Sunday, November 27, 2011

முதல் சவாலை ஆரம்பித்த விஜயகாந்த்....


''அந்தக் கேசு... இந்தக் கேசு... கஞ்சாக் கேசு...!

முதல் சவாலை ஆரம்பித்த விஜயகாந்த்
''அம்மாவுக்கு எதிராக கேப்டன் வாய் திறக்க மாட்டாரா?'' என்று ஏக்கப் பெருமூச்சுடன் இருந்த  தே.மு.தி.க-வினருக்கு உற்சாகம் கொடுப்பது மாதிரி உறுமித் தள்ளி விட்டார்   விஜய காந்த்! 
அரசியலுக்காக இல்லாமல் பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு என மக்களின் அடிப்படைப்  பிரச்னைகளுக்காக விஜயகாந்த் கொந் தளிக்க ஆரம்பித்திருப்பது இந்த வாரத்தின் அதிர்ச்சித் திருப்பங்களில் ஒன்று. மதுரைக்கு கடந்த வாரம் சென்ற அவருக்காக வைக்கப்பட்ட கட் அவுட்டுகளை எடுக்கச் சொல்லி போலீஸ் மிரட்டியதைத் தொடர்ந்து அங்கேயே கர்ஜித்து விட்டுத்தான் வந்தார் விஜயகாந்த். முன்னோட்டம் சூடாக இருந்ததால், அவர் அறிவித்த உண்ணாவிரதப் பந்தலிலும் உஷ்ணம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு கட்டியம் கூறுவது மாதிரியே, உண்ணாவிரதம் இருக்க விஜயகாந்த்துக்கு சரியான இடமும் தரப்படவில்லை யாம்!
''மின்வாரிய அலுவலகத்துக்குப் பின்னால கூவம் ஓரத்துல உண்ணாவிரதம் இருக்க அனுமதி கொடுப்பாங்க. எந்த மக்களுக்காக போராட்டம் நடத்துறோமோ அவங்களுக்கே இது தெரியாது. அதனால கட்சி ஆபீஸுலயே உட்கார்றேன். கோயம்பேடு வழியா பஸ்சில போகிற பல்லாயிரம் பேர் அதைப் பார்த்தா போதும்’ என்று சொன்னாராம் விஜயகாந்த். கட்சி அலுவலக வாசலில் சாமியானா பந்தல் போட்டு விஜயகாந்த் உட்காரப் போறார் என்று தெரிந்ததும் அவரது கட்சியினர் அதிகாலை முதலே சாரை சாரையாக வர ஆரம்பித்தார்கள். பக்கத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன், பின்னால் பிரேமலதா சகிதமாக கருப்புக் கண்ணாடி போட்டு கேப்டன் உட்கார்ந்திருந்ததைப் பார்த்து அவரது கட்சித் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தார்கள்!
தே.மு.தி.க-வின் ஸ்டார் பேச்சாளர் எப்போதுமே பிரேமலதாதான். அவரது பேச்சில் அன்றும் அனல் தெறித்தது. '' அண்ணா தி.மு.க-வுடன் ஏன் கூட்டணி வைத்தோம் என்று நாம் வருத்தப்படும் அளவுக்கு இருக்கிறது அவர்களின் செயல்பாடு. இந்த ஆறு மாத காலத்தில் அவ்வளவு கூத்து நடந்துள்ளது. நடப்பது ஜெயலலிதா ஆட்சியா? இல்லை ஹிட்லர் ஆட்சியா?'' என்று அவர் சீறியபோது விஜயகாந்தே ரசித்துக் கைதட்டினார்.
பலத்த விசில் சத்தத்துக்கு மத்தியில் மைக் பிடித்தார் விஜயகாந்த். இத்தனை நாள் இருந்த அமைதிக்கு மொத்தமாக வெளுப்பதைப் போலவே இருந்தது!
''இத்தனை நாளும் நான் இந்த அம்மாவுக்கு பயந்துகிட்டு பேசாம இருக்கலை. ஆறு மாசம் டைம் குடுக்கிறேன்னு ஏற்கெனவே சொல்லி இருந்தேன். அதான் பேசலை. மத்தபடி இந்த விஜயகாந்துக்கு எந்த பயமும் இல்லை. கடந்த சட்டமன்றத் தேர்தல்ல எங்க தயவு இல்லாம ஜெயிச்சதா  அந்தம்மா சொல்லுது. தி.மு.க ஆட்சியில பெண்ணாகரம் இடைத்தேர்தல்ல உங்களால டெபாசிட் வாங்க முடிஞ்சதா? 12 இடத்துல இடைத்தேர்தல் நடந்தது. அதுல ஒண்ணுல கூட நீங்க ஜெயிக்கலையே. எங்ககூட கூட்டணி சேர்ந்ததுக்கு அப்புறம்தானே ஜெயிச்சீங்க. 