுக்குத் தனி கம்பீரத்தைத் தருகிறது.
நாம் அங்கே சந்தித்தபோது, ஈழத்தில் இருந்து வந்துகொண்டு இருந்த செய்திகளை அவருடைய தோழர்கள் 'டைப்’ அடித்து அவரிடம் காட்டிக்கொண்டு இருந்தனர். பிரபாகரன் அவற்றைக் கூர்ந்து படித்துவிட்டுச் சில செய்திகளை 'ஓகே’ செய்தார். அவை வெளியுலகம் அறிய பத்திரிகைகளுக்கு உடனுக்குடன் அனுப்பப்பட்டன.
வல்வெட்டித்துறையில் இலங்கைராணுவம் விமானம் மூலம் குண்டு வீசிய செய்தி அப்போது வந்தது. வீராவேசமாக எதிர்த் தாக்குதல் நடத்தியதில் எட்டு விடுதலைப் புலிகள் பலியானார்கள். இந்தச் செய்தியை பிரபாகரன் நம்மிடம் படித்து காட்டிவிட்டுச் சற்று மௌன​மானார்.
தமிழ் மக்களின் பாதுகாப்பு பற்றிக் கவலை​யோடு கேட்டோம்.
''இலங்கை ராணுவம் நடத்தும் இந்த விமானத் தாக்குதலில் மக்கள் அதிகம் இறந்து விடவில்லை. காரணம், இம்மாதிரி விமானத் தாக்குதல்களை இலங்கை அரசு நடத்தப்போவதை சில வாரங்களுக்கு முன்பே தமிழ்ப் பகுதிகளில் எச்சரித்து விட்டோம். ஒவ்வொரு வீட்டிலும் பதுங்கு குழிகள் வெட்டப்பட்டு உள்ளன. ஆண் துணை இல்லாத வீடுகளில் எங்கள் இயக்க வீரர்கள் பதுங்கு குழிகளை வெட்டி உதவினார்கள். விமான ஓசை கேட்டவுடனேயே குழிகளில் பதுங்க, இப்போது குழந்தைகள்கூடப் பயிற்சி பெற்றுவிட்டார்கள்'' என்றார் பிரபாகரன்.
இலங்கை ராணுவ விமானம் மூலம் வீசப்படும் குண்டுகள் பெரும்பாலும் 'வேஸ்ட்’ என்று வர்ணித்தார் பிரபாகரன். 'வேண்டுமானால் மக்களி​டையே பீதியைக் கிளப்ப அது உதவலாம்... மற்றபடி எங்கள் இலக்குகளை அவர்களால் தாக்க முடியாது! அவர்களிடம் 'நேபாம்’ (விஷ கெமிக்கல்) குண்டுகள் வீசுவதற்குத் தயாராக இருக்கின்றன. இன்னமும் அந்த குண்டுகளை அவர்கள் பயன்படுத்தவில்லை. இரக்கம் இல்லாமல் 'நேபாம்’ குண்டுகள் வீசினால், அப்பாவிப் பொதுமக்கள் துன்பம் அடைய நேரிடும்.''
யாழ்ப்பாணத்தில் மக்களின் முழு ஆதர​வோடு விடுதலைப் புலிகள் ஆட்சிதான் நடக்கிறது. ''வரி வசூலே நாங்கள்தான் செய்கிறோம் என்றால் பார்த்துக்​கொள்ளுங்​களேன்'' என்றார் புன்முறுவலுடன் பிரபாகரன்.
''யாழ்ப்பாணத்துக்கு நீங்கள் எப்போது போய் வந்தீர்கள்?'' என்று கேட்டபோது, ஒரு கணம் தயங்கி சிறு புன்னகையுடன், ''இடையிடையே போய் வருவேன்... யுத்த முனையில் எதுவும் எனது உத்தரவுகள்படியே நடக்கும். அவசர முடிவுகள் எடுக்க அங்கே உள்ள எனது தளபதிகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் எல்லோரும் நான் எப்படிச் சிந்திப்பேனோ... அப்படிச் சிந்திக்கப் பயிற்சி பெற்றவர்கள்!'' என்றார்.
விடுதலைப் புலிகளுக்கு நவீன ஆயுதங்கள் அத்தனையும் அத்துப்படியாகி இருக்கிறது. மிலிட்​டரி சயின்ஸைப் புத்தக வடிவில் தமிழில் கொண்டுவந்து இருக்கிறார்கள் இவர்கள். 'போர்க் குரல்’ என்ற இந்தப் புத்தகம் தமிழில் முதல் முயற்சி. இத்தனை போராட்டத்துக்கு நடுவில் தமிழில் ராணுவத்தைப் பற்றியும், போர் முறைகளைப் பற்றியும் விஞ்ஞானரீதியில் பல வால்யூம்களாகத் தயாரித்திருக்​கிறார்கள்.
பொதுவாக, பிரபாகரனுக்குப் புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் அதிகம். உலக நாடுகள் முழுவதிலிருந்தும்
 3 லட்சம் பெறுமான யுத்த நுணுக்கப் புத்தகங்கள் சேகரிக்கப்பட்டு, 'போர்க் குரலில்’ அவற்றின் மொழிபெயர்ப்பு தரப்படுகிறது... போர்க் குரல் லே-அவுட் எல்லாம் பிரமாதம். இருப்பினும் பிரபாகரன் திருப்தி அடையவில்லை.
''என்னைத் திருப்திபடுத்துவது எளிதான காரியம் அல்ல... இன்னும் சிறப்பாகத் தயாரித்திருக்க முடியும்'' என்று சிரித்தார் பிரபாகரன்.
அவரது தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கான 'புலி’ முத்திரைக்குச் சரியான புலித் தலையைத் தேர்ந்தெடுக்கப் பட்டபாடு சுவை​யானது. சிவகாசி பட்டாசில் இருக்கும் புலியின் படத்தில் இருந்து உலகம் முழுவதும் வெளியாகும் புலிப் படங்கள் வரை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. எதிலும் அப்படி ஒரு 'பெர்ஃபெக்ஷன்’ எதிர்பார்க்கிறார் பிரபாகரன். ''நாளைக்கு ஒரு புலியின் படத்தைப் பார்த்துவிட்டு, 'அடடா, இதை உபயோகித்திருக்கலாமே!’ என்று வருத்தப்​படக் கூடாதல்லவா?'' என்று விளக்கம் தந்தார். இந்த அணுகுமுறை அவரது எல்லாச் செயல்களிலும் எதிரொலிக்கிறது.
''எங்கள் இயக்கத்தில் சேருவதற்குக் கட்டுத்திட்டங்கள் உண்டு. வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர்கள் யாரும் இதில் சேர்த்துக்கொள்ளப்படுவது இல்லை. தோல்வி உணர்வுகொண்டவர்களுக்கு இதில் இடம் இல்லை. அப்படிப்பட்டவர்களுக்குத் தன்னம்பிக்கை இருக்காது. இந்தப் போராட்ட விஷயத்திலும் விரக்திதான் அடைவார்கள். தமிழ் ஈழம் உடனே கிடைத்துவிடும் என்ற கனவோடும் வரக் கூடாது. போராட்டத்துக்குக் கால வரம்பு கிடையாது. தனி ஈழம் கிடைக்க சர்வதேச சூழ்நிலைகள்கூட அனுசரணையாக இருக்க வேண்டிய நிலை உண்டு.'' என்ற பிரபாகரன் சற்று உணர்ச்சி வசப்பட்டார்.
''இலங்கையில் தமிழனாகப் பிறந்ததால், வாழும் நிலம் பறிக்கப்பட்டது... கல்வி பறிக்கப்பட்டது... பொருளாதார வசதிகள் மறுக்கப்பட்டன. இதை எதிர்த்துப் போராடாவிட்டால், நாம் ஒரு ஜடம்தான். பிறகு, ஒரு மனிதனாக வாழ்வதில் அர்த்தம் ஏதும் இல்லை. நாங்கள் போராடுவதை எங்கள் சரித்திரக் கடமையாகக் கருதுகிறோம். பதவிகளையோ அல்லது வேறு எதையும் எதிர்பார்த்துப் போராட்டம் நடத்தவில்லை.''
சில நிமிடங்கள் அந்த ஹாலில் அமைதி நிலவியது... பேட்டி - 'டெலோ’ - விடுதலைப் புலிகள் மோதலைப்பற்றி திரும்பியது. நாங்கள் கேட்டோம்: ''இந்த மோதல்... சிறீ சபாரத்​தினத்தின் மரணம் ஆகியவற்றால், தமிழ் மக்கள் கசப்படைந்து இருக்கிறார்கள். தமிழர்களிடையே ஒற்றுமை என்பதே இல்லையா? அந்தக் காலத்தில் சேர, சோழ, பாண்டியர்கள் என்று பிரிந்து மோதியதில் இருந்து இந்த நிலைமைதானா?''
''சேர, சோழ, பாண்டியர்கள் என்று பிரிந்து சண்டையிட்டதும் உண்மை. ஒரு கால கட்டத்தில் சோழர்கள்... சேர, பாண்டியர்களை அடக்கியதும் உண்மை'' என்றார் பிரபாகரன் சுருக்கமாக. பிறகு தொடர்ந்தார்.
''எங்களிடம் வஞ்சகத்தன்மை இல்லை. இரண்டு எதிரிகளைச் சந்திக்க முடியாது. முதலில் கத்திக்கொண்டு இருந்தவர்களைக் கவனிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. நிரம்பத் தள்ளிப்போட்டு எடுத்த முடிவுதான் அந்த மோதல். சிறிய யுத்தமாகவே நடத்தித் தீர்வு காண வேண்டியதாயிற்று. நாட்டைக் காக்க யுத்தத்தில் இறங்கும்போது, மெத்தனமாக முடிவெடுக்க முடியாது. பகவத் கீதையும் அதைத்தான் சொல்கிறது. உற்றார், உடன்பிறப்பு, குரு, நண்பன் என்று யுத்த களத்தில் இரக்கம் பார்ப்பதற்கு இல்லை. சொந்த தந்தை, சகோதரன் போன்றவர்கள் துரோகியாக மாறினால், அவர்களை அழிக்கத் தயங்காதவர்கள் எங்கள் இயக்கத்தில் இருக்கிறார்கள்.
அவர்கள் நிறையப் பொய்களை அவிழ்த்துவிட்டவாறு இருந்தார்கள்... உண்மை செருப்பை மாட்டிக்கொள்வதற்குள்... பொய், பாதி உலகம் உலா வந்திருக்கும் என்பதற்கு ஏற்ப, எங்களைப்பற்றிய பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டன. எனக்குப் பொதுவாகவே பிறரை விமரிசித்து அறிக்கைவிடுவது பிடிக்காது... அவர்களுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தால்... குழாயடிச் சண்டைபோல, அவலங்கள் வெளிவரும்!
நாங்கள் அவர்கள் இயக்கத்தவரை உயிரோடு கொளுத்தியதாகச் சொல்கிறார்கள். அப்படி எதுவும் என் இயக்கத்தில் நடக்காது. அது நினைத்துப் பார்க்கவே இயலாத செயல். அப்படி யாராவது செய்தால், நான் பதிலுக்கு அவரை உயிரோடு கொளுத்துவேன். என் இயக்கத்தில் யாராவது தெரிந்து தவறு செய்தால், அவர்களை நான் மன்னிப்பதில்லை. ஆகவே இங்கே இருப்பவர்களுக்குத் தவறு செய்ய நிறையவே துணிச்சல் தேவைப்படும்!
தமிழ்நாட்டு அரசியலில் சிலர், சிலரை தியாகி ஆக்குகிறார்கள். நான் கலைஞரைச் சந்திப்பது இல்லை என்று குற்றச்சாட்டு போல சொல்லப்படுகிறது. உண்மையில் நான் யாரையுமே சந்திப்பது இல்லை. எம்.ஜி.ஆரையும் நான் சந்திக்கவில்லை. இலங்கைத் தமிழருக்காக எம்.ஜி.ஆர். உண்ணாவிரதம் இருந்தபோதுகூட நான் அங்கே போகவில்லை. எங்கும் நான் போவது இல்லை. எந்தப் பொது நிகழ்ச்சியிலும் நான் கலந்துகொள்வது இல்லை.
தமிழ் ஈழம் சுதந்திரம் அடையும் விழாதான் நான் கலந்துகொள்ளும் முதல் பொது விழாவாக இருக்கும். எங்களுக்கு என்று ஒரு நாடு கிடைத்த பிறகுதான், யாரையும் எங்கேயும் சந்திப்பேன்!'' என்கிறார் பிரபாகரன் அழுத்தம் திருத்தமாக.
''யாழ்ப்பாண மக்களிடம் விசாரியுங்கள். விடுதலைப் புலிகள் தவறு செய்வதாகச் சொல்லட்டும்... மண்டியிடுகிறேன்... சொல்ல மாட்டார்கள்! மற்ற இயக்கத்தவர்கள் செய்யும் தவறுகளை மக்கள் வந்து சொன்னதாலேயே, தடி எடுத்தவன் தண்டல்காரனாக ஆகக் கூடாது என்பதாலேயே, 'டெலோ’ மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று.''
பிரபாகரன் எதிரில் ஒரு மருந்து 'குப்பி’ இருந்தது. ''அது என்ன?'' என்று கேட்டோம்! ''இதில்தான் எனது இயக்கத்தவர்கள் சயனைட் நிரப்பி கழுத்தில் மாட்டிக்கொண்டு இருப்பார்கள். எதிரிகளிடம் சிக்கினால், சயனைடை வாயில் போட்டுக்கொண்டு உயிர்த் தியாகம் செய்வார்கள். பலர் செய்தும் இருக்கிறார்கள்...'' என்று சொல்லிவிட்டு ஏதோ நினைவுகளில் மூழ்கினார் பிரபாகரன்...

சுதந்திரம் வாங்கித் தந்தார் காந்தி, அதை விற்கிறார் சோனியா காந்தி!


சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு
'பரிசுத்தமான லட்சியங்களுக்கு விரோத​மாக நமது செயல்கள் உள்ளன. உலகை மாற்ற வேண்டும் என்றால், நிறுவன அதிகார வர்க்கத்தை மாற்ற வேண்டும். சொற்ப மனிதர்கள் உலகின் தலைவிதியை நிர்ணயிக்க அனுமதிக்கக் கூடாது’ - மூன்றாம் உலக நாடுகளுக்கு நிதி உதவி என்ற பெயரில் அமெரிக்காவின் மிகப் பெரிய நிறுவனங்கள், அந்த நாடுகளை எவ்வாறு மீளாத கடனாளியாக... அடிமையாக மாற்றின என்பதைக் குற்ற உணர்வுடன் 'ஒரு பொருளாதார அடிமையின் வாக்குமூலம்’ புத்தகத்தில் பதிவு செய்து இருப்பார் ஜான் பெர்கின்ஸ். மத்திய அரசு எடுக்கும் முடிவுகளைப் பார்த்தால், இந்தியாவும் இப்படிச் சிக்கிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது!
சில்லறை வணிகத்தில் 51 சதவிகிதம் அன்னிய முதலீட்டை எதிர்த்து நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு அலைகள். முதல்வர்கள் ஜெயலலிதா, மம்தா பானர்ஜி மட்டும் இன்றி, கேரளாவை ஆளும் காங்கிரஸ் கட்சியும் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் எஃப்.டி.ஐ. சட்டத்துக்கு அகாலிதளம் தவிர கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளுமே எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், பி.ஜே.பி. தலைவர்களில் ஒருவரான டாக்டர் முரளி மனோகர் ஜோஷியை சந்தித்தோம். இவர், நாடாளுமன்றத்தில் எஃப்.டி.ஐ. குறித்த விசாரணை நடத்திய நிலைக் குழுத் தலைவராகவும் இருந்து அறிக்கை கொடுத்தவர்.
''இந்தக் கொள்கையை ஏற்று முதலில் அனுமதி கொடுத்தது பி.ஜே.பி. தலைமையிலான என்.டி.ஏ. ஆட்சி​தானே. இப்போது நீங்களே எதிர்ப்பது ஏன்?''
''நாங்கள் ஒற்றை பிராண்டில் 26 சதவிகிதம் கொடுத்தது உண்மை. ஆனால், அது ஒரு பரிட்சார்த்த ரீதியாகவே கொடுக்கப்பட்டது. அதில் கிடைத்த அனுபவத்துக்குப் பிறகு, இதைத் தொடர வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தோம். சிங்கிள் பிராண்ட் என்று அனுமதி வாங்கிவிட்டு, பின்னர் மல்டி பிராண்ட் வியாபாரங்களை நடத்தினார்கள். அதனால் பொதுமக்களுக்கு எந்தப் பலனும் இல்லை என்பதை அறிந்து, இதில் நேரடி அன்னிய முதலீடு தேவை இல்லை என்று 2009-ம் ஆண்டு வர்த்தகத் துறை சார்பில் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக் குழுவில் அறிக்கை கொடுத்திருக்கிறோம்.''
''இந்த அனுமதி மூலம் பணவீக்கம் கட்டுக்குள் வந்து மந்த நிலையில் இருக்கும் அன்னிய முதலீடு மேலும் அதிகரித்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்று மத்திய அரசு சொல்கிறதே?''    
''அது உண்மை அல்ல. நம்முடைய சந்தை நிலைமையும் வேலை வாய்ப்புகளும்தான் பறிபோகும். உணவு உற்பத்தியுடன், உணவு சாராத மற்ற உற்பத்திகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, நுகர்வோர்கள் துன்பத்துக்கு ஆளாகப்போகிறார்கள். வால்மார்ட், கேர் ஃபோர் போன்ற நிறுவனங்கள் தொடங்கப்பட்ட நாடுகளில், சிறு கடைக்காரர்கள், சிறு சிறு உற்பத்தியாளர்கள், மொத்தமாக நுகர்வோர்கள் மிகக் கடுமையாகவே பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண விவசாயிக்கு இன்றைய தினம் அரசு கொடுக்கும் குறைந்தபட்ச விலையே சரியாகப் போய்ச் சேராத நிலையில், இந்த அன்னிய கம்பெனிகள் என்ன கொடுத்துவிடுவார்கள்?''
''உள்ளூர் உற்பத்தியைத்தான் பயன்படுத்த வேண்டும் என்கிற கட்டாயம் இருப்பது நல்லதுதானே?''
''அதைக் கண்காணிக்க முடியாது, கட்டாயமும் இல்லை. செருப்பு, தொடங்கி ஆடைகள் வரை எங்கு விலை குறைவாக கிடைக்கிறதோ, அந்த நாடுகளில் இருந்து வாங்கிவந்து இங்கே விற்பார்கள். சில்லறை வணிகம் அனுமதிக்கப்பட்டுள்ள பல நாடுகளில் இதுதான் நடக்கிறது. இந்த ஆபத்தான சந்தை நமக்கு தேவை இல்லை. இந்த நேரடி அன்னிய முதலீடு நம்முடைய பழக்கவழக்கங்களை மாற்றும். குறிப்பாக குழந்தைகளின் மனோபாவம் மாறும். அவர்களுடைய உணவு, பழக்க வழக்கங்கள், உடை, அணிகலன்களின் எல்லாம் இந்தப் பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களால் ஆதிக்கம் பெறும். மோகம் அதிகரிக்கும். இதில் எந்தப் பலனும் இல்லை என்பதுதான் உண்மை.''
ந்த சட்டத்துக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் நம்ம ஊர் ஆட்களிடம் பேசினோம்.
வெள்ளையன் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர், 
''மகாத்மா காந்தி ரத்தம் சிந்தி நம் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார். சோனியா காந்தி அதை மீண்டும் அன்னியருக்கே விற்கிறார். அன்னிய முதலீட்டுக்கு ஆதரவாக மத்திய அரசு பல்வேறு நியாயங்களை அடுக்கினாலும், அவர்கள் இங்கே கால் ஊன்றி ஏகபோகம் அடைந்த பிறகு, சிறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகளை கிட்டத்தட்ட தங்களின் அடிமைகள் ஆக்கிவிடுவார்கள்.
சிமென்ட், மணல் விலையில் கொள்ளை அடிப்பதுபோல அன்னிய நிறுவனங்கள் சிண்டிகேட் போட்டு பொருட்களின் விலையை உயர்த்தி விடுவார்கள். ஆன்லைன் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த முடியாததுபோல் அப்போது விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் திராணி நம் தலைவர்களுக்கு இருக்காது. இதற்கு உதாரணம், கோக், பெப்ஸி போன்ற பானங்கள்தான். அவை வளர்ந்ததும், உள்ளூர்க் குளிர் பானங்கள் அனைத்துமே அழிந்துவிட்டன. நம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவி புரிய அன்னிய நிறுவனங்கள் ஒன்றும் சேவை அமைப்புகள் அல்ல. அவர்கள் நம் நாட்டுக்கு கொள்ளை அடிக்கத்தான் வருகிறார்கள். சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு ஆதரவு தெரிவிப்பவன் இந்தியனே அல்ல.''
விக்கிரமராஜா தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர்,
''இந்தியாவில் நேரடியாக சில்லறை வணிகத்தில் இருப்பவர்கள் ஏழு கோடிப் பேர். இவர்களைச் சார்ந்து இருப்பவர்கள் 21 கோடிப் பேர். ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கு சில்லறை வணிகத்தைச் சார்ந்து இருக்கிறது. ஆனால், 40 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்கிறது மத்திய அரசு. எப்படி? 28 கோடி பேரின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு 40 லட்சம் பேருக்கு அன்னியனிடம் அடிமைப்பட்டுக்கிடக்கும் வேலை வாய்ப்பா?
மத்திய அரசு சொல்வதுபோல, அமெரிக்கா, சீனா, இந்தோனேஷியாவில் இந்தத் திட்டம் வெற்றிகரமாக நடக்கவில்லை. அமெரிக்காவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டதற்கு காரணமே இதுபோன்ற பன்னாட்டு நிறுவனங்கள்தான். அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டபோது, இந்தியாவுக்கு மட்டும் பெரிதாகப் பாதிப்பு ஏற்படவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள்... ஒன்று, நம் நாட்டு மக்களின் பணம் நமது தேசிய வங்கிகளில் இருந்தது. இன்னொன்று சில்லறை வணிகத்தில் பல கோடிப் பேர் இருந்ததால் தொழில் நிலைத்தது. எனவே, எக்காரணம்கொண்டும் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது.''
தேசிகன் அறங்காவலர், கன்ஸ்யூமர் கவுன்சில் ஆஃப் இந்தியா,
''உலகம் முழுவதும் பல நாடுகள் திவால் ஆகி வருகின்றன. பொருளாதார வீழ்ச்சிக்கு பன்னாட்டு நிறுவனங்களான வால்மார்ட், டெஸ்கோ போன்ற நிறுவனங்களே காரணம் என்று தெரியவந்துள்ளது. மேற்கு நாடுகள் எல்லாம் சுதாரித்துக்கொண்டு தங்களது முடிவை மாற்றிக்கொள்ள முனைகின்றன. ஆனால், மத்திய அரசோ அன்னிய முதலீடு என்கிற முதலையிடம் மக்கள் தலையை நுழைக்கிறது.
கோயில் வாசலில் பூ வாங்கி வைத்துக்கொள்ளும் நிலைமை மாறி, சூப்பர் மார்க்கெட்டுக்கு போய் அநியாய விலை கொடுத்துப் பூ வாங்கும் நிலை ஏற்படும். அன்னிய நிறுவனங்கள் நம் நாட்டிலேயே பொருளை  உற்பத்தி செய்தால் மட்டுமே, நம் நாட்டுக்கு வருவாய் கிடைக்கும். ஆனால், அவை இங்கே இருக்கும் பொருட்களை அடிமட்ட விலைக்கு வாங்கிப் பதுக்கிவைத்து கொள்ளை லாபத்துக்கு விற்பனை செய்யும். இதனால் நம் நாட்டுக்கு எந்த லாபமும் இல்லை. இது நம்மைப் பகடைக்காய்களாக்கி அன்னிய நிறுவனங்கள் நடத்தும் சூதாட்டத்துக்கே வழி வகுக்கும்.''
சின்னசாமி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர்,
''10 ஏக்கரில் விவசாயம் செய்பவன்கூட சிறு விவசாயிதான். ஏனெனில், உரம், மின்சாரம் உட்பட பல்வேறு பிரச்னைகள் அவனுக்கு இருக்கிறது. அப்படிப் பார்த்தால், தமிழகத்தில் 90 சதவிகிதம் சிறு விவசாயிகள்தான். இனி அன்னிய நிறுவனங்கள் கவர்ச்சிகரமான விளம்பரம் செய்வார்கள்; நல்ல விலை கொடுப்பதாக ஆசை காட்டுவார்கள். அப்படியே நல்ல விலை கொடுக்கவும் செய்வார்கள். இப்படி செய்யும்போது, இதர உள்நாட்டு முதலாளிகள் பராம்பரியத் தொழிலைவிட்டு அழிந்துபோவார்கள். படிப்படியாக மொத்த விவசாயிகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்த பின்பு, அன்னிய நிறுவனங்கள் திடீர் என்று கொள்முதல் விலையைக் குறைத்துவிடுவார்கள். விவசாயிகளுக்கு வேறு வழி இருக்காது. அதனால், அடிமாட்டு விலைக்குத்தான் பொருளை விற்க வேண்டும்.
அடுத்த தாக்குதல் இன்னும் அபாயகரமானது. தாங்கள் கொடுக்கும் விதையைத்தான் நட வேண்டும்; நாங்கள் சொல்லும் பயிரைத்தான் வளர்க்க வேண்டும் என்று மரபணு மாற்றப்பட்ட விதைகளை விவசாயிகளிடம் திணிப்பார்கள். மத்திய அரசின் இந்த முடிவு விவசாயிகளை நடுத்தெருவுக்குத்தான் கொண்டுவரும். இதனால் நாட்டுக்குத்தான் கேடு!''
    - சரோஜ் கண்பத், டி.எல்.சஞ்சீவிகுமார்   

காங்கிரஸிலும் எதிர்ப்பு!

எதிர்க் கட்சித் தலைவரான ஜோஷி மட்டுமல்ல ஆளும் காங்கிரஸ் கட்சியிலும் இதற்கு எதிர்ப்பு வந்துள்ளது. இந்த எஃப்.டி.ஐ-யை அனுமதி அளிக்கும் அமைச்சரவைக் கூட்டத்திலேயே இது எதிரொலித்​தது. சோனியா காந்தியின் ஆதரவாளர் என்று சொல்லப்படும் ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி, ராகுல் காந்திக்கு நெருக்கமான ஜெயராம் ரமேஷ், வீரப்ப மொய்லி, முகில் வாஸ்னிக் போன்ற காங்​கிரஸ் அமைச்சர்களும் தி.மு.க. அமைச்சர் மு.க.அழகிரி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமைச்சர் தினேஷ் திரிவேதி போன்றவர்களும் தங்கள் கட்சி சார்பில் இந்தக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Tuesday, November 29, 2011


ஷாருக்கான் தான் நடித்து தயாரித்த 'ரா.ஒன்' படத்தினை விளம்பரப்படுத்திய விதம் பலரையும் வியக்க வைத்தது. YOUTUBE, GOOGLE, என பல  தளங்களில் தனது படத்தினை விளம்பரப்படுத்தினார்.

தமிழ் திரையுலகினர் பிரம்மாண்டமான படங்களை தயாரிக்கிறார்கள் ஆனால் அந்த அளவிற்கு விளம்பரப்படுத்துகிறார்களா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

'எந்திரன்' படத்தினை தயாரித்த சன் பிக்சர்ஸ் தனது சன் டி.வியின் மூலம் படத்தினை விளம்பரப்படுத்தி லாபம் பார்த்தது. சமீபத்தில் வெளிவந்த ' 7ஆம் அறிவு திரைப்படம் ' இந்த அளவிற்கு வரவேற்பை பெற்று இருக்கிறது என்றால் காரணம் விளம்பரப்படுத்தியதால் தான்.

படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் இணையத்தின் மூலம் படத்தைப் பற்றி அவ்வப்போது சில சுவாரசியாமான தகவல்களை வெளியிட்டு வந்தார். இதன் மூலம் அவரது டிவிட்டர் இணையத்தில் பின் தொடர்கிறவர்கள் படம் பார்க்கும் முன்பே பல்வேறு சுவராசியங்களை தெரிந்து கொண்டதால் அவர்களுக்கு படம் பார்க்கும் ஆர்வம் மேலோங்கியது.

உதயநிதி ஸ்டாலின் நாயகனாக அறிமுகமாகும் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தினை டிசம்பர் மாதம் முதல் விளம்பரப்படுத்த இருக்கிறார்கள். தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் ராஜேஷ், நாயகி ஹன்சிகா என அப்படத்தில் பணிபுரிந்தோர் பலர்  டிவிட்டர் இணையத்தில் இருப்பதால் படத்தின் தகவல்களுக்கு பஞ்சம் இருக்காது.

தனிப்பட்ட நபர்கள் பலர் டிவிட்டர் இணையத்தில் இருக்கிறார்கள் என்றாலும், தற்போது தங்களது படத்தை விளம்பரப்படுத்துவதற்காக பலரும் பட பெயர்களில் டிவிட்டர் கணக்கை துவங்கி இருக்கிறார்கள்.

