'தோசையம்மா தோசை அம்மா சுட்ட தோசை...'                                       
- தலைமுறை தாண்டியும் தவறாமல் நம் குழந்தைகளுக்குப் போய்ச் சேர்ந்து கொண்டிருக்கும் ஒரு சில பழம் பாடல்களில் இதுவும் ஒன்று.
இதற்குக் காரணம்... 'தோசை' என்கிற உணவின் மீது குழந்தைகளுக்கு இருக்கும் ஆர்வமும்... ஆசையும்தான்! 
''இன்னிக்கு என்ன டிபன் பண்ணட்டும்?'' என்று கேட்டதுமே பெரும்பாலான குழந்தைகள் ஏகோபித்த குரலில் சொல்வது... ''தோசை'' என்பதைத்தானே! 
"ம்ஹ¨ம்...  எனக்கு மம்மு வேண்டாம்" என அடம்பிடிக்கும் குழந்தைகூட, "தோசை செஞ்சு  தர்றேண்டா செல்லம்"னு கொஞ்சினா... அடுத்த நிமிஷமே சரண்டராகி விடுமே! ஆக, தோசைக்கு எப்போதுமே நூற்றுக்கு நூறு மார்க்தான்.
இதோ... பாட்டியின் கருப்பட்டி  தோசையிலிருந்து, 'மாடர்ன் வேர்ல்டு' கற்றுக் கொடுத்திருக்கும் பீட்சா தோசை  வரை வகை வகையாக செய்து அசத்தி, ஆச்சரியப்படுத்தியிருக்கும் சமையல்கலை  வல்லுநர் உஷாதேவி, "ஒவ்வொரு வகை தோசைக்கும் அரிசியை ஊற வைக்கறதுல இருந்து,  தோசை மாவை கல்லுல வார்க்குறது வரைக்கும் நிறைய வரைமுறைகள் இருக்கு.  அதையெல்லாம் சரியா செஞ்சாத்தான் தோசை ருசிக்கும்... கல்லுல ஒட்டிக்கிட்டு  அடம் பிடிக்காம, அழகா பெயர்ந்து வரும்" என்று உத்தரவாதம் தருகிறார். பிறகென்ன... எப்போது  பார்த்தாலும் ஒரே மாதிரியான தோசையை சுட்டுப்போட்டு போரடிக்காமல்... ஒவ்வொரு  நாளும் ஒவ்வொரு தோசை என்று வீட்டில் 'தோசைத் திருவிழா'வைக் கொண்டாடுங்க  தோழிகளே!                                      
ரவா தோசை
தேவையானவை: மைதா  மாவு - ஒரு கப், அரிசி மாவு - கால் கப், வறுத்த ரவை - இரண்டரை கப், பச்சை  மிளகாய் - 3, இஞ்சி - சிறிய துண்டு, சீரகம் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு  - தேவையான அளவு. 
செய்முறை: பச்சை  மிளகாய், இஞ்சி இரண்டையும் நசுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மைதா  மாவு, அரிசி மாவு, ரவை, சீரகம், உப்பு, நசுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய்  சேர்த்து, தண்ணீர் விட்டுக் கட்டியில்லாமல் கரைக்கவும். தோசைக் கல்லை  சூடாக்கி, எண்ணெய் விட்டு, கல்லின் ஓரத்தில் இருந்து உள்பக்கம் வரும்  வகையில் மாவை விட வேண்டும். இருபக்கமும் எண்ணெய் விட்டு, முறுகலாக  வெந்ததும் எடுக்கவும். இதனை திருப்பிப் போடத் தேவையில்லை. இதற்குத்  தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி நன்றாக இருக்கும்.
மிக்ஸட் தோசை
தேவையானவை:  துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு (கலந்தது) -  ஒரு கப், பச்சரிசி - ஒன்றரை கப், புழுங்கலரிசி - ஒரு கப், தேங்காய்  துருவல் - அரை கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
தாளிக்க: பெரிய வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 4, சீரகம் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: அரிசி,  பருப்பை தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊற வைத்து கரகரப்பாக அரைக்கவும்.  கடைசியாக உப்பு, தேங்காய் துருவல் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.  கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை  மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கி.. சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து  மீண்டும் வதக்கி, மாவில் கொட்டவும். மாவை, தோசைக் கல்லில் மெல்லியதாக  விட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு, வேகவிட்டு, பரிமாறவும்.
அவியல், இதற்கு சூப்பரான சைட் டிஷ்!
தோசை முறுகலாக வருவதற்கு...  முதலில் அரிசியைப் போட்டு, பாதி அரைத்தவுடன் ஊற வைத்த பருப்புகளைப் போட்டு  அரைக்கவும். இந்த மாவை புளிக்க வைக்காமல் உடனே செய்ய வேண்டும். மாவானது,  இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும்.
