Saturday, November 26, 2011

நாங்கள் ஆட்சிக்கு வந்தால்..!


மதுரை கமிஷனரை கலக்கிய விஜயகாந்த்!
துரையில் கடந்த 20-ம் தேதி, மாநில தே.மு.தி.க. தொழிற்சங்க நிர்வாகி முஜிபூர் ரஹ்மானின் இல்லத் திருமண விழாவுக்கு விஜயகாந்த் வர, கூடவே பிரச்னையும் வந்தது!
விஜயகாந்த் வருகைக்காக மதுரை முழுக்க ஃப்ளெக்ஸ் போர்டுகள்வைத்து அமர்க்களப் படுத்தி இருந்தனர் கட்சித் தொண்டர்கள். அவற்றை உடனே அப்புறப்படுத்த கமிஷனர் கண்ணப்பன் உத்தரவிட, இரவோடு இரவாக அவற்றை அப்புறப்படுத்தியது போலீஸ். விஷயம் அறிந்து கட்சியின் மாநிலப் பொருளாளர் சுந்தர்ராஜன் உள்பட நிர்வாகிகள் சம்பவ இடத்துக்குப் போக, பரபரப்பாகிவிட்டது. அங்கிருந்த போலீஸாரோ 'கமிஷனரிடம் கேட்டுக்கொள்ளுங்கள்’ என்று கைவிரிக்க, கமிஷனர் வீட்டுக்கே போனார் சுந்தர் ராஜன். ஆனாலும் காரியமாகவில்லை.
மறுநாள் காலையில் மதுரை வந்த  விஜயகாந்த்தின் காதில் கட்சி நிர்வாகிகள் இதைப் போட, கல்யாண வீடு என்றுகூடப் பார்க்காமல், கண் சிவக்கத் தன் கடுப்பை வெளிப்படுத்தினார் விஜயகாந்த்.
'பொதுவாக திருமண வீடுகளில் அரசியல் பேசக் கூடாது. இன்னிக்கு சூழ்நிலை வேற... மணமக்கள் என்னை மன்னிக்கணும்'' என்று ஆரம்பித்தவர் பஸ் கட்டணம், பால் விலை உயர்வை ஒரு பிடி பிடித்துவிட்டு, கமிஷனர் கண்ணப்பன் மேட்டருக்குத் தாவினார்.
'ஃப்ளெக்ஸ் போர்டு வைக்கிறதுக்கு மத்த கட்சிகளுக்கு எல்லாம் போலீஸ் அனுமதி கொடுக் கிறாங்க. நான் கலந்து கொண்டு திருமண விழாவுக்கு பிளெக்ஸ் போர்டு வைக்க போலீஸ் பெர்மிஷன் கொடுக்கலை. கலெக்டர்கிட்ட போய்க் கேட்டா, மேலிடத்தில் கேட்கணும்கிறார். போலீஸ்ல கேட்டா அவங்களும் ஆளும் கட்சிக்கு ஜால்ரா அடிக்கிறாங்க. ஆயிரம் கைகள் சேர்ந்தாலும் ஆதவனை மறைக்க முடியாது. தே.மு.தி.க. வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது.
இந்த கண்ணப்பன் மாதிரி எத்தனையோ கண்ணப் பன்கள் வந்துட்டுப் போய்ட்டாங்க. நாங்களும் எத்தனையோ கண்ணப்பன்களைப் பார்த்திருக்கோம். ஆட்சி மாறும் போது, தே.மு.தி.க. ஆட்சிக்கு வரும் போது... கண்ணப்பன் எல்லாம் எங்கே இருப்பார்னு தெரியாது. யாருக்கும் சகாயம் பண்ண மாட் டார்னு சொல்லப்பட்ட சகாயம் (மதுரை கலெக்டரைத்தான் சொல் கிறார்) இன்னிக்கு ஆளும் கட்சிக்கு சகாயம் பண்ணிட்டு இருக்கார்' என்று வறுத்தெடுத்துவிட்டார்.
'கேப்டனின் இந்த டென்ஷனுக்குக்  என்ன காரணம்?’ என்று அந்தக் கட்சி எம்.எல்.ஏ-வான சுந்தர் ராஜனிடம் கேட்டோம்.
'எந்தெந்த இடத்தில் போர்டு கள் வைப்பது, எவ்வளவு வைப்பது என முன்கூட்டியே தீர்மானித்து மாநகராட்சியில் அனுமதி வாங்கிவிட்டோம். 39 ஃப்ளெக்ஸுகளுக்கும், இரண்டு ஆர்ச்சுகளுக்கும் சேர்த்து மொத்தம்  40 ஆயிரம் கட்டணமாகச் செலுத்தினோம். தவிர, தல்லாகுளம் டிராஃபிக் இன்ஸ்பெக்டர் ஜெயகுமாரிடம் அந்தப் பகுதியில் ஃப்ளெக்ஸ் வைக்கத் தடை இல்லாச் சான்றிதழும் வாங்கினோம். திடீரென கமிஷனர் உத்தரவு எனச் சொல்லி எல்லாவற்றையும் அகற்றிவிட்டனர். கல்யாண போஸ்டர் ஒட்டியவர்களைக்கூட விசாரணைக்கு அழைத்துப் போய்விட்டார்கள்.
