Monday, November 28, 2011

ரெய்டு பண்ணிக்கோங்க... டீ சாப்பிடுறீங்களா..?


சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள தனது வீட்டில் காலை 6 மணிக்கு, வழக்கம் போல உடற்பயிற்சிக்கு தயாரானார் தி.மு.க. முன்னாள் அமைச்சர் துரைமுருகன். அப்போது, வீட்டு வாசலில் இருந்த வாட்ச்மேன் பதட்டத்தோடு ஓடி வந்து, 'ஐயா போலீஸ்காரங்க வந்திருக்காங்க.. உங்களைப் பார்க்கணுமாம்’ என்று சொல்ல... 'வரச் சொல்லு’ என்று டீ சாப்பிடத் தொடங்கினார் துரைமுருகன். 
உள்ளே வந்த போலீஸ் டீமை தலைமை தாங்கி யவர், ''குட் மார்னிங் சார். என் பேர் முரளி. விஜிலன்ஸ் டி.எஸ்.பி. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக உங்க மேல் புகார் வந்திருக்கு. அதனால், உங்களுக்குச் சொந்தமான 11 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்துறோம். ப்ளீஸ் கோ-ஆப்ரேட் பண்ணுங்க..'' என்றார்.
''என் வீட்டுப் பக்கம் மட்டும் இன்னும் வராம இருக்கீங்களேன்னு யோசிச்சேன். ரெய்டு பண்ணி க்கோங்க... டீ சாப்பிடுறீங்களா..?'' என்று கூலாகவே கேட்டாராம் துரைமுருகன்.
''நோ.. தேங்க்ஸ் சார்...'' என்று சொல்லிவிட்டு துரைமுருகன் வீட்டைக் குடைய ஆரம்பித்தது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ்.
ரெய்டு தொடங்கிய சற்று நேரத்தில் முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன் அங்கு வந்தார். வெளியில் இருந்த போலீஸார், உள்ளே இருந்த அதிகாரி​களுக்குத் தகவல் சொல்ல.. மா.சு. வீட்டுக்குள் அனுமதிக்கப்பட்டார். 11 மணி அளவில் பொன்முடி வர.. அவரையும் வீட்டுக்குள் அனுமதித்தார்கள். ரெய்டு முடியும் வரை இருவரும் வீட்டுக்குள்தான் இருந்தார்கள்.
வேலூர், காட்பாடி காந்தி நகரில் உள்ள துரைமுருகன் வீட்டில் டி.எஸ்.பி. பாலசுப்ரமணியன் தலை​மையில் ஒரு டீம் பிரித்து மேய்ந்தது. அப்போது துரைமுருகனின் மனைவி சாந்தலட்சுமியும், மகன் கதிர் ஆனந்த் மட்டுமே இருந்தனர். இன்னொரு பக்கம், துரைமுருகனின் தம்பி துரைசிங்கத்தின் வீடு, அவரது அருவி மினரல் வாட்டர் அலுவலகம், கேஷ் அண்டு கேரி அலுவலகம் ஆகியவற்றிலும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் புகுந்தனர். ஏலகிரியில் உள்ள பங்களா, கதிர் ஆனந்த் நடத்திவரும் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி ஆகியவற்றிலும் ரெய்டுகள் நடந்தன.
துரைமுருகனின் தம்பி துரைசிங்கம், ''நான் எதுவும் பேச மாட்டேன். அண்ணன்தான் பேசுவார்...'' என்று பத்திரிகையாளர்களிடம் நழுவிவிட்டார். ரெய்டு நடந்த துரைசிங்கம் வீட்டு முன்பு ஒரு தி.மு.க. தொண்டர், திருஷ்டி பூசணிக்காய் மீது கற்பூரம் ஏற்றி, ''எல்லாத் திருஷ்டியும் இதோடு போகட்டும்ணே..'' என்று ஓங்கி உடைத்தார்.
காட்பாடி காந்தி நகரில் உள்ள வீட்டில் போலீஸ் சோதனை நடத்தியபோது, சென்னையில் உள்ள வங்கி ஒன்றின் லாக்கர் சாவியைக் கைப்பற்றி இருக்கிறார்களாம். அந்த லாக்கரில் முக்கிய ஆவணங்கள் இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்​​கிறார்கள். துரைமுருகன் முன்னிலையில் அந்த லாக்கரைத் திறக்கத் திட்டமிட்டு இருக்கிறார்​களாம்.
சென்னை வீட்டில் ரெய்டு முடிய மாலை 4 மணி ஆனது. ரெய்டு முடித்து வெளியில் வந்த போலீஸ் அதிகாரிகள்,  நிருபர்களிடம் எதுவும் பேச மறுத்துவிட்டார்கள். ரெய்டு முடிந்த தகவலை மா.சுப்ரமணியன், கருணாநிதிக்குத் தெரிவித்தார். உடனே கருணாநிதி போனை துரைமுருகனிடம் கொடுக்கச் சொல்லிப் பேசினாராம். 'இதுக்கெல்லாம் நீ கவலைப்படாதே. காலையில இருந்து சரியா சாப்பிட்டு இருக்க மாட்ட... சாப்பிட்டுட்டு நல்லா ஓய்வெடு. நாளைக்கு வா... பார்த்துக்கலாம்..’ என்று ஆறுதல் சொன்னாராம்.
துரைமுருகனைத் தொடர்புகொண்டு பேசினோம். ''வந்தாங்க... வீட்டுல தேடினாங்க. எதுக்கு வந்தாங்க? என்னத்தை எடுத்துட்டுப் போனாங்கன்னு அவங்ககிட்டயே கேளுங்க. ஜெயலலிதாவோட ஆட்சியில இப்படி நடக்குறது புதுசா என்ன?'' என்றார் அலுப்பாக.
இதற்கிடையில் சில வாரங்களுக்கு முன்பு வேலூரில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் அமைச்சர் ஒருவர், 'சட்டத்துக்கு விரோதமாக துரைமுருகன் சேர்த்துள்ள சொத்துக்கள் அனைத்தும் கூடியவிரைவில் பறிமுதல் செய்யப்படும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறோம்’ என்று பேசினாராம். அதனால் அமைச்சரின் பேச்சையும், நடந்துமுடிந்த ரெய்டையும் முடிச்சு போடும் துரைமுருகனின் ஆதரவாளர்கள், ''இந்த ரெய்டு நடவடிக்கைகளுக்கு பின்னணியாக இருந்து செயல்பட்டது அந்த அமைச்சர் தான். எத்தனை ரெய்டு நடத்தினாலும் எங்க அண்ணனை அசைக்க முடியாது'' என்கிறார்கள் கோபத்தோடு!

No comments:

Post a Comment