கோதுமை தோசை
தேவையானவை: கோதுமை  மாவு - ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 2  (பொடியாக நறுக்கியது), கறிவேப்பிலை பொடி, புதினா பொடி - தலா அரை டீஸ்பூன்,  சீரகம் - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: ஒரு  பாத்திரத்தில் எண்ணெய் தவிர, எல்லா பொருட்களையும் போட்டு, தண்ணீர் விட்டு  தோசை மாவு பதத்தில் கரைத்து, சிறிது நேரம் வைத்திருக்கவும். தோசைக் கல்லை  சூடாக்கி, ஒரு கரண்டி மாவு எடுத்து சிறிது கனமாக இட்டு, இருபுறமும் எண்ணெய்  விட்டு, வெந்தவுடன் எடுக்கவும்.
தக்காளித் தொக்குடன், சுடச்சுட சாப்பிட சுவையாக இருக்கும்.
பருப்பு தோசை (இனிப்பு)
தேவையானவை: பாசிப்  பருப்பு அல்லது பச்சைப் பயறு - ஒரு கப் பச்சரிசி - கால் கப், தேங்காய்  துருவல் - 2 டேபிள்ஸ்பூன், வெல்லம் (அ) பனை வெல்லம் - ஒன்றேகால் கப்,  ஏலக்காய் - 2, நெய் (அ) எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பருப்பு,  அரிசியை தனித் தனியாக இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, தனித்தனியாக  கரகரவென கெட்டியாக அரைத்து, ஒன்றாகக் கலந்து கொள்ளவும். வெல் லம் அல்லது  பனை வெல்லத்தை சிறிதளவு தண்ணீர் விட்டுக் கரைத்து வடிகட்டி... மாவுடன்  சேர்த்து, தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். பொடித்த ஏலக்காய்,  தேங்காய் துருவல் போட்டு நன்கு கலக்கவும். சூடான தோசைக் கல்லில் எண்ணெய்  தேய்த்து, ஒரு கரண்டி மாவு விட்டு, தோசையாக வார்க்கவும். இருபுறமும் நெய்  (அ) எண்ணெய் விட்டு, வெந்தவுடன் எடுத்து சூடாகப் பரிமாறவும்.  விருப்பப்பட்டால், வறுத்த வேர்க்கடலையை ஒன்றிரண்டாக பொடித்து தோசையை  எடுக்கும் சமயத்தில் தூவிப் பரிமாறலாம்.
கேழ்வரகு தோசை 
தேவையானவை:  கேழ்வரகு - கால் கிலோ, உளுத்தம்பருப்பு - கைப்பிடியளவு, பச்சரிசி - கால்  கப், முருங்கைக் கீரை - கைப்பிடியளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கேழ்வரகு,  உளுத்தம்பருப்பு, பச்சரிசி ஒவ்வொன்றையும் தனித்தனியாக இரண்டு மணி நேரம்  ஊறவிடவும். பிறகு, தனித்தனியாக நன்றாக அரைத்துக் கொள்ளவும். மாவை ஐந்து மணி  நேரம் புளிக்க விடவும். பிறகு, அவற்றை ஒன்றாக சேர்த்து உப்பு, முருங்கைக்  கீரை சேர்த்து, நன்கு கலக்கவும். தோசைக் கல்லை சூடாக்கி, எண்ணெய் தேய்த்து,  கனமான தோசையாக வார்க்கவும். இருபுறமும் எண்ணெய் விட்டு வெந்தவுடன்  எடுத்துப் பரிமாறலாம்.
காரக்குழம்புடன் சாப்பிட, சுவை அபாரமாக இருக்கும்! 
சோள தோசை
தேவையானவை: வெள்ளைச் சோளம், பச்சரிசி - தலா ஒரு கப், உளுத்தம்பருப்பு - இரண்டு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:  வெள்ளைச் சோளம், பச்சரிசி, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை தனித்தனியாக இரண்டு  மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, தனித்தனியாக அரைக்கவும். பிறகு, எல்லா  மாவையும் ஒன்றாக கலந்து, உப்பு சேர்க்கவும். இந்த மாவை, 10 முதல் 12 மணி  நேரம் வரை புளிக்க வைக்கவும். சூடான தோசைக் கல்லில், எண்ணெய் தேய்த்து,  ஓரத்தில் இருந்து உள்பக்கம் வரும் வகையில் மாவை விடவும். இருபுறமும்  எண்ணெய் விட்டு, திருப்பிப் போட்டு, வெந்ததும் எடுக்கவும்.
இதற்குத் தொட்டுக்கொள்ள காய்கறி குருமா சூப்பராக இருக்கும்! 