கடந்த ஒரு வாரமாக உலகம் முழுவதும் "WHY THIS KOLAVERI DI" பாடல் பிரபலமாகி வருகிறது. இதுவரை ஒரு தமிழ் பாடல் செய்யாத அனைத்து சாதனைகளையும் இந்த பாடல் செய்து விட்டது. LADY GAGA-வின் பாடலுடன் 'கொலைவெறி' கடும் போட்டி போட்டு வருகிறது.

இசையமைப்பாளர் அனுருத், பாடல் எழுதி பாடிய தனுஷ், இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ், நாயகி ஸ்ருதிஹாசன் என அனைவருமே இப்பாடலை தங்களது டிவிட்டர் இணையத்தின் மூலம் விளம்பரப்படுத்தியதும் இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

இந்தி சினிமாவிற்கு உலகளாவிய மார்க்கெட், ஆனால் தமிழ் சினிமாவிற்கு அப்படி இல்லை என்று கூறி வருகிறார்கள் சில தமிழ்பட தயாரிப்பாளர்கள். தமிழ் படங்களை இந்தியில் ரீமேக் செய்து வரும் இக்காலகட்டத்தில் நமது படங்களை தொழில்நுட்பத்தின் உதவியோடு முறையாக விளம்பரம் செய்தால், இந்தி படங்களின் மார்கெட்டை எட்டிப் பிடிக்கும் சீக்கிரமே.

தனுஷ் பாட்டு ! : சிம்பு


தனுஷ் எழுதி பாடியுள்ள WHY THIS KOLAVERI DI பாடல் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தனுஷ் எழுதியுள்ள பாடலை சிம்பு ரசிகர்கள் சிலர் தங்களது இணையத்தில் கேலி செய்து வந்தனர்.

இச்செயலை சிம்பு வன்மையாக கண்டித்துள்ளார். இது குறித்து சிம்பு தனது ஃபேஸ்புக் இணையத்தில் " எனது ரசிகர்கள் மற்றும் மீடியா நண்பர்களுக்கு ஒர் வேண்டுகோள். தனுஷ் எழுதி பாடியுள்ள பாடலை எனது பாடலுடன் ஒப்பீடு செய்யாதீர்கள்.

தனுஷ் ஒரு சிறந்த நடிகர் மற்றும் எனது நண்பர். இருவருமே ஒரே துறையில் தான் இருக்கிறோம். யாருக்கும் ஒரு பாடலை எழுதி பாட உரிமையுள்ளது.

சிறு சிறு வார்த்தைகளை சேர்த்து பாடலாக்கி வருவது தற்போது பேஷனாகி உள்ளது. அதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆகையால் பாடலை கேட்டு சந்தோஷப்படுங்கள்.

கேலி செய்த என்னுடைய ரசிகர்கள் மீது கோபமாக இருக்கிறேன். கேலி செய்வதை நிறுத்துங்கள். நான் பாத்துக்குறேன்... ரிலாக்ஸ்! " என்று கூறியுள்ளார்.

இவனுக்குள்ள என்னமோ இருந்திருக்கு பாரேன் !


தனுஷ், ரிச்சா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ' மயக்கம் என்ன '. செல்வராகவன் இயக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருந்தார்.

'மயக்கம் என்ன' படத்தில் இடம்பெறும் 'காதல் என் காதல்', மற்றும்' 3 ' படத்தில் இடம்பெறும் ' WHY THIS KOLAVERI ' ஆகிய இரண்டு பாடல்களுமே தனுஷ் எழுதி பாடி இருக்கிறார்.

இவ்விரண்டு பாடல்கள் குறித்து இயக்குனர் செல்வராகவன் தனது டிவிட்டர் இணையத்தில்  " நிறைய பேர் WHY THIS KOLAVERI பாடல் குறித்து கேட்கிறார்கள். உண்மையை  சொல்ல வேண்டும் என்றால் ' காதல் என் காதல் ' மற்றும் ' KOLAVERI ' ஆகிய இரண்டு பாடல்களுமே தனுஷ் எழுதி கம்போஸ் பண்ணியது  தான்.

ஜி.வி அப்பாடலை இசைக் கலைஞர்களைக் கொண்டு தயார் செய்து கொடுத்தார்.  இதனை நாங்கள் நிறைய பேட்டிகளில் கூறியிருக்கிறோம். பாடலின் வரவேற்பை பார்த்து தனுஷ் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார். அவருக்குள் ஒரு இசையமைப்பாளர் இருக்கிறார் என்று நினைக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

ACTION ' ஆரம்பம் ! : 'தாண்டவம்' விஜய்


விக்ரம், அனுஷ்கா, ஏமி ஜாக்சன், சந்தானம், நாசர் மற்றும் பலர் நடிக்க இருக்கும் படம் 'தாண்டவம்'. 'தெய்வத்திருமகள்' படத்தினை தொடர்ந்து இயக்குனர் விஜய் - விக்ரம் கூட்டணி மீண்டும் இப்படத்தில் இணைகிறது. யு.டிவி நிறுவனம் இப்படத்தினை தயாரிக்க முன்வந்துள்ளது.

இப்படத்தின் முக்கிய பாத்திரத்தில் நடிக்க ஒப்ப்ந்தம் செய்யப்பட்டு இருக்கிறார் ஜகபதி பாபு.  விக்ரமிற்கு இணையான வேடத்தில் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

நடிகர் சிவாஜி கணேசனை வைத்து பல படங்களை தயாரித்த வி.பி.பிரசாத்தின் மகன் ஜகபதி பாபு. தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் இவர் தற்போது தான் தனது 100வது படத்தில் நடித்து முடித்துள்ளார்.

நவம்பர் 30ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்குகிறது. நா.முத்துகுமார் பாடல்கள் , ஜி.வி.பிரகாஷ் இசை, நிரவ்ஷா ஒளிப்பதிவு, ஆண்டனி எடிட்டிங் என இயக்குனர் விஜய்யின் டீம் மொத்தமும் இப்படத்திலும் இணைகிறது.

இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்க இருக்கிறார் விஜய்.

கிரீடம், பொய் சொல்லப் போறோம், மதராசபட்டினம் ஆகிய படங்களில் சண்டைக் காட்சிகள் பெரிய அளவில் இல்லை. இந்த  'தாண்டவம்' விஜய் இயக்கத்தில் உருவாகும் முழு நீள ஆக்ஷன் படம்.

Monday, November 28, 2011

கூகுளின் எந்திரன் - டிரைவர் இல்லாத கார்!


டிரைவர் இல்லாத கார்!
விபத்தே இல்லாமல், விடுப்பு எடுக்காமல், ஏன்... சம்பளமே இல்லாமல் உங்கள் காரை ஓட்ட டிரைவர் கிடைத்தால்...? 
இதோ, கூகுள் இணைய தேடுபொறி நிறுவனம், உங்கள் உதவிக்கு வந்துவிட்டது. இது, டொயோட்டா நிறுவனத்தின் ப்ரையஸ் காரில், பல மாற்றங்கள் செய்து இந்த தானியங்கி காரை உருவாக்கியுள்ளது.
இந்த காரின் நாற்புறமும் கேமராக்களும், ரேடார்களும், சென்ஸார்களும் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் சாலையின் போக்குவரத்தை இந்த காரால் கவனிக்க முடியும். காரில் உள்ள அதி நவீன கம்ப்யூட்டர், சாலையில் உள்ள வாகனங்களின் திசை, வேகம் போன்றவற்றைக் கணித்து கூகுள் மேப், ஜிபிஎஸ் தொழில்நுட்பம் போன்றவற்றின் உதவியால் கவனமாக காரை ஓட்டிச் செல்கிறது. இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மழை, வெயில் என எல்லா கால நிலைகளிலும் தெளிவான படங்களை எடுத்து கம்ப்யூட்டருக்கு அனுப்பும். 'லேசர் ரேஞ்ச் ஃபைன்டர்’ எனும் சாதனம் சாலையில் முன்னும் பின்னும் வரும் வாகனங்களின் தூரத்தைத் துல்லியமாகக் கணக்கிட்டு, கம்ப்யூட்டருக்குக் கட்டளைகள் தர... அது தேவையான இடங்களில் பிரேக்கை உபயோகித்து காரை நிறுத்தச் செய்கிறது. இதை ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்தில் ஒரு மைல் கல் என்று சிலாகிக்கின்றன ஊடகங்கள்.
டிரைவரே இல்லாத இந்த கார், இப்போது அமெரிக்கச் சாலைகளில் சோதனை ஓட்டத்தில் இருக்கிறது. இதுவரை 1,60,000 கி.மீ தூரம் வரை எந்தவிதச் சிக்கலோ, விபத்தோ இன்றி பயணித்திருக்கும் இந்த கார் பாதுகாப்பானதே என்று சான்றளிக்கிறார்கள் ஆட்டோமொபைல் வல்லுனர்கள். முழுமையடையாத தொழில்நுட்பம், தானியங்கி ஓட்டுனரால் விளையும் சட்டச் சிக்கல்கள் மற்றும் பாதுகாப்பு குறித்த அச்சங்கள் போன்ற சில பிரச்னைகள் இருந்த போதும், இந்தத் தொழில்நுட்பம் சாலைப் போக்குவரத்தில் ஒரு புரட்சியை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.
அமெரிக்காவின் பளிங்குச் சாலைகளை விபத்தில்லாமல் தாண்டிய கூகுளின் எந்திரனுக்கு, சிங்காரச் சென்னையின் மழைக் காலச் சாலைகளில்தான் காத்திருக்கிறது நிஜமான சவால்!

சூர்யாவின் மனதை திருடிய மான்ஸ்டர்!


மிழ் சினிமாவின் மிஸ்டர் பர்ஃபெக்ட், சூர்யா. 'நேருக்கு நேர்’ படத்தில் அப்பாவி இளைஞனாக அறிமுகமான சூர்யா, இன்று உலக நாயகனின் வாரிசாக உயர்ந்து நிற்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக சூர்யா நடித்து வெளிவந்த அத்தனை படங்களும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்!
 'ஏழாம் அறிவு’ மட்டும் அல்ல... ஆட்டோமொபைல் அறிவும் சூர்யாவுக்கு அதிகம். கார், பைக் வெறியன். மார்க்கெட்டுக்கு எந்த கார், பைக் புதிதாக வந்தாலும், அதனைப் பற்றிய 'அப்-டு-டேட்’ விவரங்கள் அத்தனையும் சூர்யாவின் மெமரிக்குள் ஸ்டோர் ஆகிவிடும். இப்போது லேட்டஸ்ட்டாக டுகாட்டி மான்ஸ்டர் பைக்கை வாங்கியிருக்கிறார் சூர்யா. 'ஏழாம் அறிவு’ ரிலீஸ் பரபரப்புக்கு இடையிலும், தனது புதிய டுகாட்டி பைக் பற்றிக் கேட்ட உடனே பைக் காதலனாக மாறிவிட்டார் சூர்யா.
''நீங்கள் ஓட்டக் கற்றுக் கொண்ட பைக் எது?''
''எனக்கு பைக் ஓட்டச் சொல்லிக் கொடுத்தவர் என்னுடைய மாமா. எங்களுடைய கோயம்புத்தூர் கிராமத்தில், அவரது யெஸ்டி பைக்கில்தான் பைக் ஓட்டப் பழகினேன். எனக்கு மிகவும் பிடித்த பைக் அது. அந்த பைக்கின் சத்தத்துக்கு நான் ரசிகன்!''
''உங்களுடைய முதல் பைக்?''
''கல்லூரி நாட்களில் யமஹா ஆர்.எக்ஸ்-100 பைக்கில் சென்னையைச் சுற்றி வந்தேன். பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் அதிக மார்க் எடுத்ததற்காக, என்னுடைய தம்பி கார்த்திக்குக் கிடைத்த கிஃப்ட் அது. நான் சம்பாதித்து வாங்கிய முதல் பைக் டிவிஎஸ் ஸ்டார். அடுத்து, டிவிஎஸ் அப்பாச்சி பைக் வாங்கினேன். இந்த இரண்டையும் என்னிடம் பணிபுரியும் நண்பர்களுக்கு அலுவலக வேலைகளைப் பார்ப்பதற்காகக் கொடுத்திருக்கிறேன்.''
''டுகாட்டி மான்ஸ்ட்டர் பைக்கை வாங்கியதும் முதல் ரவுண்டு எங்கே போனீர்கள்?''
''நான், ஜோ, தியா, தேவ் ஆகிய நாலு பேரும், இப்போது பெசன்ட் நகரில் எங்களுடைய புதிய வீட்டில் இருக்கிறோம். பீச் ரொம்ப பக்கம் என்பதால், வீட்டுக்கு பைக் வந்தவுடன் பெசன்ட் நகர் கடற்கரைச் சாலையில்தான் முதல் ரவுண்ட்!''
''எதற்காக டுகாட்டி மான்ஸ்ட்டர் பைக்கைத் தேர்ந்தெடுத்தீர்கள்?''
''எனக்கு எப்போதுமே ரேஸ் டிராக்கில் ஓட்டுவதுபோல ரொம்பவும் குனிந்துகொண்டு பைக் ஓட்டுவது பிடிக்காது. மகள் மற்றும் மனைவியோடு அடிக்கடி பைக்கில் ஒரு ரவுண்டு அடிக்கணும். அதேசமயம், பைக் ரொம்பவும் வெயிட்டாகவும் இருக்கக் கூடாது; என் உயரத்துக்கு ஏற்ற சரியான பைக்காகவும் இருக்கணும். டீலரும் இந்தியாவில் இருக்கணும்னு என்னுடைய தேவைகள் அனைத்துக்கும் டுகாட்டி மான்ஸ்ட்டர்தான் சரியான சாய்ஸாக இருந்தது. உடனே வாங்கி விட்டேன்.''
''இந்த பைக்கில் உங்களுக்குப் பிடிக்காத சில விஷயங்களும் இருக்கும்தானே?''
''ஜோ கிட்ட கேட்டீங்கன்னா... அவங்க ஒரு பெரிய லிஸ்ட்டே கொடுப்பாங்க! முதல் விஷயம், பில்லியனில் உட்கார்ந்து பயணிப்பது வசதியாக இல்லை. இதில் ஏர் கூலன்ட் மட்டுமே இருப்பதால், இன்ஜின் சூடு சீட்டுக்கு சீக்கிரத்தில் வந்து விடுகிறது. அதனால், நீண்ட நேரம் உட்கார்ந்து பயணிக்க முடியவில்லை. அதோடு நம்மூரின் குண்டும், குழியுமான சாலைகளைத் தாங்கும் அளவுக்கு சஸ்பென்ஷன் சிறப்பாக இல்லை!''
''உங்களோட டாப் ஸ்பீடு எவ்வளவு? உங்களுக்கு பைக் ஓட்டப் பிடித்த சாலை எது?''
''கிழக்குக் கடற்கரைச் சாலைதான் என்னுடைய ஃபேவரிட். பைக் ரைடை என்ஜாய் பண்ணுவேனே தவிர, ஸ்பீடாக ஓட்ட மாட்டேன்!''
''உண்மையைச் சொல்லுங்க. பைக்கோடு போகும்போது பெண்கள் உங்களைப் பார்க்கிறார்களா... அல்லது பைக்கையா?''
''ஹா... ஹா... மான்ஸ்ட்டர்னு பெயருக்கு ஏற்ற மாதிரி பைக் மிரட்டலா இருக்கும்போது, பைக்கைத்தானே எல்லோரும் பார்ப்பாங்க. முதல் பார்வையிலேயே மயக்கிவிடும் முரடன் இந்த பைக். நம்ம பாஷையில் சொல்லப் போனா... செம்ம கட்ட! ஆனா, பைக் ஓட்டும்போது ஹெல்மெட் எப்போதும் என் தலையில் இருக்கும். அதனால, பைக்கை யார் ஓட்டுறாங்கன்னு வெளியே தெரியாது. ஸோ.. இந்தக் கேள்விக்கு பதில் தெரியாது!''
''உலகின் கடைசி லிட்டர் பெட்ரோல் உங்களிடம் இருக்கிறது. என்ன செய்வீர்கள்?''
''என் மகன் பெரியவனாக வளர்ந்து, பைக் ஓட்டும் வரை, அந்த கடைசி லிட்டர் பெட்ரோலை அப்படியே சேமித்து வைத்திருப்பேன்!''
''உங்களுடைய அடுத்த பைக்?''
''தேடல் தொடர்ந்துகொண்டு இருக்கிறது. இதைவிட இன்னும் வசதியான, சொகுசான, ஸ்டைலான நிச்சயம் லிக்விட் கூலன்ட் இன்ஜின் கொண்ட பைக்கைத்தான் வாங்குவேன்'' என்று சொல்லிவிட்டு மான்ஸ்ட்டரை ஸ்டார்ட் செய்தார் சூர்யா.
பெசன்ட் நகரில் இப்போது இரண்டு அழகன்கள்!