'அரச கட்டளை’ படத்துல 'ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை’னு எம்.ஜி.ஆர் பாடுவார். அதே போலத்தான் நீங்க கேப்டன் டி.வி-யை காட்டலைன்னாலும் சரி... நாங்க முரசு கொட்டி வெளியில் வந்து முழங்குவோம். அவங்களை எதிர்த்து பேசுனா என் கட்சி எம்.எல்.ஏ-க்களை விலை குடுத்து வாங்கிடுவாங்கனு சில பேர் சொல்றாங்க. வர்றவங்களை தாராளமா கூட்டிட்டு போங்க. அதைப்பத்தி  கவலைப்பட மாட்டேன். நான் தொண்டர்களை நம்பி கட்சி நடத்துறவன். உங்க கட்சில இருந்து எத்தனை பேர் தி.மு.க-வுக்கு பிச்சிக்கிட்டு போனாங்கனு எங்களுக்கும் தெரியும். சவால் விட்டு சொல்றேன். அண்ணா தி.மு.க-வுக்கு சொல்றேன். தைரியம் இருந்தா ஆட்சிய கலைச்சிட்டு ஒரு வருஷம் கழிச்சி தனியா தேர்தலை வைங்க பார்ப்போம். ஒரு இடத்துலகூட ஜெயிக்க மாட்டீங்க. ஏன் ஒரு வருஷம்னு சொல்றேன் தெரியுமா? ஆறு மாசத்துல தேர்தல் வெச்சா போலீஸ் இவுங்க சொல்றதத்தான் கேக்கும். ஒரு வருஷம்னா கவர்னர் ஆட்சி வந்துரும்.
மக்களே!  எனக்கு பணம் சம்பாதிக்கணும்னு ஆசை இல்லை. எல்லாத்தையும் பார்த்துட்டேன். வானத்துலயும் சண்டை போட்டுட்டேன். பூமிக்கு அடியிலயும் சண்டை போட்டுட்டேன். நடுவுலயும் சண்டை போட்டுட்டேன். உங்களுக்கு சேவை செய்றதுதான் என் குறிக்கோள். விஜயகாந்துன்னு ஒருத்தன் இருந்தான். அவன் நல்லபடியா ஆண்டான்னு சரித்திரம் பேசுனா போதும்.  இப்ப நடக்குறது கேவலப்பட்ட ஆட்சி.  இன்னைக்குச் செத்தா நாளைக்கு பால்னு சொல்லுவாங்க. இனி தமிழ்நாட்டுல யாரும் செத்தா பாலுக்கு பதில் தண்ணிதான் ஊத்த முடியும். அந்த அளவுக்கு ரேட் ஏத்திட்டாங்க. ஏத்துறதை ஏத்திட்டு டி.வில, 'தாய்மார்களே கண்மணிகளே’னு அசோகவனம் சீதை மாதிரி டயலாக் விடுறாங்க. மத்திய அரசு நிதி குடுக்கலைன்னு சொல்றது சுத்தப் பொய். மம்தா பானர்ஜி மத்திய அரசைப் பார்த்து உங்க நிதி எனக்குத் தேவை இல்லைனு சொன்னாங்க. அந்தத் துணிச்சல் வேணும். இந்த அம்மாவை துணிச்சல்காரங்கன்னு சில பேர் சொல்லுவாங்க. தைரியம் இருந்தா உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னாடி விலை உயர்வை அறிவிச்சிருக்க வேண்டியதுதானே... இதான் இவங்க துணிச்சலோட லட்சணம்.
இப்படி நான் எதிர்த்து பேசுறதால என் மேல அந்தக் கேசு... இந்தக் கேசு... கஞ்சா கேசு... கறுப்பு பண கேசு... இப்படி என்னென்னமோ போடப் பார்ப்பாங்க. அதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்லை. தொண்டர்களே... நீங்க எல்லாரும் சிறை செல்லத் தயாரா இருங்க. இனி, தொடர்ந்து போராடுவோம்'' என ஆவேசத்துடன் முடிக்க... 'கேப்டன் கச்சேரிய ஆரம்பிச்சுட்டாரு டோய்’ என்று உற்சாகத்துடன் கலைந்தது தொண்டர் கூட்டம்!

1 comment:

  1. இவரு சொல்வதெல்லாம் செரி ! அரசியல்னு வந்த அப்புறம் யாருமே ஒழுங்கா இல்ல ! ஏழாம் அந்த காலத்தோட போச்சு ! இதுல யாரு கம்மிய கொள்ளை அடிக்குராங்கனு சந்தோஷ படுக்க வேண்டியது தான் ! தமிழன் நிலையும் தமிழ்நாட்டு நிலைமையும் எப்ப தான் மாற போகிறதோ ! அப்துல் கலாம் அவர்கள் ஏழாம் '' இளைஞர்கள் கையில் தான் இந்திய உள்ளது என்று சொன்னார் ! " ஆனால் எந்த ஒரு இளைஞரும் அதற்காக பாடு பாடுவத தெரியவில்லை :(

    ReplyDelete