ஜவ்வரிசி தோசை 
தேவையானவை: ஜவ்வரிசி  - ஒரு கப், புழுங்கல் அரிசி - ஒன்றரை கப், வெங்காயம் - ஒன்று (பொடியாக  நறுக்கியது), பச்சை மிளகாய் - 5 (பொடியாக நறுக்கியது), இஞ்சி - சிறிய  துண்டு (பொடியாக நறுக்கியது), கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் -  தேவையான அளவு.
செய்முறை: ஜவ்வரிசியைக்  கழுவி, தண்ணீரை நன்கு வடிகட்டி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். அவ்வப்போது  இதனைக் கிளறினால்தான் முழுமையாக ஊறும். புழுங்கல் அரிசியை இரண்டு மணி  நேரம் ஊற வைத்து, நன்கு கழுவி அரைக்கவும். அரிசி நன்கு அரைபட்டவுடன்...  ஜவ்வரிசி, உப்பு சேர்த்து நைஸாக அரைத்தெடுக்கவும். மாவை இரண்டு மணி நேரம்  புளிக்க விடவும். கடாயில் எண்ணெய் விட்டு... நறுக்கிய வெங்காயம், பச்சை  மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, மாவில் கொட்டிக் கலக்கவும்.
தோசைக் கல் சூடானதும் எண்ணெய் தேய்த்து, மாவை மெல்லிய தோசைகளாக வார்த்து, வெந்தவுடன் எடுத்துப் பரிமாறவும்.
புதினா சட்னியுடன் சாப்பிட்டால், டேஸ்ட் கூடுதலாக இருக்கும்!
சோயாபீன்ஸ் தோசை
தேவையானவை: சோயாபீன்ஸ்  - ஒரு கப் (10 மணி நேரம் ஊற வைக்கவும்), புழுங்கல் அரிசி - ஒரு கப் (ஒரு  மணி நேரம் ஊற வைக்கவும்), வெந்தயம் - ஒரு டீஸ்பூன் (அரிசியுடன் சேர்த்து ஊற  வைக்கவும்), உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஊறிய  சோயாபீன்ஸை அரைக்கவும். பிறகு... அரிசி-வெந்தயத்தை அரைத்துக் கொள்ளவும்.  இரண்டு மாவையும் ஒன்றாகக் கலந்து, உப்பு சேர்த்து ஒரு இரவு முழுவதும்  புளிக்க வைக்கவும். சூடான தோசைக் கல்லில் எண்ணெய் தேய்த்து, மாவை விட்டு  தோசைகளாக வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு எடுக்கவும். 
இதற்குத் தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி சிறந்த காம்பினேஷன்!
வெங்காய தோசை
தேவையானவை: பச்சரிசி  - ஒரு கப், உளுத்தம்பருப்பு - அரை கப், புழுங்கல் அரிசி - 3 கப்,  வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது), பச்சை மிளகாய் - 4, கடுகு - கால்  டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசி,  உளுத்தம்பருப்பு, புழுங்கல் அரிசி ஆகியவற்றை தனித்தனியாக 2 மணி நேரம் ஊற  வைக்கவும். அவற்றை தனித்தனியாக அரைத்து, ஒன்றாக்கி, உப்பு சேர்த்துக்  கலக்கவும். இந்த மாவை ஒரு இரவு புளிக்க விடவும். 
பிறகு, கடாயில் எண்ணெய் விட்டு  கடுகு, கறிவேப்பிலை தாளித்து... நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம்  சேர்த்து நன்கு வதக்கி, மாவில் கொட்டிக் கலக்கவும். சூடான தோசைக் கல்லில்  எண்ணெய் தேய்த்து, மாவை ஊத்தப்பம் போல் வார்த்து, எண்ணெய் விட்டு,  வெந்தவுடன் எடுக்கவும்.
தேங்காய் சட்னியுடன் பரிமாறினால், சுவை தூக்கலாக இருக்கும்.
செட் தோசை
தேவையானவை: பச்சரிசி,  புழுங்கல் அரிசி - தலா ஒரு கப் (இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்),  உளுத்தம்பருப்பு - அரை கப் (இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்), தேங்காய்  துருவல் - அரை கப், கேரட் துருவல் - அரை கப், நறுக்கிய கொத்தமல்லி -  சிறிதளவு, இட்லி மிளகாய்ப்பொடி - தேவையான அளவு, உப்பு, நெய் (அ) எண்ணெய் -  தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசி,  புழுங்கல் அரிசி, உளுத்தம்பருப்பை தனித்தனியாக தோசை மாவு பதத்தில்  அரைத்து, ஒன்றாக்கி, உப்பு சேர்த்துக் கலக்கவும். 10 முதல் 12 மணி நேரம்  வரை புளிக்க விடவும். தோசைக் கல்லை சூடாக்கி, எண்ணெய் தேய்த்து, சிறிது  கனமாக தோசை வார்க்கவும். அதன் மீது தேங்காய் துருவல் தூவி, மூடி போட்டு  மூடவும். சுற்றிலும் நெய் (அ) எண்ணெய் விட்டு வாசனை வந்ததும், மூடியைத்  திறந்து தோசையை எடுத்து தட்டில் வைக்கவும். இதேபோல் மற்றொரு தோசை செய்து,  அதில் கேரட் துருவலைத் தூவி மூடி... வெந்தவுடன் மூடியை எடுக்கவும். அதன்  மீது இட்லி மிளகாய்ப்பொடி, நறுக்கிய கொத்தமல்லி ஆகியவற்றை தூவி, ஏற்கெனவே  செய்து வைத்துள்ள தோசை மேல் வைக்க... செட் தோசை ரெடி!