'எதைக் குறைத்தால் எடை குறையும் ?'


அடடே' அறுவை சிகிச்சைகள்

''மூக்கு, உதடு, காது என அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்வது போல், உடலையும் 'ஸ்லிம் பியூட்டி’யாக மாற்றிக்கொள்ள இன்றைய பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதனால், உடல் எடையைப் பாதியாகக் குறைத்து, அழகான உடலமைப்பை உருவாக்கக்கூடிய அறுவை சிகிச்சைகளுக்கு பெண்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது!'' என்கிறார் 'லைஃப் லைன் மருத்துவமனை’யின் நிர்வாக இயக்குநரும் சீஃப் டாக்டருமான ராஜ்குமார்.
''உடல் எடை ஒரே நாளில் அதிகரித்து விடுவதில்லை. அதேபோல்... ஒரே நாளில் குறைத்துவிடவும் முடியாது. இன்றைய அவசர யுகத்தில் துரித உணவுகளே தினப்படி உணவுகளாக மாறிவிட்டன. அளவுக்கு அதிகமான உணவு, உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய எண்ணெய் - மசாலா பொருட்கள் இவற்றால் உடம்பில் அதிகப்படியான கொழுப்பு சேர்கிறது. போதிய உடற்பயிற்சி இல்லாமல் போகும்போது, உடல் பெருத்து, வயதுக்கு மீறிய தோற்றம் தெரிகிறது. இதய நோய், நீரிழிவு, கேன்சர் மற்றும் ஹார்மோன் பிரச்னைகளுக்கும் ஆளாக நேரிடுகிறது.

ஒவ்வொருவரின் உயர‌த்‌துக்கும் ஏற்ற எடையைக் கணக்கிட பிஎம்ஐ (BMI-Body Mass Index)அ‌ட்டவணை உள்ளது. இந்த அளவீட்டைத் தாண்டி ஒருவர் 30 ‌கிலோ அ‌திக உடல் எடையுடன் இரு‌ந்தா‌ல், அவருடைய ஆயு‌ளி‌ல் 10 ஆ‌ண்டுகள் வரை குறையும் என்கிறது மருத்துவ ஆய்வு!
இப்படி உடல் எடையால் பாதிக்கப்படுபவர்கள், பழையபடி நடமாடவே, உடல் எடையைக் குறைப்பதற்கான அறுவை சிகிச்சைகள் பயன்படுகின்றன. இதில்... ஸ்லீவ் கேஸ்ட்ரெக்டமி,  கேஸ்ட்ரிக் பைபாஸ், கேஸ்ட்ரிக் பேண்டிங் மற்றும் லிபோசக்ஷன் ஆகிய சிகிச்சைகள் உள்ளன'' என்ற டாக்டர், ஒவ்வொன்றையும் பற்றி விவரித்தார்...
ஸ்லீவ் கேஸ்ட்ரெக்டமி (Sleeve gastrectomy)
இரைப்பையின் அளவைக் குறைப்பதற்கான அறுவை சிகிச்சை இது. இரைப்பையின் அளவை 75 சதவிகிதம் சுருக்கிவிடுவோம். பசியைத் தூண்டும் ஹார்மோனும் அகற்றப்பட்டுவிடும். இதனால், இரண்டு தோசை சாப்பிட்டால்கூட ஐந்து தோசைகள் சாப்பிட்டது போன்ற உணர்வு ஏற்படும். இந்தசிகிச்சை முறையினால், சாப்பிடும் உணவு அளவுதான் குறையுமே தவிர, உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை கிரகித்துக்கொள்வதில் எந்தக் குறைவும் இருக்காது. தனியாக ஊட்டச்சத்து மாத்திரைகள் சாப்பிடத் தேவையில்லை.
முன்பு ஓபன் சர்ஜரியாக செய்யப்பட்ட இந்த சிகிச்சை, முறை இப்போது லாப்ராஸ்கோப்பி மூலமாக செய்யப்படுகிறது. இதனால் தழும்புகூடத் தெரியாது. அறுவை சிகிச்சையும் 45 நிமிடத்தில் முடிந்துவிடும். 110 கிலோ எடையுள்ள ஒருவர், 60 கிலோவாக குறைந்துவிடுவார். இந்த அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களில் அரிதாக சிலருக்கு மட்டுமே திரும்பவும் எடைகூட வாய்ப்பு இருக்கிறது என்பதால், எந்த பயமும் தேவையில்லை.
கேஸ்ட்ரிக் பை-பாஸ் (Gastric by-pass)
  இதில், சிறுகுடலின் அமைப்பைக் கொஞ்சம் மாற்றி அமைக்கிறோம். 2,000 கலோரிகளைக் கொடுக்கக்கூடிய உணவைச் சாப்பிட்டாலும்கூட வெறும் 400 கலோரிகளை மட்டுமே உடம்பு எடுத்துக் கொள்ளும். ஆறு நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து இந்த சிகிச்சையைப் பெறவேண்டும். வாழ்நாள் முழுவதும் ஊட்டச்சத்து மாத்திரைகள் சாப்பிட வேண்டும்.
கேஸ்ட்ரிக் பேண்டிங் (Gastric banding)
பிஎம்ஐ (BMI) அளவானது 45-க்கு கீழ் இருப்பவர்கள் கேஸ்ட்ரிக் பேண்ட்டிங் சர்ஜரி செய்து கொள்ளலாம். இரைப்பையின் அளவைக் குறைக்கும் வகையில், ஒரு பேண்ட் போடப்படும். இரண்டு நாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டும். அதைத் தொடர்ந்து இரண்டு வாரம் வீட்டில், ஓய்வு எடுத்த பிறகு, மீண்டும் பேண்ட் அட்ஜஸ்ட் செய்வதற்காக மருத்துவமனை வரவேண்டியிருக்கும். இதன் மூலம் 50% எடையைக் குறைத்து விடலாம்.
லிபோசக்ஷன் (Liposuction)
உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை அகற்றுவது லிபோசக்ஷன். கை, கால், தொடை, இடுப்பு, வயிறு என பல்வேறு இடங்களில், தோலின் அடியில் உள்ள கொழுப்பை லேசர் கதிர்கள் மூலம் உறிஞ்சி எடுக்கும் முறைதான் இது. 10 நாட்கள் சிகிச்சை அளிக்கப்படும். விரைவில் சகஜ நிலைக்கு திரும்பிவிடலாம். ஆறில் இருந்து எட்டு கிலோ வரை உடல் எடையைக் குறைத்துவிடலாம்!''

அன்னைக்காக ஓர் ஆலயம் !


பெற்றோரை சுமையாகக் கருதி, முதியோர் இல்லத்துக்கு அனுப்பிக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டிருக் கும் இக்காலத்தில், 'தன் தாய்க்கு பிரமாண்ட கோயில் கட்டி வருகிறார் ஒரு மகன்' என்கிற செய்தி... உச்சகட்ட ஆச்சர்யமான விஷயமாகத்தானே இருக்கும்!
திருச்சி மாவட்டம், துறையூரில் 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், தன் தாய் தனபாக்கியம் அம்மாளுக்காக, சுரேஷ்குமார் கட்டி வரும் கோயில், நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. கல் வேலைப்பாடுகளுடன் கூடிய மண்டபத்தில், புன்னகையுடன் ஆளுயர வெண்கலச் சிலையாக காட்சி தரும் தனபாக்கியம் அம்மாள் அருகில், பாசம் படர்ந்த நெஞ்சத்துடன் நம்மிடம் பேச ஆரம்பித்தார் சுரேஷ்குமார்.
''எல்லாரும், 'விநோதமா இருக்கே... அம்மாவுக்கு கோயில் கட்டும் அளவுக்கு அவர் மீது அப்படி என்ன பாசம்?’னு கேட்கறாங்க. இந்தக் கேள்விதான் எனக்கு விநோதமா இருக்கு. நமக்கு உயிர் கொடுத்த அம்மாவோட தாய்மைக்கு ஈடா, எந்த மகனாலும் எதுவும் திருப்பிக் கொடுத்துட முடியாது. அப்படியிருக்க, 'அப்படி என்ன பாசம்?'னு ஒரு கேள்வி எங்கே இருந்து வருதுனே தெரியல?'' என்று 'நச்’சென்று கேட்டவர், தொடர்ந்தார்...
''என் பாசத்தை, மகிழ்ச்சியை, நன்றியை வெளிப்படுத்த, ஒரு சிறு சந்தர்ப்பமா, எங்க அம்மாவுக்காக இந்தக் கோயிலைக் கட்டுறேன். நமக்கு எல்லாம் ஒரு சாவிக் கொத்தை சில மணி நேரம் கையில் வெச்சுருந்தாலே அது பெரும் சுமையா இருக்கு. ஆனா, பத்து மாசம் வயித்துல சுமந்ததோட, 'என் பையன் நல்லா படிக்கணும்’, 'என் பையனுக்கு நல்ல வேலை கிடைக்கணும்’, 'என் பையனுக்கு நல்ல குழந்தைங்க பிறக்கணும்’னு தான் வாழுற வரைக்கும் பாசமா, பிரார்த்தனைகளா, சந்தோஷமா, கண்ணீரா தானே... நாம ஒவ்வொருத்தரையும் அம்மாக்கள் சுமக்கறாங்க... வளர்க்கறாங்க... அத்தனை அம்மாக்களுக்கும் என்னோட பாதகாணிக்கைதான் இந்தக் கோயில்!''
- கண்கள் கலங்கித் தெளிகின்றன சுரேஷ்குமாருக்கு.
''என் அம்மா... எந்தச் சந்தர்ப்பத்திலும் மத்தவங்களோட உதவியை எதிர்பார்க்கக் கூடாதுனு வாழ்ந்த வைராக்கியக்காரி. 2007-ம் வருஷம் ஹார்ட் பிரச்னையால இறந்தாங்க. அதுக்கு முதல் நாள் வரை தன் வேலைகளைத் தானே செஞ்சுட்டுதான் இருந்தாங்க. அவங்க நினைவுகள்தான் எப்பவும் என்னைத் தாலாட்டிட்டே இருக்குது. இன்னிக்கு நிறைவா சம்பாதிக்கற நான்... சொகுசா ஏ.சி. கார்ல போகும்போதும், குஷன் சோபாவுல சரியும்போதும், 'நீ என்னைப் பத்திரமா சுமந்து பிரசவிக்கலைனா, மழைக்கும், வெயிலுக்கும் என்னைக் காப்பாத்தி வளர்க்கலைனா... இன்னிக்கு இதெல்லாம் எனக்கு கிடைச்சிருக்குமா அம்மா..?’னு தன்னால கண்ணீர் கசியும்.
அப்படிப்பட்ட அம்மாவுக்காக ஏதாச்சும் செய்யணும்னு மனசு தவிச்ச தவிப்புதான், மூணாவது வருஷ நினைவு தினத்துல கோயிலுக்கு அடிக்கல் நாட்ட வெச்சது. அடுத்த வருஷம் பிப்ரவரி ஒண்ணாம் தேதி, ஐந்தாம் வருஷ நினைவு நாள். அன்னிக்கு கோயிலைத் திறக்க திட்டமிட்டு இருக்கேன்!'' என்று உணர்வும், நெகிழ்வுமாகப் பேசினார் சுரேஷ்குமார். தனபாக்கியம் - சிதம்பரம் தம்பதிக்கு நான்கு ஆண்கள், ஒரு பெண் என ஐந்து பிள்ளைகள். நான்காவது பிள்ளைதான் இந்த சுரேஷ்குமார்.
வெண்கலச் சிலை இருக்கும் மண்டபத்துக்கு கீழே, பாதாள அறையில் தண்ணீர் நிரப்பி, மீன்கள் விடப்படவிருக்கின்றன. உயிரோட்டமான ஓர் இடத்தில் சிலை இருக்க வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு! தனபாக்கியம் இறந்தபோது 64 வயது என்பதை நினைவூட்டும் வகையில் 64 அடி உயரத்தில் நினைவுத் தூண். அதன் உச்சியில், தாய் தன் குழந்தைக்கு பாலூட்டுவது போன்ற சிலை. இடது பக்கத்தில் தியான மண்டபம். நவதானியம், கூழாங்கல், முக்கடல் சங்கமிக்கும் இடத்து மண்... இப்படி 64 விதங்களில் வரையப்பட்ட தனபாக்கியம் அம்மாளின் ஓவியங்கள் என அசத்தலாக இருக்கிறது கோயில். தோசைக்கல்லில் கூட ஓர் ஓவியம். ''இது அம்மா பயன்படுத்தின தோசைக்கல்'' என்று அதற்கும் சென்டிமென்ட் டச் தரும் சுரேஷ்குமார்,
''தனபாக்கியம் அம்மாள் நினைவு துறையூர் நந்த வனம்னு பெயர் சூட்டி இருக்கேன். இந்தக் கோயில் என் ஊர் மக்களுக்கும் பயன்படணுங்கறதுல அக்கறையா இருக்கேன். ஆயிரத்துக்கும் மேலானவங்க கலந்துக்கற நிகழ்ச்சிகள் நடத்துற அளவுக்கு அரங்கத்தையும் அமைச்சிருக்கேன். இந்த இடத்தை இலவசமா கொடுக்கற யோசனை இருக்கு. குறிப்பா, அந்திமக் காலத்தில் இருக்கறவங்க கொண்டாடுற அறுபதாம் கல்யாணம், எண்பதாம் கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளுக்காக.''
- முதியவர்களின் மீது அவருக்கு இருக்கும் அக்கறை வெளிப்படுகிறது.
''என் மாமியாருக்கு தனி ஈர்ப்பு சக்தி உண்டு. ஒருமுறை இந்தக் கோயிலுக்கு வந்தாலே, அப்புறம் இந்தப் பக்கம் போகும்போதெல்லாம் அத்தையைப் பார்க்காமப் போக மாட்டீங்க!'' என்று மாமியாரை மெச்சும் மருமகளாக சொல்கிறார் சுரேஷ்குமாரின் மனைவி சாவித்திரி. இந்தத் தம்பதிக்கு... கிஷோர் சஞ்சய், ஸ்ரீயா என்று இரண்டு குழந்தைகள்.
''இந்தக் கோயிலைப் பார்த்துட்டு, அண்ணன், தம்பிங்க எல்லாரும் அடிச்சுக்கணும்... 'அம்மாவை நான்தான் பார்த்துப்பேன்'னு உரிமை கொண்டாடி! முதியோர் இல்லங்களை எல்லாம் இழுத்து மூடணும். தாயைவிட சிறந்த கோயில் இல்லைங்கிறத எல்லாரும் உணரணும்!''
- அன்பும், ஆக்ரோஷமுமாக சொல்கிறார் ரியல் எஸ்டேட் அதிபரான சுரேஷ்குமார்!

