''என்ன சார், நீங்க 'வேட்டை’ ஆடப்போறீங்கன்னு தெரியும். இது என்ன புது வேட்டை?'' என்றால் சிரிக்கிறார் லிங்கு.
''என் 'வேட்டை’ வேற. அது நான் 'கிளவுட் நைன்’க்குப் பண்றேன். இவங்க மூணு பேரும் நம்ம 'திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனத்துக்குப் படம் பண்றாங்க. இந்த நிமிஷம் தமிழ் சினிமாவின் நம்பிக்கை இயக்குநர்களாக இருக்கும் மூணு நண்பர்களுடன் ஒரே நேரத்தில் வேலை பார்க்கும் அனுபவம் எனக்கே புதுசாவும் பிரமிப்பாவும் இருக்கு!'' - ஆச்சர்யம் விலகாமல் பேசுகிறார் லிங்குசாமி.
சணல் மெத்தைக்குள் புதைந்து அமர்ந்திருக்கும் பாலாஜி சக்திவேல் ஜன்னல் அதிரச் சிரிக்கிறார். ''திருப்பதி பிரதர்ஸுக்காக இப்போ 'வழக்கு எண் 18/09’ பண்ணிட்டு இருக்கேன். ஜனவரியில் ரிலீஸ். நண்பர்களுக்குப் படம் பண்றதுதான் வசதி. இல்லேன்னா... சிலர், 'எனக்குக் காதல் மாதிரியே ஒரு படம்வேணும்’னு தான் ஆரம்பிப்பாங்க. ஒண்ணுபோலவே இன்னொண்ணையும் செய்ய... சினிமா ஒண்ணும் புரோட்டாக் கடை இல்லையே.
நீங்க நல்லா யோசிச்சுப் பாருங்க... ஒரு கேனான்-5 ஸ்டில் கேமராவை வெச்சு நான் படம் எடுத்துட்டு இருக்கேன். மற்ற தயாரிப்பாளரா இருந்தா, 'இது என்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கு?’ன்னு சொல்லிடுவாங்க. ஆனால் லிங்குசாமி, 'நீங்க பண்ணுங்க’ன்னார்!'' என்ற பாலாஜி சக்திவேலின் பேச்சுக்குப் புன்னகைக்கிறார் லிங்குசாமி.
''நான் 'ரன்’ முடிச்ச நேரத்தில், என்கிட்ட பாலாஜி சக்திவேல் சார் 'காதல்’ கதையைச் சொன்னார். 'எனக்கு ஒரு கேமரா இருந்தாப் போதும் லிங்கு. எங்கேயாவது கும்பகோணம் பக்கம் போயி, கிடைக்கிற முகங்களை வெச்சுப் படத்தை எடுத்துட்டு வந்துடுவேன்’னு சொன்னார். 'நானே புரொடியூஸ் பண்றேன்’னு சொன்னேன். ஆனால், பிறகு 'ஜி’ படத்தில் நான் சிக்கிக்கிட்டேன். இப்பவும் 'காதலை’ மிஸ் பண்ண வருத்தம் எனக்கு இருக்கு. அவர் 'திருப்பதி பிரதர்ஸ்’க்குப் படம் பண்றதில் நிஜமாவே எனக்குப் பெருமை. அவர் சொன்னதுபோல ஒரு கிரியேட்டருக்கு சுதந்திரம் எவ்வளவு முக்கியம்னு எனக்கு நல்லாத் தெரியும்.