இதனை தேங்காய் சட்னியுடன் பரிமாறலாம்.
அவல் தோசை
தேவையானவை: அவல், தயிர் - தலா 2 கப், பச்சரிசி, புழுங்கல் அரிசி - தலா ஒரு கப், சாதம்-கையளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அவலை  சுத்தம் செய்து கழுவி, கடைந்த தயிரில் சிறிது நேரம் ஊற வைக்கவும். இரண்டு  வகை அரிசியையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும். பிறகு, தயிரில் ஊற  வைத்த அவலுடன் சாதம் மற்றும் உப்பு சேர்த்து, தோசை மாவு பதத்தில்  அரைத்தெடுக்கவும். அதனை 5 முதல் 6 மணி நேரம் வரை புளிக்க விடவும். தோசைக்  கல்லை சூடாக்கி, எண்ணெய் தேய்த்து, மாவை எடுத்து ஓரத்தில் இருந்து  உள்பக்கம் வரும் வகையில் வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு வேக விடவும்.
இதற்கு காரச் சட்னி அருமையான காம்பினேஷன். 
குறிப்பு: மாலையில் தோசை செய்யத் திட்டமிட்டால், காலையிலேயே மாவை அரைத்து தயார் செய்துகொள்ள வேண்டும். 
கம்பு தோசை
தேவையானவை: கம்பு, புழுங்கல் அரிசி - தலா ஒரு கப், உளுத்தம்பருப்பு - அரை கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. 
செய்முறை: கம்பு,  புழுங்கல் அரிசி, உளுத்தம்பருப்பு மூன்றையும் தனித்தனியாக 2 மணி நேரம் ஊற  வைக்கவும். அவற்றை தோசை மாவுக்கு அரைப்பது போல் தனித்தனியாக அரைத்து,  ஒன்றாக்கி, உப்பு போட்டு 10 முதல் 12 மணி நேரம் வரை புளிக்க விடவும். சூடான  தோசைக் கல்லில் எண்ணெய் தேய்த்து, மாவை தோசைகளாக வார்த்து, இருபுறமும்  சுட்டு எடுக்கவும்.
தேங்காய் சட்னியுடன் பரிமாறினால் அபாரமாக இருக்கும்.                                      
ஓட்ஸ் தோசை
தேவையானவை: ஓட்ஸ்  - ஒரு கப், அரிசி மாவு, வறுத்த ரவை, கோதுமை மாவு - தலா கால் கப், பச்சை  மிளகாய் - 2, இஞ்சி - சிறிய துண்டு, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய்,  உப்பு - தேவையான அளவு, 
செய்முறை: பச்சை  மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றிரண்டாக தட்டிக் கொள்ளவும்.  இவற்றை ஒரு பாத்திரத்தில் போடவும். அதில் ஓட்ஸ், அரிசி மாவு, ரவை, கோதுமை  மாவு, உப்பு ஆகியவற்றையும் சேர்த்து, தண்ணீர் விட்டு ரவா தோசைக்கு மாவு  கரைப்பது போல் கரைத்துக் கொள்ளவும். சிறிது நேரம் கழித்து, தோசைக் கல்லில்  எண்ணெய் தேய்த்து, மெல்லியதாக மாவை வார்த்து, இருபுறமும் சுட்டு  எடுக்கவும்.
கீரை தோசை
தேவையானவை: புழுங்கல்  அரிசி, பச்சரிசி - தலா ஒரு கப், உளுத்தம்பருப்பு - கால் கப், பாலக் கீரை -  ஒரு கப், பச்சை மிளகாய் (விழுதாக அரைக்கவும்) - 3, சீரகம் - ஒரு டீஸ்பூன்,  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இரண்டு  வகை அரிசி, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை இரண்டு மணி நேரம் தனித்தனியாக ஊற  வைத்து, தனித்தனியாக அரைத்து, ஒன்றாக்கி, உப்பு சேர்த்துக் கலக்கவும்.  பாலக்கீரையை ஆய்ந்து, சுடு தண்ணீரில் வேக வைத்து அரைத்துக் கொள்ளவும்.  அரைத்த கீரை, சீரகம், பச்சை மிளகாய் எல்லாவற்றையும், அரைத்த மாவுடன்  சேர்க்கவும். தோசைக் கல்லில் எண்ணெய் தேய்த்து, மாவை வார்த்தெடுத்தால்...  கீரை தோசை தயார்.
