Friday, November 25, 2011

திகில் கிளப்பும் 'டேம் 999'



'பெரியாறு அணை உடைகிறது’ என்று கிராஃபிக்ஸ் செய்து காட்டி பயம் காட்டியவர்கள், இப்போது ஹாலிவுட் படத்தின் வடிவில் திகில் கிளப்பி இருக்கிறார்கள். 
வளைகுடா நாடுகளில் வசிக்கும் சில மலையாளிகள் சேர்ந்து  'டேம் 999’ என்ற ஆங்கிலத் திரைப்படத்தை தயாரித்து இருக்கிறார்கள். ஒரு பெரிய அணை உடைந்து, ஏராளமான மக்கள் தண்ணீரில் மூழ்கிச் சாவது போன்ற கொடூரமான காட்சிகள் இதில் இடம்பெற்று இருப்பதுதான் சிக்கலை உருவாக்கி இருக்கிறது.
வளைகுடா நாட்டில் வசிக்கும் மலையாளியும் இயக்குநருமான சோஹன்ராய், ''இந்தப் படத்தில் காட்டப்படும் அணையை ஒரு மலையாளி பார்த்தால், அவருக்கு இது முல்லைப் பெரியாறு அணையாகத் தோன்றும்'' என்று சொன்னதாக செய்தி வரவே, தமிழகம் கொந்தளித்தது. ''முல்லைப் பெரியாறு அணை உடைந்துவிடும் என்று கடந்த 30 ஆண்டுகளாக கேரளம் செய்துவரும் பிரசாரத்தை உச்ச நீதிமன்​றமே நிராகரித்துவிட்டது. ஏனென்றால், பெரியாறு அணை இருப்பது கடல் மட்டத்தில் இருந்து 2,889 மீட்டருக்கு மேல். இந்த அணை உடைந்தால் அழிந்துபோகும் எனக் கூறப்படும் குமுளி, கடல் மட்டத்திலிருந்து 3,350 மீட்டரிலும் பாம்பனாறு 3,750 மீட்டரிலும் ஏலப்பாறை 4,850 மீட்டரிலும் இருக்கின்றன. அணை உடையும் எனப் பேச்சுக்கு வைத்துக்கொண்டால்கூட, 2,000 மீட்டர் தாழ்வாக உள்ள அணை உடைந்தால் எப்படி அழிவு ஏற்படும்? அவர்களின் நோக்கமே, பெரியாறு அணையைக் காலி செய்துவிட்டு, புதிய அணை கட்டவேண்டும் என்பதுதான். அதற்காக, எப்படியாவது பீதியைக் கிளப்ப தொடர்ந்து குறுக்கு வழியில் செயல்படுகிறார்கள். அதன் ஒரு பகுதிதான் 'டேம்999’ படம்'' எனப் புள்ளிவிவரத்துடன் பொங்குகிறார்கள் தமிழகப் பொறியியல் அறிஞர்கள்.
இந்த செய்தி வெளியே கசிந்ததும், அதைக் கண்டித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ முதலில் அறிக்கை வெளியிட்டார். சென்னையில் முன்னோட்டக் காட்சி​யுடன் அறிமுக நிகழ்ச்சியும் நடப்பதாக அடுத்த தகவல் கசிந்தது.  22-ம் தேதி மாலை 4 மணிக்கு முன்னோட்டத் திரையிடல் நடப்பதாக இருந்த வடபழனி பிரசாத் ஸ்டுடியோவுக்கு ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட  நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். உணர்ச்சிவசப்பட்ட சிலர் ஸ்டுடியோவுக்குள் புகுந்து படப்பெட்டியைத் தூக்கிப் போட்டனர். பிலிம் சுருள்களை வெளியே இழுத்துப் போட்டனர். நிலைமை சீரியஸாவதைக் கவனித்த போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து  புழல் சிறையில் அடைத்தனர். சென்னையில் தொடங்கிய எதிர்ப்பு, சில மணி நேரங்களில் தமிழகம் எங்கும் பற்றிப் படர்ந்தது. அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஒவ்வொருவராகக் கண்டனம் தெரிவித்தார்கள். படத்தை எங்கு திரையிட்டாலும் முற்றுகை இடுவோம் என்று தொல். திருமாவளவனும் சீமானும் அறிவித்தனர். உடனே, தமிழக திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட அனைத்து சங்கங்களுக்கும் வைகோ கடிதம் அனுப்பினார். இந்தப் படத்தை நீங்கள் திரையிடக் கூடாது என்றார். 'இந்தப் படத்தைத் தமிழகத்தில் திரையிடப்போவது இல்லை’ எனத் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் பகிரங்கமாக அறிவித்தனர். அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த பிறகு, தி.மு.க. தலைவர் கருணாநிதியும் ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டார். உடனடியாக, முதல்வர் ஒரு அவசரக் கடிதத்தை பிரதமருக்கு அனுப்பினார். 'முல்லை பெரியாறு அணை குறித்து பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் 'டேம் 999’ திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிடத் தடை’ என ரத்தினச் சுருக்கமாக அறிவிப்பு வெளியிட்டார் தலைமைச் செயலாளர்.  
தமிழக அரசின் தடை அறிவிப்பு வந்த பிறகு தான், கொதித்தெழுந்த தமிழகத்தின் கோபம் அடங்கியது.
இரா. தமிழ்க்கனல்
'அணை-999’
 ஆங்கிலத்தில் எடுக்கப்பட்ட 'டேம்-999’ படத்தை, தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் டப்பிங் செய்து இருக்கிறார்கள். தமிழில் 'அணை-999’ என்று பெயர். ஹீரோ, 'உன்னாலே உன்னாலே’ வினய். கதாநாயகியாக விமலா ராமனும் வில்லனாக ஆசிஷ் வித்யார்த்தியும் நடித்துள்ளனர். படத்தின் இயக்குனரான சோஹன் ராய்க்கு பூர்வீகம் கேரளா. சார்ஜாவில் வசிக்கும் புலம் பெயர்ந்த மலையாளியான சோஹன்ராய், ''நான் இயக்கி இருக்கும், 'அணை-999’ திரைப்படம் முல்லை பெரியாறு அணையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது அல்ல. 1975-ல் சீனாவின் பான்கியூ அணை உடைந்தது. அப்போது ஏற்பட்ட வெள்ளத்தின் சீற்றத்தால், 2,50,000 மக்கள் பலியானர்கள். கோரமான அந்த சம்பவம் என் மனதைப் பாதித்தது. அதனால் சீனாவில் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகவைத்தே இந்தப் படத்தை எடுத்து இருக்கிறேன். என் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழகத் தலைவர்களுக்கு, படத்தைத் திரையிட்டுக் காட்டத் தயாராக இருக்கிறேன். மனம் புண்படும்படியான காட்சியோ, வசனமோ இருந்தால், அதை நீக்கவும் தயார். தமிழக மக்களின் உணர்வுகளை மிகவும் மதிக்கிறேன். முல்லை பெரியாறு அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் வரத்து இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய தனிப்பட்ட கருத்து. அதே நேரம் பழைய அணைக்கு மாற்றாக பெரிய அணை ஒன்று கட்டுவதே சரியான தீர்வு. அப்படிச் செய்தால், தமிழ்நாட்டுக்கு கூடுதலாக தண்ணீர் கிடைக்கும். கேரள மக்களின் வாழ்க்கையும் பாதுகாக்கப் படும்'' என்கிறார்.

No comments:

Post a Comment