Friday, November 25, 2011

கனிமொழி வெளியே வந்தால்..



''கனிமொழிக்கு பெயில் கிடைப்பதற்கான காலம் கனிந்து வருவதால், ராஜாத்தி அம்மாள் முகத்தில் சந்தோஷ ரேகைகள் லேசாகத் தென்பட ஆரம்பித்துள்ளன. ரிலையன்ஸ் கௌதம் ஜோஷி, ஹரி நாயர், சுரேந்திர பிபாரா, யுனிடெல் நிறுவனத்தைச் சேர்ந்த சஞ்சய் சந்திரா, ஸ்வான் நிறுவனத்தைச் சேர்ந்த வினோத் கோயங்கா ஆகிய ஐந்து பேருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் கொடுத்துள்ளது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் முதல் தடவையாக ஜாமீன் கதவு திறக்கப்பட்டுள்ளது. இதுதான் கனிமொழி தரப்புக்கான நம்பிக்கை. கனிமொழி தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு, சிறப்பு நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டு... டெல்லி உயர் நீதிமன்றத்தில் டிசம்பர் 1-ம் தேதி விசாரணைக்கு வரப்போகிறது. 'குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் கொடுத்துள்ளதால், கனிமொழிக்கும் கிடைக்கும்’ என்கிறார்கள். 'டிசம்பர் 1-ம் தேதி வரைக்கும் எதற்குத் தாமதிக்க வேண்டும். உடனடியாக விசாரியுங்களேன்’ என்று கடந்த 23-ம் தேதி மனு தாக்கல் செய்தார் கனிமொழி. அதற்கு நீதிமன்றம் என்ன முடிவெடுக்க இருக்கிறது என்று காத்திருப்போம். எப்படிப் பார்த்தாலும் டிசம்பர் முதல் வாரம் சிறைக் கதவுகள் திறக்கப்படலாம்!''
''அடுத்து..?''
''ராஜாத்தி அம்மாளிடம் சில கோரிக்கைகள் இருக்கின்றன. 'செய்யாத தப்புக்கு என் மகள் தண்டனை அனுபவிச்சுட்டு வர்றா. அவளுக்கு கட்சியில் ஏதாவது பதவி கொடுத்து அவளது கஷ்டத்துக்குப் பரிகாரம் செய்யணும்’ என்பது ராஜாத்தி அம்மாளின் கோரிக்கையாம்!''
''இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லும்!''
'' கனிமொழி தரப்பு சொல்லி வரும் விளக்கம்தான் அது. '200 கோடி ரூபாயை என் மகள் கையில் வாங்க​வில்லை. அதை மும்பைக்காரர்கள் கலைஞர் டி.வி.க்காக யாரிடம் கொடுத்தார்களோ... அவர்களைத்தான் கைது செய்யணும். ஆனால், கனிமொழியைக் கைது செய்தனர். தான் தப்பிக்க வேண்டும் என்பதற்காக கனிமொழி யாரையும் காட்டிக்கொடுக்கவில்லை. எனவே, அவர் கட்சிக்கும் கோபாலபுரம் குடும்பத்துக்கும் நன்மைதான் செய்திருக்கிறார். எனவே, கனிமொழிக்கு தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளர் பதவி தரவேண்டும்’ என்பது அவரது ஆதரவாளர்களின் கோரிக்கை. இப்படி ஒரு நெருக்கடி கருணாநிதிக்கும் கொடுக்கப்பட்டு வருகிறதாம்...''
''பதவி கொடுப்பாரா கருணாநிதி?''
''கருணாநிதியைக் கொடுக்கவிடுவார்களா என்று கேளும்! 'கனிமொழிக்கு இன்னொரு அதிகாரம் வாய்ந்த பதவியைக் கொடுக்க ஸ்டாலின், அழகிரி, செல்வி, தயாநிதி ஆகியோர் தயாராக இல்லை. அவர்கள் கடுமையான கோபத்தை இப்போதே காட்ட ஆரம்பித்துவிட்டார்கள்’ என்கிறது அறிவாலய வட்டாரம்!''
''ராஜாத்தி அம்மாள் ரியாக்ஷன்?''
''அது இப்போதே தெரிய ஆரம்பித்துவிட்டதே... ஒரு உதாரணத்தை மட்டும் சொல்கிறேன்!
முரசொலி மாறனுக்கு கடந்த 23-ம் தேதி நினைவு நாள். அன்றைய தினம் கருணாநிதி, காலையிலேயே முரசொலி அலுவலகத்துக்கு வந்துவிடுவார். அங்கே இருக்கும் மாறன் சிலைக்கு மாலை அணிவிப்பார். தி.மு.க. முன்னணியினரும் வருவார்கள். பிரத்யேகமாக ஷாமியானா பந்தல் போடுவார்கள். இரண்டு நாட்களுக்கு முன்னதாக சென்னை மாவட்டச் செயலாளர்கள் பெயர்களில் தனித்தனி அறிக்கைகள் வரும். தொண்டர்கள் எத்தனை மணிக்கு முரசொலி அலுவலகத்தில் கூட வேண்டும் என்று அதில் இருக்கும். இப்படி நான் சொன்னது எதுவும் கடந்த 23-ம் தேதி நடைபெறவில்லை. முரசொலியில் மட்டும் மாறனின் படத்தைப் போட்டு திராவிட இயக்கத் தீரர்கள் நினைவு நாள் என்று பாக்ஸ் கட்டிவிட்டார்கள். 'ஏன் இந்தச் சம்பிரதாயம் நடக்கவில்லை?’ என்று தி.மு.க. வட்டாரத்தில் பலமான வாதப்பிரதிவாதங்கள் தொடங்கிவிட்டன!''
''ஏனாம்?''
''குடும்பக் குழப்பத்தின் ரியாக்ஷன்தான் இது என்கிறார்கள். முரசொலி மாறன் படத்தை நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து, அதற்குப் பிரதமரும், சோனியாவும், துணை ஜனாதிபதியும், சபாநாயகர் மீரா குமாரும், அத்வானியும், பிரணாப் முகர்ஜியும் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். ஆனால், சென்னையில் கருணாநிதி அதைச் செய்யவில்லை என்றால்... பின்னணி இருக்காதா? 'கருணாநிதி இதில் கலந்துகொள்ளக் கூடாது என்று தடுத்துவிட்டார்கள்.’ என்கிறது ஒரு குரூப். 'இல்லை... தலைவருக்கு உடல் நிலை சரி இல்லை. அப்போலோவுக்குச் செல்லும் அளவுக்கு மோசமாக இருந்தது. அதனால்தான் இதில் கலந்துகொள்ளவில்லை’ என்கிறது இன்னொரு குரூப். 'தலைவர் வராவிட்டாலும், மற்றவர்களாவது நடத்தி இருக்கலாமே?’ என்ற கேள்விக்கு... யாரிடமும் பதிலே இல்லை! இதை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது கனிமொழி வந்ததும்... நிலவரம் மாறப்போகிறது!''

No comments:

Post a Comment