ஊறுகாயுடன் பரிமாறினால் சுவையாக இருக்கும்! 
குறிப்பு: பாலக் கீரைக்கு பதிலாக, வல்லாரைக் கீரையும் சேர்க்கலாம். 
பீட்ரூட் தோசை தேவையானவை: தோசை மாவு - இரண்டு கப், அரைத்த பீட்ரூட் விழுது - அரை கப், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: தோசை மாவுடன் பீட்ரூட்  விழுதைச் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். தோசைக் கல்லில் ஊத்தப்பத்தை  விட மெல்லியதாக வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு வெந்தவுடன் எடுத்துப்  பரிமாறவும். 
சட்னி எதுவும் இல்லாமலே சாப்பிடலாம்.
கேரட் தோசை
தேவையானவை:  தோசை மாவு - இரண்டு கப், கேரட் விழுது - அரை கப், பொடித்த காய்ந்த மிளகாய்  - தேவைப்படும் காரத்துக்கு ஏற்ப, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. 
செய்முறை: தோசை  மாவில் கேரட் விழுது, பொடித்த காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து நன்கு  கலந்து கொள்ளவும். தோசைக் கல்லில் சிறிது கனமாக மாவை வார்த்து, இருபுறமும்  எண்ணெய் விட்டு வேகவிட்டு எடுக்கவும். விருப்பப்பட்டால் பொடியாக நறுக்கிய  வெங்காயத்தை மாவில் சேர்த்தும் செய்யலாம். 
இந்த தோசையை எந்த சட்னியுடனும் பரிமாறலாம்.
தக்காளி தோசை
தேவையானவை:  பச்சரிசி - ஒரு கப், புழுங்கல் அரிசி - அரை கப், நறுக்கிய தக்காளி - கால்  கிலோ, காய்ந்த மிளகாய் - 6, வெங்காயம் - ஒன்று, உப்பு, எண்ணெய் - தேவையான  அளவு.
செய்முறை:  இரண்டு அரிசியையும் தனித்தனியாக ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்துக்  கொள்ளவும். பிறகு, இரண்டு மாவையும் ஒன்றாக்கவும். கடாயில் சிறிதளவு எண்ணெய்  விட்டு... தக்காளி, காய்ந்த மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி, ஆற  வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். மாவு மற்றும் தக்காளி  கலவையை ஒன்றாக்கி, உப்பு போட்டு தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.  சூடான தோசைக் கல்லில் எண்ணெய் தேய்த்து, மாவை மெல்லிய தோசைகளாக வார்த்து,  இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். 
குறிப்பு: இந்த மாவை புளிக்க வைக்கத் தேவையில்லை.                                      
புதினா - கொத்தமல்லி தோசை
தேவையானவை: தோசை  மாவு - 2 கப், நறுக்கிய புதினா, கொத்தமல்லி (சேர்ந்தது) - ஒரு கப்,  எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, பூண்டு - 2 பல்.
செய்முறை: புதினா,  கொத்தமல்லி, பச்சை மிளகாய், பூண்டை மிக்ஸியில் போட்டு அரைத்து,  எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையை தோசை மாவுடன் கலந்து  கொள்ளவும். இதை தோசைக் கல்லில் எண்ணெய் தேய்த்து, தோசைகளாக வார்த்து  சுட்டெடுக் கவும்.