உலகையே ஈர்க்கும் 'இங்க்'லேடி !


பக்கத்து வீட்டுப் பெண்போல் எளிமையாக, சிநேகத்தோடு, நம்மை வரவேற்கிறார் லஷ்மி ப்ரதுரி. ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட 2010-ம் ஆண்டின் உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்மணிகள் பட்டியலில் இடம்பிடித்த பவர்ஃபுல் லேடி!
இந்தியாவின் மிக முக்கியமான ஹோஸ்ட்களில் ஒருவர், உலகளவில், கார்ப்பரேட் கான்ஃபரன்ஸ் அரங்கில் அசைக்க முடியாத ஜாம்பவனாக கருதப்படும் 'டெட் கான்ஃபரன்ஸ்’ எனும் அமைப்புடன் இணைந்து, இந்தியாவில் புதிய சாதனையாளர்களை அறிமுகப்படுத்தும் 'தி இங்க் கான்ஃபரன்ஸ்’  அமைப்பின் தலைவர், பத்திரிகையாளர், எழுத்தாளர், பெண்ணிய சிந்தனையாளர், நாடகக் கலைஞர், சமூக சேவகி... இன்னும் இன்னும் நீளும் லஷ்மி ப்ரதுரியின் பன்முகங்கள்தான், பவர்ஃபுல் லேடியாக இவரை உயர்த்தியிருக்கிறது!
பெங்களூரு, இந்திரா நகரில் உள்ள வீட்டில், ஆவி பறக்கும் காபி உபசரிப்போடு ஆரம்பித்தார் லஷ்மி... ''பிறந்தது சென்னையில்தான். அப்பா திருமலை ராவ், பத்மபூஷண் அவார்ட் வாங்கிய சுதந்திர போராட்ட வீரர், டாக்டர். நான் பிறந்ததும் எங்கம்மா இறந்துட, பாட்டிதான் வளர்த்தாங்க.
ஸ்கூல், காலேஜ் எல்லாம் ஹைதராபாத்துலதான். பி.எஸ்சி. மேத்ஸ்ல 95% மார்க் வாங்கினதால், மும்பை ஐ.ஐ.டி-யில ஸீட் கிடைச்சுது. அங்கேயும் நல்ல பர்சன்டேஜ் வாங்க, பஜாஜ் இன்ஸ்டிடியூட்ல எம்.பி.ஏ. சான்ஸ். 'இரண்டாவதா ஃபைனான்ஸ் சப்ஜெக்ட்ல ஒரு எம்.பி.ஏ. படிக்க, அமெரிக்காவுல இருக்கற போர்ட்லாந்து யூனிவர்சிட்டிக்கு போகட்டுமா?'னு அப்பாகிட்ட பெர்மிஷன் கேட்டு நின்னேன். அது... 1983. அப்பல்லாம் மிடில் கிளாஸ் பொண்ணு, தனியா வெளிநாட்டுக்குப் போறது, கிட்டத்தட்ட நிலவுக்குப் போற மாதிரிதான். ஆனாலும் என் விருப்பப்படியே அனுப்பி வெச்சார் அப்பா. இன்னிக்கு நான் அடைஞ்சுருக்கிற எல்லா வெற்றிகளுக்கும் காரணம்... ஒரு தோழனா இருந்து என்னை உற்சாகப்படுத்தின அப்பாதான்!'' என்ற லஷ்மிக்கு, போர்ட்லாந்தில்தான் அவருக்கான வாசல்களும், வெளிச்சங்களும் கிடைத்திருக்கின்றன.
''தன்னம்பிக்கை, நுனிநாக்கு ஆங்கிலம், எதிலும் வேகமாக செயல்படும் ஆற்றல், நெகட்டிவ் சிந்தனைகளை பாசிட்டிவா மாற்றும் மனசு, எழுத்து, பேச்சு, கலை, நாடகம்னு எல்லா திசைகளிலும் என்னை மாஸ்டராக்கியது... போர்ட்லாந்துதான்.
அந்த யுனிவர்சிட்டியில் நான் ஒருத்தி மட்டும்தான் இந்தியன். எல்லா கல்லூரி விழாக்களுக்கும் புடவையில்தான் போவேன். 'பிரவுனிஷ் வுமன்’னு ஒதுக்காம, என் திறமையையும் நம்ம கலாசாரத்தையும் அவங்க கொண்டாடி ஊக்குவிச்சதோட விளைவுதான் என் வளர்ச்சி!
அங்க நாடகம்ங்கறது... பொழுதுபோக்கு வரிசையில இல்லை; நாட்டையே புரட்டிப்போடும் மீடியம். வலி நிறைந்த கறுப்பின மக்களோட சரித்திர நாடகங்களை ஒரு பார்வையாளரா இருந்து பார்த்த எனக்குள்ளயும் அந்தக் கலை இறங்க, நானும் நாடகக் குழுவில் சேர்ந்தேன். சமூகத்தில் புறந்தள்ளப்பட்ட திருநங்கைகளோட உரிமையைப் பேசின நவீன நாடகமான 'கலர் கேர்ள்ஸ்’தான், என்னோட முதல் நாடகம். அதில் எனக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்க, தொடர்ந்து சமூகப் பிரச்னைகளை மேடையேற்றினேன்'' என்றவர், படிப்பிலும் அசத்தியிருக்கிறார்.
''92% மார்க் எடுத்து, அமெரிக்காவில் 'இன்டெல்’ கம்பெனியில் மார்க்கெட்டிங் மேனேஜரா வேலையில் சேந்தேன். இந்தியாவைப் பத்தி பேச்சு வரும்போது எல்லாம், 'அது ஏழை நாடு, அழுக்கா இருக்கும், நிறைய சேரிகள் இருக்கும்’னு பேசற அமெரிக்கர்கள்கிட்ட, 'அது தவறான எண்ணம்... அது திறமைசாலிகளின் நாடு, கலாசார, பண்பாட்டுச் சிறப்புள்ள நாடு’னு மறுத்துப் பேசுற என்னை யாரும் காது கொடுத்துக் கேட்க மாட்டாங்க. என் பன்முகத் திறமையை, இந்தியாவோட சிறப்பை அமெரிக்காவில் உரக்கச் சொல்றதுக்காக பயன்படுத்தினேன். அமெரிக்க கவர்மென்ட் ரேடியோவில், இந்தியா பத்தி பேசுறது, முதன்மைப் பத்திரிகைகளில் இந்தியா பத்தி எழுதுறது, அமெரிக்கா வர்ற இந்திய பிரபலங்களை பேட்டி எடுக்கறனு... இந்தியா குறித்த மேலான சிந்தனைகளை கொஞ்சம் கொஞ்சமா அந்த நாட்டுல விதைச்சேன்'' என்றவருக்கு, அதன் தொடர்ச்சியாக... விளம்பரம், கம்யூனிகேஷன், ஹெ.ஆர். என 'இன்டெல்’ கம்பெனியின் பல பொறுப்புகளும் கைக்கு வந்து சேர்ந்திருக்கிறது. இடையில், மனைவி என்கிற புரமோஷனும் கிடைத்திருக்கிறது.
''கணவர் ரஜத் ரக்கிட், அமெரிக்க வாழ் பெங்காலிக்காரர். காதல் கல்யாணம்தான். எங்கப்பா இறந்ததும், அவரோட இழப்பைத் தாங்க முடியாம, ஆறுதலுக்காக இந்தியா வந்துட்டேன். எட்டு வயசு மகனோட நான் இங்க தங்கிட, கணவர் மட்டும் அமெரிக்காவுலயே இருக்கார். அடிக்கடி போய் பார்த்துட்டு வர்ற அதே கையோட, அமெரிக்காவுல எனக்கு இருக்கிற வேலைகளையும் முடிச்சுட்டு வந்துடுவேன்'' என்றவர், சமூக சேவையிலும் அக்கறை காட்டுகிறார். இங்கே... அமெரிக்கா உதவித்தொகை மூலம் கிராமப்புற ஏழைக் குழந்தைகள் மற்றும் டீச்சர்களுக்கு கம்ப்யூட்டர் கல்வி கொடுத்திருப்பதோடு... ஒரு லட்சம் பள்ளிகளுக்கு கம்ப்யூட்டரும்  கொடுத்திருக்கிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 30 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு இப்படி உதவியிருக்கிறார்.
தனது 'தி இங்க் கான்ஃபரன்ஸ்’ பற்றிப் பேச ஆரம்பித்ததும், இன்னும் பெருமை வந்தமர்கிறது லஷ்மி முகத்தில்.
''டெட் (TED -Technology Entertainment and Design) என்பது, யு.எஸ் மற்றும் யு.கே-வில் மட்டும் பரவலான தலைப்புகளில் கார்ப்ரேட் கருத்தரங்குகளை நடத்துகிற புகழ்பெற்ற தொண்டு அமைப்பு. அந்தக் கருத்தரங்குகளில் கலந்துகிட்ட 'பிரசன்ட்டர்ஸ்’ பட்டியல், பில் க்ளின்டன், பில் கேட்ஸில் இருந்து நோபல் பரிசு பெற்றவர்கள் வரை நீளும். அந்தளவுக்கு அறிவில், பேச்சாற்றலில் செறிவானவர்கள் ஏறும் மேடை அது.
நம் நாட்டிலும் இப்படி பிரமாண்ட, தரமான கருத்தரங்குகள் நடத்தணும்ங்கிற ஆர்வ மிகுதியில், 'இந்தியாவிலும் கான்ஃபரன்ஸ் நடத்துங்க'னு ஒவ்வொரு வருஷமும் அந்த அமைப்பினர்கள்கிட்ட கேட்பேன். இளக்காரமா சிரிச்சுட்டுப் போயிடுவாங்க. இப்படி ஒண்ணுல்ல... ரெண்டில்ல... பதினோரு வருஷமா மனம் தளராம, தொடர்ந்து அவங்களை அப்ரோஷ் பண்ணிட்டே இருந்தேன். கடைசியா நானே ஒரு டீமை உருவாக்கி... காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை நம் நாட்டின் மொழி, கலாச்சாரம், உணவு, கண்டுபிடிப்புகள், திறமைகள், கலைகள்னு ஸ்டடி செய்து, 'டெட்’கிட்ட சமர்பிச்சேன். 'வாவ்!’னு ஆச்சர்யமானவங்க, 'எங்ககூட டை-அப் வெச்சு, நீங்களே இந்தியாவில் கான்ஃப்ரன்ஸ் நடத்துங்க’னு சொன்னாங்க. அமெரிக்கா, ஐரோப்பாவைத் தவிர்த்து உலகின் மறுபக்கத்தையே பார்க்க விரும்பாத 'டெட்’... எனக்கு 'ஓ.கே’ சொன்ன சந்தோஷத்திலும், பொறுப்பிலும் உருவானதுதான் 'இங்க்' (INK- INnovation Knowledge)’'' என்றவர்,
''இங்க் அமைப்போட முதல் கருத்தரங்குல பொருளாதார வசதியில்லாம அங்கங்கே மறைஞ்சு கிடந்த 300 திறமையாளர்களைத் தேடிப்பிடிச்சு மேடை ஏத்தினோம். கலை, அறிவியல், இசை, விளையாட்டு, தொழில்நுட்பம், சுயதொழில்னு இயங்கிட்டு இருந்த அவங்க மேல வெளிச்சம் பாய்ச்சினோம். 'டெட்’கிட்ட இருந்து பாராட்டு கிடைக்க, எங்க வெற்றியை உறுதி செஞ்சுகிட்டோம்.
இந்த வருஷம் டிசம்பர் மாசம் ஜெய்ப்பூரில் ரெண்டாவது 'இங்க்’ கான்ஃபரன்ஸ் நடக்க இருக்கு. இதுல ஆயிரத்துக்கும் மேற்பட்ட திறமையாளர்கள் பங்கேற்கப் போறாங்க'' என்ற லஷ்மி,
''எங்க இங்க், உலகின் பார்வையை இன்னும் இந்தியா நோக்கித் திருப்பும்!''
- நம்பிக்கையோடு சிரிக்கிறார்!

சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குமா ?