வைகோ, அத்வானி வந்தபோது கண் மூடித் தூங்கிய போலீஸ், தே.மு.தி.க. மீது மட்டும் பாய்வது ஏன்? போலீஸிடம் முன் அனுமதி வாங்காததுதான் காரணம் என்றால், அந்த இன்ஸ்பெக்டரிடம் தடை இல்லாச் சான்று வழங்கிய 10 ஃப்ளெக்ஸ்களையாவது விட்டுவைத்திருக் கலாமே? கமிஷனரைச் சந்திக்க அவர் வீட்டுக்குப் போனால், சந்திக்க மறுத்து விட்டார். கலெக்டரிடம் போய் விஷயத்தைச் சொன்னோம். அவர்தான் நியாயமானவரே... உடனே கமிஷனரைத் தொடர்புகொண்டு பேசி னார். அப்படி இருந்தும் அனுமதி கொடுக்கவில்லை. எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டாலும் பரவாயில்லை, அழைத்துப் பேசுவதற்கு என்ன வந்தது இந்தக் கமிஷனருக்கு?' என்றார் வேதனையுடன்.
'அதுசரி எதற்காக கலெக் டரைத் திட்டினார் விஜயகாந்த்?' என்று நாம் கேட்ட கேள்விக்கு அவருக்கே விடை தெரியவில்லை. 'கலெக்டர் ரொம்ப நல்லவர். அவர் எங்களுக்கு உதவி செய்ய முன்வந்தார். அவரை கேப்டன் தவறாகப் பேசவில்லை. செய்தி தவறாக வந்துவிட்டது என்று நினைக்கிறேன்' என்று இழுத் தார் சுந்தர்ராஜன்.
இந்த பிரச்னைபற்றி கலெக் டரின் கருத்தறிய முயன்றோம். 21-ம் தேதி முழுவதும் மனுநீதி நாள் முகாமில் முழ்கிவிட்டதால், அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. கமிஷனர் கண்ணப்பனை சந்தித் தோம். லேசாக புன்னகைத்தவர் கருத்துச் சொல்ல மறுத்துவிட்டார்.
அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் போலீஸ் அதிகாரிகளோ, 'கடந்த காலத்தில் மதுரை முழுக்க ஃப்ளெக்ஸ் கோட்டையாகி, மக்கள் பட்டபாடு நாட்டுக்கே தெரியும். மதுரையின் இந்தக் கேடுகெட்ட கலாசாரத்தை எப்போதுதான் திருத்துவது? வெறும் ஃப்ளெக்ஸ்தானே என்று அவர்கள் சொல்லலாம். ஆனால், அதனால் எவ்வளவு பிரச்னைகள் ஏற்படுகிறது என்பது எங்களுக்குத்தான் தெரியும். இது தொடர்பாக டிராபிஃக் ராமசாமி வழக்குத் தொடர்ந்து, சென்னை மாநகரில் ஃப்ளெக்ஸ் போர்டுவைக்க கோர்ட்டே தடைவிதித்துள்ளது.
தே.மு.தி.க-வினர் அனுமதி கேட்டபோது, 'நிகழ்ச்சி நடத்தும் இடத்தில் தாராளமாக ஃப்ளெக்ஸ் வைத்துக்கொள்ளுங்கள்’ என்றோம். 'நாங்க ஊர் முழுக்க வைப்போம்’ என்றார்கள். அவர்களின் இஷ்டப்படி விட மறுத்ததால், இப்படிப் பேசுகிறார்கள். அவர்களது மிரட்டலால் கமிஷனர் பயந்துவிட்டார் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். நாளைக்கே அ.தி.மு.க. அனுமதி கேட் டாலும் இதுதான் நிலை' என்றனர்.
''கேப்டனின் சீற்றம் ஸ்டார்ட் ஆயிடுச்சு'' என்கிறார்கள் தே.மு.தி.க.வினர்!

No comments:

Post a Comment