இது, வித்தியாசமான சுவையுடனும் மணத்துடனும் இருக்கும்.                                       
பப்பாளி தோசை
தேவையானவை: தோசை  மாவு - இரண்டு கப், பப்பாளிப்பழத் துண்டுகள் - ஒரு கப், பச்சை மிளகாய் (அ)  காய்ந்த மிளகாய் - 3, வெங்காயம் - ஒன்று, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:  கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் (அ)  காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும். கடைசியாக, பப்பாளிபழத் துண்டுகளைப்  போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும். ஆறியதும் உப்பு சேர்த்து அரைத்து, தோசை  மாவில் கலந்து... தோசைகளாக வார்த்தெடுக்கவும்.                                       
பனீர் தோசை
தேவையானவை: தோசை  மாவு - இரண்டு கப், பனீர் துருவல் - ஒரு கப், நறுக்கிய பச்சை மிளகாய் - 3,  பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, சீரகம் - ஒரு டீஸ்பூன், எண்ணெய்,  உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பனீர்  துருவலுடன் பச்சை மிளகாய், கொத்தமல்லி, சீரகம், உப்பு சேர்த்து நன்கு  கலந்து வைத்துக் கொள்ளவும். தோசைக் கல்லில் மாவை தோசையாக வார்த்து,  சுற்றிலும் எண்ணெய் விட்டு பாதி வெந்ததும் பனீர் கலவையை அதன் மேலே தூவி,  சிறிது நேரம் மூடி வைக்கவும். பிறகு மூடியைத் திறந்து தோசையை திருப்பி  போட்டு, வெந்தவுடன் எடுத்து சூடாகப் பரிமாறவும்.                                       
மசாலா தோசை
தேவையானவை: தோசை  மாவு - இரண்டு கப், உருளைக்கிழங்கு - கால் கிலோ, நறுக்கிய வெங்காயம் - ஒரு  கப், இஞ்சி - சிறு துண்டு, பூண்டு - 3 பல், நறுக்கிய பச்சை மிளகாய் - 4,  கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,  கறிவேப்பிலை - சிறிதளவு, பொட்டுக்கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், காரச்சட்னி  - சிறிதளவு, எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:  கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், நசுக்கிய  இஞ்சி, பூண்டு, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை ஒவ்வொன்றாக  சேர்த்து நன்கு வதக்கவும். ஒரு கப் தண்ணீர் விட்டு மஞ்சள்தூள், உப்பு  சேர்த்துக் கொதிக்க விடவும். வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து  நன்கு கிளறவும். அடுப்பிலிருந்து இறக்குவதற்கு முன், பொட்டுக்கடலை மாவு  தூவி, கெட்டியானதும் இறக்கி ஆற விடவும். மசாலா ரெடி!
தோசைக் கல் சூடானதும், எண்ணெய்  விட்டு, தோசை மாவை மெல்லியதாக வார்த்து, பாதி வெந்ததும் ஒரு பாதியில்  காரச்சட்னி தடவி... மறு பாதியில் கிழங்கு மசாலா வைத்து, நெய் விட்டு  மடிக்கவும். அதே போல் ஒவ்வொரு தோசையையும் தயார் செய்யவும்.
இந்த தோசையை சூடான சாம்பாருடன் பரிமாறினால் ருசியாக இருக்கும்.                                      
புளிப்பு-கார தோசை தேவையானவை: புழுங்கல்  அரிசி, பச்சரிசி - தலா ஒரு கப், கடலைப்பருப்பு - அரை கப், புளிக் கரைசல் -  ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் -  4, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு, 
செய்முறை: புழுங்கல்  அரிசி, பச்சரிசி, கடலைப்பருப்பைத் தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊற  வைக்கவும். அவற்றை ஒன்றாக்கி, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய்,  கறிவேப்பிலை சேர்த்து அரைக்கவும். கடைசியாக, உப்பு, புளிக் கரைசல்  சேர்த்து, 20 முதல் 30 நிமிடங்கள் வரை புளிக்க வைத்து, தோசைக்கல்லில்  எண்ணெய் தேய்த்து, தோசைகளாக வார்த்து எடுக்கவும்.
இதற்குத் தொட்டுக் கொள்ள சட்னி தேவையில்லை
பருப்புப் பொடி தோசை
தேவையானவை: தோசை மாவு - இரண்டு கப், நெய் - தேவையான அளவு.
பருப்புப் பொடிக்கு:  உளுத்தம்பருப்பு - ஒரு கப், கடலைப்பருப்பு - அரை கப், காய்ந்த மிளகாய் -  10, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எள் - ஒரு  டேபிள்ஸ்பூன், பூண்டு - 5 பல், உப்பு - தேவையான அளவு.
செய்முறை - பருப்புப் பொடி: வெறும்  கடாயில் உளுத்தம்பருப்பு போட்டு வறுத்து தனியே வைக்கவும்.  கடலைப்பருப்பைபையும் வறுத்து தனியே வைக்கவும். காய்ந்த மிளகாய்,  கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து தனியே வைக்கவும். எள்,  பூண்டு வறுத்து ஆற விடவும். ஆறியவுடன், வறுத்த பருப்புகள், காய்ந்த  மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு  பொடி செய்யவும். அதனுடன் வறுத்த எள், பூண்டு சேர்த்து சிறிது நேரம் சுற்றி  எடுத்தால்... பருப்புப் பொடி ரெடி! ஆறியவுடன், காற்றுப்புகாத டப்பாவில்  அடைத்து வைக்கவும்.