வேர் பறிக்கப்பட்ட செடி போல வாடியிருக்கிறார், 'சின்னக்குயில்' சித்ரா. மகள் நந்தனாவின் இழப்பில் இருந்து, இன்னும் அவர் மீளவில்லை. கடந்த ஏப்ரல் 14 அன்று, துபாயில் நீச்சல் குளத்தில் மூழ்கி நந்தனா
மரணமடைந்த நிமிடத்திலிருந்து... இன்று வரை பொது நிகழ்ச்சிகள், பாட்டு என்று சித்ரா வெளிக்கிளம்பி வரவே இல்லை. ஸ்ருதியாகும் காற்று, இப்போது சுவாசமாக மட்டுமே அவரிடம் சென்று திரும்புகிறது. இசை உலகம், அவர் குரல் கேட்கக் காத்திருக்கிறது. 'அவள் விகடன்’ வழியாக சித்ராவுக்கு ஆறுதலும், அவர் குரலுக்கு அழைப்பும் வைக்கிறார்கள் இந்த இசை அன்பர்கள்.
வைரமுத்து
''பி.சுசீலாவுக்குப் பிறகு நான் பெரிதும் நேசிக்கும் பாடகி சித்ரா. நான் தேசிய விருது பெற்ற பாடலை பாடியவர் சித்ரா. அவர் தேசிய விருது பெற்ற பாடலை எழுதியவன் நான். சித்ரா பாடிய முதல் பாடல், 'பூஜைக்கேத்த பூவிது...' அதை எழுதியதும் நான்தான்.
ஏதும் அறியாத ஒரு குழந்தையாக சித்ராவை பார்த்த என்னால், தன் குழந்தையைப் பறி கொடுத்த சித்ராவை பார்க்க முடியவில்லை. எல்லா சோகங்களுக்கும் 'காலத்தை’ போன்ற சிறந்த மருந்து வேறில்லை. 'மறதி’ என்ற ஒன்று மட்டும் இல்லையென்றால்... மனித குலமே மரித்துப் போயிருக்கும். மறதி என்ற மருந்தை சித்ராவுக்காக நான் யாசிக்கிறேன்.
சோகத்தைப் போக்குகிற மிகப்பெரிய சாதனமே கலைதான், இசைதான்... அந்த இசையென்னும் மகா சமுத்திரத்தில் மீண்டும் கலந்துவிட்டால்... சித்ராவின் கண்ணீர் துளி காணாமல் போகும். மீண்டும் பாட வா சின்னக் குயிலே... உனக்காக எங்கள் 'தமிழ்’ காத்திருக்கிறது!'’
எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
''அன்று சித்ராவையோ, அவருடைய கண வரையோ... நேரில் சந்திக்க அல்லது போனில் பேசக்கூட திராணியற்றவனாக இருந்தேன். அதேபோல, இப்போதும் சித்ராவின் மௌனம் கலைக்கும்படி அவரை அழைக்க, எனக்குத் தைரியம் இல்லை. அவர் மீண்டு வரும்வரை, நாம் காத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். என்றாலும், ரணப்பட்ட மனதுக்கு... நல்ல மருந்து இசை என்று நம்புகிறேன். இசை மட்டுமல்ல... அவர் வாழ்வில் சந்தோஷமும் திரும்ப இறைவனை வேண்டுகிறேன்.''
'லஷ்மன் ஸ்ருதி’ லஷ்மன்

''ஈடு செய்ய முடியாத இழப்பில் இருக்கும் தோழியை, என்ன சொல்லி ஆற்ற..? இருந்தாலும், வீட்டுக்குள் பூட்டிக் கிடக்கும் உங்களிடம், உங்கள் குரலைக் கேட்பதற்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கான ரசிகர்களின் ஏக்கத்தையும் பதிவு செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன். உங்கள் குரல் எங்களுக்குத் தரப்போவது இசை மட்டுமில்லை... 'சித்ரா திரும்பிவிட்டார்!’ என்கிற ஆறுதலையும்தான். ஆம்... உங்கள் துயரை தங்களது துயரமாக எண்ணி வருந்திய எங்களை எல்லாம் ஆறுதல்படுத்த வாருங்கள் தோழியே!''
மாணிக்க விநாயகம்
''துன்பங்களும், மீளலுமாகத்தான் இங்கு நகர்ந்துகொண்டு இருக்கிறது வாழ்க்கை பலருக்கு. நீயும் வா மீண்டு. என் பேரப் பிள்ளைகளில் உன் மகளை நான் பார்க்கிறேன். நீயும் வெளியே வந்து பார்... பார்க்கும் குழந்தைகளின் சிரிப்பில் எல்லாம் நந்தனா இருப்பாள். சுசீலா, ஜானகிக்கு அடுத்து... என்றில்லாமல் அதே வரிசையில்தான் இருக்கிறாய் நீயும். உன் குரல் எனும் வரத்தை, வளத்தை மீண்டும் இசைக்கு அர்ப்பணி. உன்னையே நீ புதுப்பித்துக் கொள்ள, இசை வழி இறங்கு. வாம்மா.''
தேவா
''இதுவும் கடந்து போகும் என்பதைத் தவிர, என்ன சொல்வது என்று தெரியவில்லை இந்த அண்ணனுக்கு. உன்னை இந்தத் துயரில் இருந்து மீட்க, நான் வழிபடும் அன்னை ஆதிபராசக்தியிடம் வேண்டுகிறேன் உயிர் கரைத்து. 'நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை’. உனக்கு அமைதி வேண்டும். அம்மாவின் முகம் பார்த்துக் கேட்கும் குழந்தையெனக் கேட்கிறோம்... இசைக் கலைஞர்களுக்கும், ரசிகர்களுக்கும் சித்ராவின் தேன்குரல் தாலாட்டு வேண்டும்.''
எம்.எஸ்.விஸ்வநாதன்
''எனக்கு அப்பா ஸ்தானத்தைக் கொடுக்க நீ என்றும் தவறியதில்லை. என் வயிற்றில் நீ பிறக்கவில்லை என்றாலும், நீயும் என் மகளே. உன் நலனுக்காகப் பிரார்த்திக்கும் அப்பனாக மட்டுமில்லை, உன் குரல் கேட்கக் காத்திருக்கும் ரசிகர்களுள் ஒருவனாகவும் இருக்கிறேன் நான். எங்கள் சித்ரா மீண்டும் எங்களுக்கு வேண்டுமம்மா!'

ரெய்டு பண்ணிக்கோங்க... டீ சாப்பிடுறீங்களா..?


சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள தனது வீட்டில் காலை 6 மணிக்கு, வழக்கம் போல உடற்பயிற்சிக்கு தயாரானார் தி.மு.க. முன்னாள் அமைச்சர் துரைமுருகன். அப்போது, வீட்டு வாசலில் இருந்த வாட்ச்மேன் பதட்டத்தோடு ஓடி வந்து, 'ஐயா போலீஸ்காரங்க வந்திருக்காங்க.. உங்களைப் பார்க்கணுமாம்’ என்று சொல்ல... 'வரச் சொல்லு’ என்று டீ சாப்பிடத் தொடங்கினார் துரைமுருகன். 
உள்ளே வந்த போலீஸ் டீமை தலைமை தாங்கி யவர், ''குட் மார்னிங் சார். என் பேர் முரளி. விஜிலன்ஸ் டி.எஸ்.பி. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக உங்க மேல் புகார் வந்திருக்கு. அதனால், உங்களுக்குச் சொந்தமான 11 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்துறோம். ப்ளீஸ் கோ-ஆப்ரேட் பண்ணுங்க..'' என்றார்.
''என் வீட்டுப் பக்கம் மட்டும் இன்னும் வராம இருக்கீங்களேன்னு யோசிச்சேன். ரெய்டு பண்ணி க்கோங்க... டீ சாப்பிடுறீங்களா..?'' என்று கூலாகவே கேட்டாராம் துரைமுருகன்.
''நோ.. தேங்க்ஸ் சார்...'' என்று சொல்லிவிட்டு துரைமுருகன் வீட்டைக் குடைய ஆரம்பித்தது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ்.
ரெய்டு தொடங்கிய சற்று நேரத்தில் முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன் அங்கு வந்தார். வெளியில் இருந்த போலீஸார், உள்ளே இருந்த அதிகாரி​களுக்குத் தகவல் சொல்ல.. மா.சு. வீட்டுக்குள் அனுமதிக்கப்பட்டார். 11 மணி அளவில் பொன்முடி வர.. அவரையும் வீட்டுக்குள் அனுமதித்தார்கள். ரெய்டு முடியும் வரை இருவரும் வீட்டுக்குள்தான் இருந்தார்கள்.
வேலூர், காட்பாடி காந்தி நகரில் உள்ள துரைமுருகன் வீட்டில் டி.எஸ்.பி. பாலசுப்ரமணியன் தலை​மையில் ஒரு டீம் பிரித்து மேய்ந்தது. அப்போது துரைமுருகனின் மனைவி சாந்தலட்சுமியும், மகன் கதிர் ஆனந்த் மட்டுமே இருந்தனர். இன்னொரு பக்கம், துரைமுருகனின் தம்பி துரைசிங்கத்தின் வீடு, அவரது அருவி மினரல் வாட்டர் அலுவலகம், கேஷ் அண்டு கேரி அலுவலகம் ஆகியவற்றிலும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் புகுந்தனர். ஏலகிரியில் உள்ள பங்களா, கதிர் ஆனந்த் நடத்திவரும் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி ஆகியவற்றிலும் ரெய்டுகள் நடந்தன.
துரைமுருகனின் தம்பி துரைசிங்கம், ''நான் எதுவும் பேச மாட்டேன். அண்ணன்தான் பேசுவார்...'' என்று பத்திரிகையாளர்களிடம் நழுவிவிட்டார். ரெய்டு நடந்த துரைசிங்கம் வீட்டு முன்பு ஒரு தி.மு.க. தொண்டர், திருஷ்டி பூசணிக்காய் மீது கற்பூரம் ஏற்றி, ''எல்லாத் திருஷ்டியும் இதோடு போகட்டும்ணே..'' என்று ஓங்கி உடைத்தார்.
காட்பாடி காந்தி நகரில் உள்ள வீட்டில் போலீஸ் சோதனை நடத்தியபோது, சென்னையில் உள்ள வங்கி ஒன்றின் லாக்கர் சாவியைக் கைப்பற்றி இருக்கிறார்களாம். அந்த லாக்கரில் முக்கிய ஆவணங்கள் இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்​​கிறார்கள். துரைமுருகன் முன்னிலையில் அந்த லாக்கரைத் திறக்கத் திட்டமிட்டு இருக்கிறார்​களாம்.
சென்னை வீட்டில் ரெய்டு முடிய மாலை 4 மணி ஆனது. ரெய்டு முடித்து வெளியில் வந்த போலீஸ் அதிகாரிகள்,  நிருபர்களிடம் எதுவும் பேச மறுத்துவிட்டார்கள். ரெய்டு முடிந்த தகவலை மா.சுப்ரமணியன், கருணாநிதிக்குத் தெரிவித்தார். உடனே கருணாநிதி போனை துரைமுருகனிடம் கொடுக்கச் சொல்லிப் பேசினாராம். 'இதுக்கெல்லாம் நீ கவலைப்படாதே. காலையில இருந்து சரியா சாப்பிட்டு இருக்க மாட்ட... சாப்பிட்டுட்டு நல்லா ஓய்வெடு. நாளைக்கு வா... பார்த்துக்கலாம்..’ என்று ஆறுதல் சொன்னாராம்.
துரைமுருகனைத் தொடர்புகொண்டு பேசினோம். ''வந்தாங்க... வீட்டுல தேடினாங்க. எதுக்கு வந்தாங்க? என்னத்தை எடுத்துட்டுப் போனாங்கன்னு அவங்ககிட்டயே கேளுங்க. ஜெயலலிதாவோட ஆட்சியில இப்படி நடக்குறது புதுசா என்ன?'' என்றார் அலுப்பாக.
இதற்கிடையில் சில வாரங்களுக்கு முன்பு வேலூரில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் அமைச்சர் ஒருவர், 'சட்டத்துக்கு விரோதமாக துரைமுருகன் சேர்த்துள்ள சொத்துக்கள் அனைத்தும் கூடியவிரைவில் பறிமுதல் செய்யப்படும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறோம்’ என்று பேசினாராம். அதனால் அமைச்சரின் பேச்சையும், நடந்துமுடிந்த ரெய்டையும் முடிச்சு போடும் துரைமுருகனின் ஆதரவாளர்கள், ''இந்த ரெய்டு நடவடிக்கைகளுக்கு பின்னணியாக இருந்து செயல்பட்டது அந்த அமைச்சர் தான். எத்தனை ரெய்டு நடத்தினாலும் எங்க அண்ணனை அசைக்க முடியாது'' என்கிறார்கள் கோபத்தோடு!

எங்கே பிரகீத்?