''நான் 'மைனா’ போஸ்ட் புரொடக்ஷன் முடிச்சு, வியாபாரத்துக்காகப் போராடிட்டு இருந்த சமயத்தில்தான் லிங்குசாமி சார் கூப்பிட்டு, அடுத்த படம் பண்ணச் சொன்னார். இப்போ வரை என்ன கதைன்னு எனக்கும் தெரியாது. அவரும் கேட்கலை. 'மைனா’ கதையை எந்தத் தயாரிப்பாளரிடமும் சொல்லி ஓ.கே. வாங்கி இருக்க முடியாது. ஏன்னா, அது முழுக்க முழுக்க சவுண்ட், மியூஸிக், காட்சி, மௌனம், உணர்வு என்று நகர்கிற கதை. அதை விஷுவலா எடுத்துத்தான் காட்ட முடியும். அதனால்தான் நான் 'ஷாலோம் ஸ்டுடியோ’ன்னு சொந்த கம்பெனியில் மைனாவை எடுத்தேன். இப்போ அடுத்த படத்தின் கதைக்காக வட இந்தியாவின் அறியப்படாத
பிரதேசங்கள் அத்தனைக்கும் ஒரு பயணம் போறேன். நம்ம காலடியில் தேனிக்குப் பக்கத்தில் இருந்த குரங்கணியே நமக்குப் புதுசா இருக் கிறப்போ... இவ்வளவு பெரிய இந்தியா வில் இன்னும் எவ்வளவு இடங்கள் இருக்கும்? அதைப் பின்னணியா வெச்சு அழுத்தமா ஒரு கதை சொல்லப் போறேன்!'' என்கிறார் பிரபு சாலமன்.
''இதோ மிஷ்கின்... இந்த வருடத்தின் பெஸ்ட் ஆக்டர் அவார்டு வாங்கிடுவார்போல!'' என லிங்குசாமி சொல்ல, தலை சாய்த்துச் சிரிக்கிறார் மிஷ்கின்.
''உண்மையைச் சொல்லணும் என்றால், ஓர் இயக்குநர் எல்லா நேரமும் கதையைப்பற்றியே யோசிக் கிறான். ஒரு நடிகனாக இருப்பதால், வாழ்நாள் அஞ்சு வருஷம் அதிகரிக்கும். ஆனா, ஓர் இயக்குநராக இருப்பதால் அவனது வாழ்நாள் அஞ்சு வருஷம் குறையும்.
முன்னாடி எல்லாம் ஒரு சினிமா பழசாக கொஞ்ச நாள் பிடிக்கும். இப்போ உடனுக்குடனே பழசாகிடுது. பிடிச்சு இருந்தா... மக்கள் கொண்டாடுறாங்க. பிடிக்கலைன்னா... தயவுதாட்சண்யம் இல்லாமத் தூக்கி வீசிடுறாங்க.
மறுபடியும் பேசத் தொடங்கும் லிங்குசாமி,  ''இதை எல்லாம் தாண்டி நாங்க எல்லோருமே நண்பர்கள். அதிலும் பாலாஜி சார்,  தயவு தாட்சண்யமே இல்லாமல் முகத்துக்கு நேராக குறைகளைச் சுட்டிக்காட்டுவார்.  'காதல்’ படத்தில் அந்த சித்தப்பா கேரக்டருக்கு 'உண்மையான ஊனமுற்றவர்  ஒருவரைப் பயன்படுத்துங்க’ன்னு நான்தான்  சொன்னேன். அதுவே என் 'சண்டைக் கோழி’யில் தலைவாசல் விஜய்யை ஊனமுற்றவரா  நடிக்கவெச்சிருப்பேன். 'எனக்கு மட்டும் சொன்ன? நீயும்  பண்ணியிருக்கணும்ல?’ன்னு முகத்துக்கு நேராக் கேட்டார். அதான் நட்பு!  
இவங்க எல்லோரிடமும் கதைக்காக நான் பேசுவதால் நான்தான் தயாரிப்பாளராத்  தெரியுறேன். உண்மையில், 'திருப்பதி பிரதர்ஸ்’ மூலமா இந்தப் படங்களைத்  தயாரிக்கிறது என் தம்பி சுபாஸ் சந்திரபோஸ். பாலாஜி சக்திவேல், மிஷ்கின்,  பிரபு சாலமன்... மூன்று பேரும் இப்போ 'திருப்பதி பிரதர்ஸில்’  இணைஞ்சிருக்காங்க. தமிழ் சினிமாவில் நான் மதிக்கும் எல்லா இயக்குநர்களையும்  இதில் சேர்க்கணும் என்பதுதான் என் ஆசை!'' - லிங்குசாமியின் கண்களில்  மின்னுகிறது கனவு!

No comments:
Post a Comment