தோசைக் கல்லில் எண்ணெய்  தேய்த்து, மாவை சற்று கனமாக விட்டு, பருப்புப் பொடியை மேலே தூவி அதன்மேல்  சிறிதளவு நெய் விட்டு மூடி வைக்கவும். இதனை, திருப்பிப் போட வேண்டாம்.  வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.
இந்த தோசைக்கு, சாம்பார் அல்லது தேங்காய் சட்னி சரியான சைட் டிஷ்!
கல் தோசை தேவையானவை: தோசை மாவு - இரண்டு கப்.
செய்முறை: சூடான  தோசைக் கல்லில், மாவை சற்று கனமாக விட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு  மூடி, மிதமான தீயில் வேக விடவும். அப்போதுதான் ஓரத்தில் முறுகலாகவும்,  நடுவில் 'மெத்'தென்றும் இருக்கும். இதனை ஒரு பக்கம் மட்டுமே வேக வைக்க  வேண்டும். 
எந்த சட்னி வைத்து பரிமாறினாலும் சுவையாக இருக்கும்.                                      
பீட்சா தோசை
தேவையானவை:  இட்லி மாவு - 2 கப், நறுக்கிய வெங்காயம், குடமிளகாய், தக்காளி - தலா  ஒன்று, பச்சை மிளகாய் - 2, சீஸ் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், தக்காளி கெட்சப்  - ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், பூண்டு - 2 பல்,  மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. 
செய்முறை:  கடாயில் வெண்ணெய் விட்டு நறுக்கிய பூண்டு, வெங்காயம், குடமிளகாய், பொடியாக  நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, மிளகுத்தூள் போட்டு வதக்கி... தக்காளி,  சிறிதளவு சீஸ் துருவல் சேர்த்து இறக்கவும்.
தோசைக் கல் சூடானதும் எண்ணெய்  தேய்த்து, சற்று தடிமனாக மாவை வார்த்து மூடி வைத்து, அடுப்பை மிதமான தீயில்  வைக்கவும். பிறகு, மூடியைத் திறந்து.. தோசை மீது தக்காளி கெட்சப் விட்டு,  வதக்கிய காய்கறியைப் பரப்பி, கடைசியாக வெண்ணெய், சிறிதளவு சீஸ் துருவல்  ஆகியவற்றைத் தூவி, வாசனை வந்ததும் எடுத்துப் பரிமாறவும்.                                       
நெய் தோசை
தேவையானவை:  புழுங்கல் அரிசி - கால் கிலோ, பச்சரிசி - 100 கிராம், உளுந்து - 75  கிராம், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புழுங்கல்  அரிசி, பச்சரிசி, உளுந்து-வெந்தயம் ஆகியவற்றை இரண்டு மணி நேரம்  தனித்தனியாக ஊற வைக்கவும். பிறகு, நன்கு கழுவி தனித்தனியாக அரைத்து,  ஒன்றாக்கி, உப்பு போட்டு 10 முதல் 12 மணி நேரம் வரை புளிக்க விடவும்.
தோசைக் கல்லை சூடாக்கி, எண்ணெய்  தேய்த்து, ஒரு கரண்டி மாவு எடுத்து, மெல்லியதாக வார்க்கவும். சுற்றிலும்  எண்ணெய் விடவும். வெந்தவுடன், நெய் விட்டு மடித்து சூடாகப் பரிமாறவும். 
தோசை வெந்தவுடன், அதன்  நடுவிலிருந்து ஓரம் வரை தோசை கரண்டியால் நீளவாக்கில் வெட்டி (ஒரு பக்கம்  மட்டும்), மடித்தால், ஹோட்டல்களில் நெய் தோசை கொடுப்பது போலவே, வீட்டிலும்  கோன் வடிவில் குழந்தைகளுக்கு பரிமாறலாம்.
இந்தத் தோசைக்கு எந்த வகை சட்னியும் சுவை சேர்க்கும்.                                      
காளான் தோசை
தேவையானவை: தோசை  மாவு - இரண்டு கப், காளான் - ஒரு கப், நறுக்கிய வெங்காயம் - கால் கப்,  மிளகுத்தூள், சீரகத்தூள், குழம்புப் பொடி - தலா ஒரு டீஸ்பூன், நசுக்கிய  பூண்டு - 2 பல், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில்  எண்ணெய் விட்டு, வெங்காயத்தை நன்கு வதக்கவும். நசுக்கிய பூண்டு,  மிளகுத்தூள், குழம்பு பொடி, உப்பு சேர்த்து... பச்சை வாசனை போகும் வரை  வதக்கவும். சுத்தம் செய்து நறுக்கிய காளான் சேர்த்து மீண்டும் நன்கு வதக்கி  கொஞ்ச நேரம் மூடி வைக்கவும். தண்ணீர் முழுவதும் வற்றியவுடன் சீரகத்தூள்  தூவி கிளறி இறக்க... காளான் ரெடி!