னவரி 24, 2010... மனைவியும் இரண்டு குழந்தைகளும் வழியனுப்பிவைக்க, வழக்கம்போல அலுவலகத்துக்குச் சென்றார் அவர். இந்தக் கட்டுரை அச்சேறும் 2011-ன் இந்த நவம்பர் தினம் வரை அவர் வீடு திரும்பவில்லை!  
 காணாமல் போனவர் இலங்கையின் பிரபல பத்திரிகையாளர் பிரகீத் எக்னெலி கொட. அவரது கேலிச் சித்திரங்கள் இலங்கையில் மிகப் பிரபலம். இலங்கையின் வட பகுதியில் வாழும் தமிழ் மக்கள் மீது ரசாயனக் குண்டுகளை வீசிக் கொன்றதை ஆதாரங்களுடன் எழுதியதோடு, வெளிநாடுகளுக்கும் இந்தத் தகவல்களைப் பரப்பினார் பிரகீத். அதோடு, ஜனாதிபதி தேர்தலில் சரத் ஃபொன்சேகாவுக்காக ஒரு ஆவணப்படமும் தயாரித்துக்கொடுத்தார். இதனைத் தொடர்ந்தே அவர் காணாமல் போனார்.
பிரகீத் காணாமல்போவது புதிதல்ல. 'வெள்ளை வேன்’ கடத்தல்கள் இலங்கைக் கும் புதிது அல்ல. முன்பொரு முறை 2009 ஆகஸ்ட் மாதத்தில் பிரகீத் வெள்ளை வேனில் கடத்தப்பட்டு 'தவறுதலாகக் கடத்தப்பட்டுவிட்டார்’ என்று கூறி விடுவிக் கப்பட்டார். ஆளும் ராஜபக்ஷே அரசின் ஊழல்களையும், போர்க் குற்றங்களையும் தொடர்ந்து எழுதிவந்தார்.  
பிரான்ஸைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் ஜர்னலிஸ்ட்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் (Journalists without borders) என்கிற பத்திரிகையாளர்களுக்கான அமைப்பு,    பிரகீத் தின் நிலைமை குறித்து கவலைகொண்டு, தொடர்ந்து இலங்கை அரசை நிர்ப்பந்தித்து வந்தது. அவரைக் கண்டுபிடிக்கக் கோரி இலங்கையில் போராட்டங்கள் நடந்தன.
பிரகீத்தின் மனைவி சந்தியா தனது கணவரைத் தேடும் பணியில் சளைக்கவில்லை. ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதுவதில் தொடங்கி, பல்வேறு அமைப்புகளைத் தொடர்புகொண்டார். நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றையும் அளித் தார். இலங்கையில் நடந்த ஒரு சர்வதேச இலக்கிய விழாவுக்கு வந்திருந்த எழுத்தாளர் களிடம் தனக்கு உதவுமாறு கோரிய அவரு டைய கடிதம் இப்படித் தொடங்கியது...
'கடத்தப்பட்ட ஊடகவியலாளர்கள், கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள்,  நாட்டைவிட்டு வெளியேறத் தூண்டப்பட்ட ஊடகவியலாளர்களின் மனைவி, பிள்ளை கள் சார்பாக உங்களை வரவேற்கிறேன். தமது இன அடையாளத்தின் பேரால், கொல்லப்பட்டவர்களின் அல்லது காணா மல் போனவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகளின் மௌனமான அழு குரல்கள்கொண்ட தேசத்துக்கு உங்களை வரவேற்கிறேன்!’
சந்தியாவின் மௌனமான அழுகுரல் வெளிநாடுகளையும்கூட எட்டியது. ஆனாலும், பிரகீத் குறித்த மர்மம் நீடித்து வந்தது. இந்த நிலையில்தான் அந்த அதிரவைக்கும் செய்தி வந்துசேர்ந்திருக்கிறது.  கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட இலங்கையின் நிழல் உலக தாதா தெமட்டகொட சமிந்த, தானே பிரகீத்தைக் கொன்று, உடலை ஒரு சாக்குப் பையில் வைத்து, கிரானைட் கற்களைக் கட்டி கடலில் வீசியதாகத் தெரிவித்திருக்கிறான்.
நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் நெருங்கிய நண்பன் இந்த தெமட்டகொட சமிந்த. கோத்தபய ராஜபக்ஷேவின் உத்தரவின் பேரிலேயே அந்தக் கொலை நடந்தது என்றிருக்கிறான் சமிந்த!
ஆனால், ஜெனிவாவில் நடந்த ஐ.நா -வின் சித்ரவதைகளுக்கு எதிரான மனித உரிமை மாநாட்டில், இலங்கையின் பிரதிநிதி மொகான் பிரீஸ், வெளிநாட்டில் பிரகீத்  தஞ்சமடைந்து உள்ளதாகக் கூறியுள் ளார். ''பிரகீத் கடத்தப்பட்டு காணாமல் போனதாகக் கூறப்படுவதும், அவரது விடுதலைக்காக நடைபெற்றுவரும்போராட் டங்களும் பிரசாரங்களும் மோசடியா னவை!'' என்றார் மொகான் பிரீஸ்.
இதனால் பிரகீத் குறித்துக் குழப்பம் நிலவுகிறது. சந்தியா இலங்கை அரசுக்கு இப்போது புதிய கோரிக்கை வைத்திருக்கிறார்.
''ஒருவேளை பிரகீத் வெளிநாட்டில் தஞ்சம் அடைந்து இருந்தால் என்னைத் தொடர்புகொள்ளாமல் இருக்க மாட்டார். ஆனால், மொகான் பிரீஸ், என் கணவர் வெளிநாட்டில் இருப்பதாகத் தெரிவித்து இருக்கிறார். அப்படியெனில், வரும் 2012 ஜனவரி 24-ம் தேதிக்கு முன்னதாக அவரைக் கொண்டுவந்து என் முன் காட்ட வேண்டும். இல்லையேல், அவர் இருக்கும் இடத்துக்கு என்னை அழைத்துப் போக வேண்டும். ஒருவேளை அப்படி சொன்ன தேதிக்குள் அவரைக் கொண்டுவரவில்லை எனில், மொகான் பிரீஸ்,  ஐ.நா. கூட்டத்தில் பொய் சொல்லி இருக்கிறார் என்றே அர்த்தம். இதன் மூலம் பிரகீத்துக்கும், அவர் குடும்பத்துக்கும், ஊடகத் துறையினருக்கும், அவர் மீது அக்கறைகொண்டு அவரைத் தேடி வரும் இலங்கையைச் சேர்ந்த அமைப்புகளுக்கும், சர்வதேச அமைப்புகளுக்கும், ஐ.நா. சபைக்கும் சேர்த்து அவர் துரோகம் இழைத்திருக்கிறார் என்றே அர்த்தம். அவர் இலங்கை அரசின் பிரதிநிதியாகத்தான் ஐ.நா-வின் கூட்டத்தில் கலந்துகொண்டார். ஆகவே, அவருடைய துரோகம் இலங்கை அரசின் துரோகம்தான். நான் ஜனவரி 24 வரை காத்திருக்கிறேன்!'' என்கிறார் சந்தியா.
'சந்தியாவின் இந்தக் கிடுக்கிப்பிடியில் சிக்கியிருக்கும் இலங்கை அரசு என்ன செய்யப்போகிறது?’ என்று காத்துக்கொண்டு இருக்கிறது உலகம்.
அந்தக் குட்டித் தீவின் நாற்புறமும் நாட்டின் நிகழ்வுகளுக்குச் சாட்சியாக ஆர்ப்பரித்துக்கொண்டு இருக்கிறது கடல்!

சீன இந்தியப் போர் மீண்டும் ஆரம்பிக்குமா ? இரகசியங்கள் அம்பலம் !

சீன அரசானது இரகசியமாக இந்திய எல்லையில் கட்டிவரும் விமானப்படைத் தளத்தை இந்தியா கண்டு பிடித்து புகைப்படங்களையும் எடுத்துள்ளது. சீன இந்திய எல்லைக் கிராமமான பூக் ஷேயில் சீனா தனது விமானப்படை தளத்தை இரகசியமாக நிர்மானித்துவருகிறது என்ற செய்திகள் ஏற்கனவே இந்தியப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்திருந்தது. இருப்பினும் மலைசார்ந்த இடம் என்பதாலும் மற்றும் அது சீனாவின் எல்லையில் இருப்பதாலும் அதனைப் பார்வையிடுவதில் பல சிரமங்கள் இருந்தது. மலைக்கு பின் புறமாக பாரிய சாலைகளை அமைப்பதிலும் சீனா இரகசியமாக ஈடுபட்டு வருகிறது என்ற செய்திகள் ஏற்கனவே வெளியாகியிருந்தது.

இதனைச் செயற்கைக் கோள் உதவியோடு முதலில் கண்டறிந்த இந்திய இராணுவத்தினர் அவ்விடத்தை துல்லியமாக கணக்கிட்டு பின்னர் அதனை எல்லைப் பாதுகாப்பு படையினரிடம் கையளித்துள்ளனர். இந்த வரைபடங்களின் உதவியோடு இந்தியப் படையினர் தற்போது சீனா அமைத்துவரும் விமானப்படை தளத்தை ஒரு மலையின் உச்சியில் இருந்து பார்க்கக்கூடிய இடத்தைக் கண்டுபிடித்துள்ளனர். அம் மலையின் உச்சியில் இருந்து தொலைநோக்கு கருவியூடாகப் பார்த்தால் சீனா இரகசியமாக அமைத்துவரும் தளம் தெள்ளத்தெளிவாகப் புலனாகிறது. இதனை அடுத்து இந்தியப் படையினர் இச் செய்தியை தற்போது உறுதிசெய்துள்ளனர்.

சீனாவின் இந்த இரகசிய திட்டம் பற்றி இந்தியா தற்போது கவலையடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. காரணம் பூக் ஷே கிராமமானது இந்திய எல்லையில் இருந்து 20 மைல் தொலைவிற்கும் குறைவான இடத்தில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் இருந்து சீனாவின் வான்படை விமானங்கள் என்நேரமானாலும் புறப்பட்டு இந்திய எல்லைக்குள் ஊடுருவ முடியும். அதுவும் இத் தளத்தை சீனா இரகசியமாக நிர்மானித்து வருவதும் மேலும் பல சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது. இருப்பினும் இந்தியா விமான எதிர்ப்பு ஏவுகணைத் தளம் ஒன்றை அங்கே நிறுவ அமெரிக்காவின் ஆதரவை நாடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

திபெத்திய ஆண்மீகத் தலைவர் தலே லாமாவை இந்தியா அடைக்கலம் கொடுத்து வைத்திருப்பதும் மற்றும் அவர் அரசியலில் ஈடுபட இந்தியா அனுமதி கொடுத்திருப்பதும் சீனாவை அதி உச்ச கோபமடையச் செய்யும் நிகழ்வாக கருதப்படுகிறது. சீனா திபெத்தை கைப்பற்றி தனது நாட்டின் கீள் கொண்டுவந்தவேளை அங்கிருந்து தப்பி தற்போது திபெத்தின் நாடு கடந்த அரசை வழிநடத்திவரும் தலே லாமாவைக் கொலைசெய்ய சீனா பல தடவைகள் முயன்றதும் யாவரும் அறிந்ததே. இந் நிலையில் தலே லாமாவுக்கு அமெரிக்கா தனது ஆதரவை வழங்கிவருவதும் குறிப்பிடத்தக்கது.




வருமான வரியைச் சேமிக்க வகை வகையான வழிகள்!



ஒரு நாடு இயங்குவது தமது மக்களிடமிருந்து பெறும் வரி மூலம் என்றால், அது மிகை இல்லை. அதே நேரத்தில், மக்களிடம் முதலீடு செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தவும், சில அத்தியாவசிய செலவுகளை செய்யவும் வருமான வரிச் சலுகையை அரசு அளித்து வருகிறது. 

இவ்வாறு வரிச் சலுகை அளிப்பது மூலம், அரசு தாம் செய்ய வேண்டிய சில விஷயங்களை மக்களையே செய்ய வைக்கிறது.

வருமான வரியைச் சேமிக்க அரசு அளித்துள்ள முதலீடு திட்டங்களில் முக்கியமானவைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

எவ்வாறு எல்லாம் வருமான வரியைச் சேமிக்கலாம்?

வரிச் சலுகைக்கான முதலீட்டில் முக்கிய இடத்தில் 80 சி பிரிவு இருக்கிறது. இதன் ஓராண்டில் ஒரு லட்ச ரூபாய் வரை வரி விலக்கு பெறலாம். 

இ.பி.எஃப் - எம்ப்ளாயீ பிராவிடன்ட் ஃபண்ட்

தனியார் நிறுவனங்களில் அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படியில் 12% சம்பளத்தில் இ.பி.எஃப். ஆக பிடிக்கிறார்கள். சிலர் இதை பிடிக்க வேண்டாம் என்று சொல்கிறார்கள். அப்படி செய்ய வேண்டாம். நீண்ட காலத்தில் கூட்டு வட்டியுடன் (தற்போது ஆண்டுக்கு 9.5%) வருமானம் கிடைப்பதால் இது மிகச் சிறந்த முதலீடு என்று சொல்லமாம். மேலும், முதலீடு, வட்டி வருமானம், முதிர்வு தொகைக்கு வரி இல்லை என்பது இதன் கூடுதல் சிறப்பு.

பி.பி.எஃப் - பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட் 

* இதில் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்து வரிச் சலுகை பெறலாம். 

* ஆண்டுக்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் கூட முதலீடு செய்யலாம். ஓராண்டில் ரூ.1 லட்சம் வரை முதலீடு செய்யலாம். 

* 15 ஆண்டு திட்டமான இதற்கு ஆண்டுக்கு 8.6% வட்டி கிடைக்கும். இதிலும் முதலீடு, வட்டி, முதிர்வுக்கு வரிச் சலுகை இருக்கிறது.   

வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்

* அனைவரும் முதலீடு செய்து வரிச் சலுகை பெற முடியும். 

* ஐந்தாண்டு திட்டமான இதில் குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000 

* ஆண்டுக்கு  9 முதல் 9.25% வட்டி கிடைக்கும். 

* மூத்த குடிமக்களுக்கு 0.25-0.5% கூடுதல் வட்டி அளிக்கப்படுகிறது. 

* இதில் வட்டி வருமானத்துக்கு வரி கட்ட வேண்டி வரும். 

இன்ஷூரன்ஸ் பாலிசிகள்


டேர்ம் பிளான் (காப்பீடு மட்டும் அளிக்கும் திட்டம்), எண்டோவ்மென்ட் (காப்பீடு மற்றும் முதலீடு), யூலிப் (காப்பீடு மற்றும் முதலீடு) பாலிசிகளுக்கான பிரீமியத்துக்கு வரிச் சலுகை இருக்கிறது. 

இழப்பீடு மற்றும் முதிர்வு தொகைக்கு வரிச் சலுகை இருக்கிறது. 

என்.எஸ்.சி - தேசிய சேமிப்பு பத்திரங்கள்

* தபால் அலுவலக முதலீடான இதற்கு வரிச் சலுகை இருக்கிறது. 

* வட்டி ஆண்டுக்கு 8.4% கிடைக்கும். 

* இதன் முதலீட்டு காலம் 5 ஆண்டுகள். 

பென்சன் திட்டங்கள்

லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் பென்சன் திட்டங்களில் செய்யப்படும் முதலீட்டுக்கு வரி விலக்கு சலுகை  உண்டு. மத்திய அரசின் புதிய பென்சன் திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டுக்கும் இந்த வரி விலக்கு இருக்கிறது. 

இ.பி.எஃப். திட்டத்தில் சேர முடியாதவர்கள், சுய தொழில் செய்பவர்கள் மற்றும் ஓய்வு காலத்தில் செலவுக்கு அதிக தொகை தேவை என்று நினைப்பவர்கள் இதனை நாடலாம். 

வரி சேமிப்பு ஃபன்ட் -  இ.எல்.எஸ்.எஸ்

* பங்குச் சந்தை பற்றி பரிச்சயம் உள்ளவர்கள் இதில் முதலீடு செய்யலாம். 

* குறைந்தபட்ச முதலீடு மாதம் 500 ரூபாயாக இருக்கிறது.  

* மூன்றாண்டு திட்டமான இதில் வருமானம் என்பது பங்குச் சந்தை செயல்பாட்டை சார்ந்ததாக இருக்கிறது. 

* டிவிடெண்டு மற்றும் வருமானத்துக்கும் வரிச் சலுகை இருக்கிறது என்பது இதன் சிறப்பு...!

வீட்டுக் கடன் அசல் 

நாட்டு மக்களுக்கு சொந்த வீடு ஒரு கௌரவம் என்பதால், வீடு கட்ட, வீடு வாங்க பெறப்படும் வீட்டுக் கடனுக்கு வரிச் சலுகை அளிக்கிறது. வீட்டுக் கடனில் திரும்பச் செலுத்தும் அசலுக்கு வரி விலைக்கு உண்டு.