தோசைக் கல் சூடானதும், எண்ணெய்  தேய்த்து, தோசை வார்த்து, காளான் கலவையை, அதன் மீது வைத்து, நறுக்கிய  வெங்காயம், கொத்தமல்லி தூவி சிறிது நேரம் மூடி வைத்தால், தோசை தயார்.  இதேபோல் ஒவ்வொரு தோசையையும் தயார் செய்து பரிமாறவும். 
முட்டைகோஸ் தோசை
தேவையானவை: தோசை  மாவு - இரண்டு கப், நறுக்கிய முட்டைகோஸ் - கால் கிலோ, காய்ந்த மிளகாய் -  6, நறுக்கிய வெங்காயம் - ஒன்று, உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,  கொத்தமல்லி - சிறிதளவு, தக்காளி - 2, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:  கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு சேர்த்து வறுக்கவும். பிறகு...  வெங்காயம், முட்டைகோஸ், கிள்ளிய காய்ந்த மிளகாய், நறுக்கிய தக்காளி,  கொத்தமல்லி, உப்பு போட்டு வதக்கவும். ஆறியவுடன், மிக்ஸியில் சேர்த்து  கெட்டியாக அரைக்க... முட்டைகோஸ் மசலா தயார்!
கல்லில் எண்ணெய் தேய்த்து, தோசை  மாவை மெல்லியதாக வார்த்து, முட்டைகோஸ் மசாலாவை அதன்மேல் தடவி, சிறிது நேரம்  வேகவிட்டு, சூடாகப் பரிமாறவும்.
வெஜிடபிள் மிக்ஸ் தோசை
தேவையானவை:  தோசை மாவு - இரண்டு கப், கேரட், பீன்ஸ், பட்டாணி, நறுக்கிய காலிஃப்ளவர்  (கலந்தது) - ஒரு கப், சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் -  அரை டீஸ்பூன், முந்திரி, திராட்சை - தலா 5, கறிவேப்பிலை, கொத்தமல்லி,  புதினா - சிறிதளவு, வெங்காயம்-2, காரச்சட்னி - சிறிதளவு, எண்ணெய், உப்பு -  தேவையான அளவு.
செய்முறை: சுத்தம்  செய்து நறுக்கிய காய்கறிகளை உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.  கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் போட்டு வதக்கவும். அதனுடன் முந்திரி,  திராட்சை, சாம்பார் பொடி, கரம் மசாலாத்தூள், நறுக்கிய கறிவேப்பிலை,  கொத்தமல்லி, புதினா, வேக வைத்த காய்கறிகள் என ஒவ்வொன்றாகச் சேர்த்து,  தண்ணீர் கொஞ்சம்கூட இல்லாமல் வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
தோசைக்கல்லில் எண்ணெய் தேய்த்து,  மாவை மெல்லியதாக வார்க்கவும். லேசாக வெந்ததும், கெட்டியான காரச்சட்னியை  கொஞ்சம் போல தோசை மீது தடவி, நடுவில் காய்கறி கலவையை வைத்து சுருட்டவும்.  இதேபோல் ஒவ்வொரு தோசையையும் தயார் செய்து பரிமாறவும்.
கருப்பட்டி தோசை
தேவையானவை: புழுங்கல்  அரிசி, பச்சரிசி - தலா ஒரு கப், உளுத்தம்பருப்பு - கால் கப், வெந்தயம் -  ஒரு டீஸ்பூன், கருப்பட்டி - கால் கிலோ, தேங்காய் துருவல் - அரை கப்,  ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், சுக்குப்பொடி - அரை டீஸ்பூன், வறுத்து,  ஒன்றிண்டாகப் பொடித்த வேர்கடலை - ஒரு கப்.
செய்முறை:  புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை இரண்டு  மணி நேரம் தனித்தனியாக ஊற வைத்து, அரைத்து ஒன்றாகக் கலக்கவும். பிறகு, 10  முதல் 12 மணி நேரம் வரை புளிக்க வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் பொடித்த  கருப்பட்டி சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு, கரைத்து வடிகட்டவும். அந்தக்  கரைசலை லேசாக கொதிக்க வைத்து, ஆற வைத்து.. தேங்காய் துருவல்,  ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி சேர்த்துக் கலந்து தோசை மாவில் விட்டு நன்கு  கலந்து கொள்ளவும்.
தோசைக் கல் சூடானதும் எண்ணெய்  தேய்த்து, மாவை கனமாக வார்த்து, பொடித்த வேர்க்கடலையை அதன் மீது போட்டுப்  பரப்பி, மூடவும். தீயை மிதமாக வைத்து, வேகவிட்டு எடுக்கவும். இதேபோல்  ஒவ்வொரு தோசையையும் தயார் செய்து பரிமாறவும்.