கல்விக் கட்டணம்

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மகன்/மகளுக்கு (இரு பிள்ளைகளுக்கு மட்டும்) கட்டும் கல்விக் கட்டணத்துக்கு வரிச் சலுகை இருக்கிறது

எப்படி இருந்த மதுர இப்படி ஆயிடுச்சு!


தூங்கா நகரில் ஃபீலிங் ரவுண்ட்

'ஆலவாய்’ மதுரை 'ஆக்கிரமிப்பு’ மதுரையான கதை எல்லோருக்கும் தெரியும். இப்போது 'அமைதி’ மதுரையாக ஆகிவிட்டதா என்று அறியவே அலைந்தேன்!
 தகர்ந்தது ஃப்ளெக்ஸ் கோட்டை
மதுரை என்றாலே நினைவுக்கு வருகிற டிஜிட்டல் ஃப்ளெக்ஸ் கோட்டை இப்போது தகர்ந்திருக்கிறது. அஞ்சா நெஞ்சரே, ஆற்றல் அரசரே, இமயத்தின் இமயமே, தென்னகமே, தென்னாடுடைய சிவனே, எங்களின் ஹிட்லரே என்று வரைமுறை இல்லாமல் வாழ்த்துகிற விளம்பரங்களை அறவே காணவில்லை. அ, ஆ... எழுதிப் பழக வேண்டிய ஆட்கள் எல்லாம், 100 அடி அகலத்தில் 'அ’னாவைப் பற்றி கவிதை பாடியிருந்த ஃப்ளெக்ஸ் இம்சையில் இருந்து மதுரை மக்களுக்கு முதல் விடுதலை கிடைத்திருக்கிறது. குறிப்பாக, அழகிரி வீட்டுக்குச் செல்லும் பாதை, காஷ்மீர் பார்டர் போல இருந்த நிலைமை மாறிவிட்டது. அண்ணனின் பிறந்த நாள் ஜனவரியில் வருகிறது என்றால், ஆகஸ்ட் மாதமே ஃப்ளெக்ஸ் வைப்பவர்கள் இது வரையில் சின்ன போஸ்டர்கூட ஒட்டவில்லை. 
அழகிரி வீட்டுப் பக்கம் இருந்த பாதுகாப்புக் கெடுபிடிகள் காணாமல் போய்விட்டன. ஆனால், மதுரை அ.தி.மு.க-வில் வெளியில் தெரியும் அளவுக்கு மூன்று கோஷ்டிகள் இருக்கின்றன. அமைச்சர் செல்லூர் ராஜு கோஷ்டி அடக்கி வாசித்தாலும்கூட, மற்ற இரு கோஷ்டிகளும் தி.மு.க. பாணியில் கட்டுப்பாடு இல்லாமல் ஃப்ளெக்ஸ்களை வைத்துக்கொண்டு இருக்கின்றன!
அந்த மூன்று பேருக்கு நன்றி!
தி.மு.க. ஆட்சியின் கடைசி மூன்று ஆண்டுகளில் மதுரைக்கு வாய்த்த உயர் அதிகாரிகள் மிகத் திறமையானவர்கள்.  யாருக்கு? யாருக்கோ! கைப்பாவை கலெக்டர், கண்டுகொள்ளாத கமிஷனர், பிரச்னை என்றால் எஸ்கேப் எஸ்.பி. ஆகியோரைத் தேர்தல் நேரத்தில் மாற்றிய எலெக்ஷன் கமிஷன்... கலெக்டர் சகாயம், போலீஸ் கமிஷனர் கண்ணப்பன், எஸ்.பி. ஆஸ்ரா கர்க் என்று சக்திமிக்க படையை மதுரைக்கு அனுப்பியது. தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்ட இந்த அதிகாரிகளைப் பழக்க தோஷத்தில் தூக்கியடிக்காமல் இருக்கிற ஒரு விஷயத்துக்காகவே ஜெயலலிதாவைப் பாராட்டலாம்!
மதுரைக்குப் புதிதாக வருபவர்கள் பளிச்சென்று ஒரு மாற்றத்தைப் பார்க்கலாம் மாட்டுத்தாவணியில். தி.மு.க. காலத்தில் பெயரின் பொருளுக்கு ஏற்றபடி, மாட்டுச் சந்தை போலத்தான் இருந்தது மாட்டுத்தாவணி. உட்கார இடம் கிடையாது. நடைபாதைகளிலும் கடைகள். வியாபாரிகள் போர்வையில் ரௌடிகள். சொன்னதுதான் விலை... வைத்ததுதான் சட்டம். தவறுதலாகக் கை பட்டுப் பழம் உருண்டால்கூடச் சரமாரியாக விழும் உதை. திடீர் திடீரென வெடித்துப் பீதி கிளப்பும் கியாஸ் சிலிண்டர். தொடர் தீ விபத்து. தப்பித்து ஓட வழி இல்லாமல் சந்துபொந்துகளிலும் எண்ணெய் கொதிக்கும் வடை சட்டிகள்.
ஐ.எஸ்.ஓ. தரச் சான்று பெற்ற தென்னகத்தின் மிகப் பெரிய பேருந்து நிலையத்தின் இந்த நிலையைக் கண்டு அதிர்ந்தார் சகாயம். 'பஸ் நிலைய ஆக்கிரமிப்புகளையும் குறைகளையும் ஏழு நாட்களுக் குள் சரிசெய்யாவிட்டால், தமிழ்நாடு மோட்டார் வாகன விதி எண் 245(1)ன்படி பஸ் நிலைய நிர்வாகத்தினை மாநகராட்சியிடம் இருந்து அரசே எடுத்துக்கொள்ளும்!’ என்று அவர் எச்சரிக்க, வருவாய்த் துறை, காவல் துறை, மாநகராட்சி என்ற முப்படைத் தாக்குதலில் தூள்தூளாகின ஆக்கிரமிப்புகள். ஆச்சர்யம்... ஆக்கிரமிப்புகளை அகற்ற அகற்ற... மாட்டுத்தாவணியில் மாயமாகி இருந்த பயணிகள் காத்திருக்கும் அறை, பொருட்கள் பாதுகாப்பு அறை, காவல் நிலையம், தபால் நிலையம், சுகாதார மையம் போன்றவை எல்லாம் கடைகளுக்குள் இருந்து வெளிப்பட்டன!
சி.டி. கடைகள் ஒழிப்பு!
திருட்டு சி.டி-க்களின் தலைநகரமான மதுரையில், பாண்டி பஜாரில் 70 சி.டி. கடைகள், மீனாட்சி பஜாரில் 20 கடைகள் பரபரப்பாகச் செயல்பட்டுக்கொண்டு இருந் தன. தவிர, பிரதான சாலைகள் அனைத்தி லும் டீக்கடைகள் போலவும், ஒவ்வொரு தெரு முனையிலும் ஆவின் பால் பூத் போலவும் சி.டி. கடைகள் சக்கைப் போடு போட்டுக்கொண்டு இருந்தன. அதற்கு எதிரான நடவடிக்கையில் இறங்கினார் கமிஷனர் கண்ணப்பன். புதுப் பட,ஆபாசப் பட சி.டி-க்களை அள்ளி வந்து அழித்த தோடு, அதனை விற்பவர்கள் மீது கடுமை யான நடவடிக்கைகள் எடுத்தார். இப்போது பாண்டி பஜார், மீனாட்சி பஜார் உட்பட மாநகரில் ஒரு இடத்தில்கூட சி.டி. கடைகள் இல்லை. அத்தனையும் செல்போன் கடைகளாக மாறிவிட்டன. ஒரு காலத்தில் தமிழகத்துக்கே திருட்டு சி.டி. சப்ளை செய்த வளமான நகரான மதுரை, இப்போது 10 வருடங்களுக்கு முன்பு வெளியான படங்களைக்கூட  60-க்கு வாங்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்குப் போய்விட்டது!
''சார், புதுப் படம், ஆபாசப் படம் விக்க மாட்டோம் சார். பிற மொழிப் படங்களை மட்டுமாவது விற்க அனுமதி கொடுக்கக் கூடாதா?'' என்று கெஞ்சிய பாண்டி பஜார் வியாபாரிகளிடம், ''முதல்ல, உங்களுக்கு டி.வி.டி. போட்டுக் கொடுக் கிறவங்களோட பட்டியலைக் கொடுங்க. அப்புறமா அனுமதி கொடுக்கிறதைப் பத்தி யோசிப்போம்!'' என்று விரட்டி அடித்து விட்டார் கமிஷனர். தமிழகத்திலேயே திருட்டு சி.டி. ஒழிக்கப்பட்ட மாநகரம் மதுரைதான் என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்லலாம்!
25 கோடி நிலங்கள் மீட்பு!
நில அபகரிப்பு தொடர்பாக மாவட்டக் குற்றப் பிரிவுக்குக் கடந்த செப்டம்பர் மாதம் வரையில் வந்த மொத்தப் புகார்களின் எண்ணிக்கை 221. எடுத்ததும் எஃப்.ஐ.ஆர். போடாமல், உண்மையான புகார்தானா என்று விசாரித்து, 111 மனுக் களை நிராகரித்த எஸ்.பி., எஞ்சிய 110 புகார்கள் மீது மட்டும் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யவைத்தார். விசாரணையின்போதே, 'எதற்கு வம்பு?’ என்று சமாதானமாகப் போய்விட்டவர்களின் எண்ணிக்கை 28. 
இதேபோல, 'செஞ்சது தப்புதான்’ என்று ஒப்புக்கொண்டு, பலர் அந்த சொத்துக்களை உரியவரிடமே வழங்கிவிட்டார்கள். இப்படி மீட்கப்பட்ட சொத்தின் மதிப்பு மட்டும் 25 கோடி. இடத்தைத் தர மறுத்து வீம்பு செய்த 50 பேர், இப்போது கம்பிக்குள். எஸ்.பி. ஆஸ்ரா கர்க்கின் இந்த அதிரடியால், புறநகர்ப் பகுதியில் போலி பட்டா போட்டு நிலம் விற்பவர்கள் பயத்தில் இருக்கிறார்கள். அதே நேரத்தில், புதிதாக நிலம் வாங்குபவர் கள், ஏற்கெனவே வாங்கிப்போட்டவர் களும் பயம் இல்லாமல் இருக்கிறார்கள்!
மாறிய கரை வேட்டிகள்!
கலெக்டர் அலுவலகமும், காவல் நிலை யங்களும் முன்பு ஆளும் கட்சியினரின் சொர்க்கபுரியாக இருந்தன. டூ வீலர் திருடர்களை மீட்கக்கூட கரை வேட்டிகள் வந்தன. இப்போது, அந்த நிலை இல்லை. எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் போலீஸ் ஸ்டேஷனுக்கோ, எஸ்.பி., கமிஷனர் ஆபீஸுக்கோ போவதற்குப் பதறுகிறார்கள் அ.தி.மு.க-வினர்.
ஆனால், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கனிம வளத் துறை அலுவலகத் துக்கு இப்போதும் கரை வேட்டிகள் படைஎடுக்கின்றன.
முன்பு சென்ட்ரல் மார்க்கெட் முழுவதையும் தி.மு.க. புள்ளிகள், கவுன்சிலர்களின் பினாமிகள் மொத்தமாக ஆக்கிரமித்து இருந்தார்கள். கடையை உள்வாடகைக்குவிட்டு ராஜபோகமாக வாழ்ந்தவர்களை அங்கிருந்து விரட்டிவிட்டு, இப்போது அதே வேலையை அ.தி.மு.க-வினர் செய்கிறார்கள். கிராமத்துப் பெரியவர்களுக்கு ஓ.ஏ.பி. வாங்கிக்கொடுப்பது போன்ற வேலைகளுக்குக்கூட தி.மு.க. கரை வேட்டிகள் சிபாரிசுக்காக கலெக்டர் ஆபீஸ் பக்கம் வர, அ.தி.மு.க. கரை வேட்டிகள் கமிஷன் பெரிய தொகை என்றால் மட்டுமே ஆஜர் கொடுக்கிறார்கள்! 
நடுரோட்டில் கொலைகள்!
ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு மதுரையில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது கசப்பான உண்மை. 'தா.கிருட்டிணன் கொலை, தினகரன் அலுவலகம் எரிப்பு போன்றவை மதுரையில் சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்டதாக வெளியுலகத் துக்குக் காட்டியது. ஆறடி உயர காம்பவுண்ட் சுவர், உள்ளே அல்சேஷன் நாய், அதற்குள் கேட் போட்ட வீடு என்று கருவறைக்குள் இருக்கும் கடவுள் போல வாழும் மேல்தட்டு மக்கள் டி.வி. சேனலைப் பார்த்துவிட்டு அடித்த 'கமென்ட்’தான் அது. ஆனால், அன்றைய தினம் மதுரை வீதிகளில் எந்தப் பதற்றமும் இல்லை. தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டபோது, அது கருணாநிதியின் குடும்பச் சண்டை என்றும், தா.கிருட்டிணன் கொல்லப்பட்ட போது, அது தி.மு.க-வின் உட்கட்சிப் பிரச்னை என்றும் பேசிக்கொண்டார்களே ஒழியே, மதுரையில் யாரும் பதற்றப்படவில்லை.
ஆனால், இந்த ஆட்சியில் 6 மாதங்களுக்குள் 15-க்கும் அதிகமானோர் பட்டப்பகலில், நடுரோட்டில் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். போக்குவரத்துப் பாதிப்பு, பதறி ஓடும் பெண்கள், கடை அடைப்பு, ஒரு வாரத்துக்கு அந்த வழியாகப் பள்ளி செல்லத் தயங்கும் குழந்தைகள் என்று சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிப் பது இந்த ஆட்சியில்தான்!'' என்கிறார் ஒரு பொது நல ஆர்வலர். 
மதுரையின் டிராஃபிக் பிரச்னை மாற்றம் இன்றித் தொடர்கிறது. இங்கே பல விபத்துக்களை ஏற்படுத்தி வரும் ஷேர் ஆட்டோக்களை ஒழிக்க போலீஸ் தயங்குகிறது. ''தி.மு.க. ஆட்சியில் குற்றங்களில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தவர்களுக்கு எல்லாம், ஆட்டோ பெர்மிட் கொடுத்துவிட்டார் கள். இப்போது, தவறு செய்யும் ஆட்டோக்களைப் பறிமுதல் செய்தால், அவர்கள் பழையபடி தொழிலுக்குத் திரும்பிவிடுவார்கள். ஏற்கெனவே குற்றம் அதிகம் நடக்கிறது. இவர்கள் வந்தால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும்'' என்கிறார் ஓர் உயர் அதிகாரி.
மற்றபடி, மதுரை சில விஷயங்களில் மாறி இருக்கிறது... பல விஷயங்களில் 'அ’னா லேபிள் இல்லாமல் காரியங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும்!