Monday, August 30, 2010

ஜெ. மீது பாயும் குஷ்பு

'இனி அதிரடி பிரசார பீரங்கி இவர்தான்!' என தி.மு.க-வில் குஷ்பு இணைந்தபோது எதிர்பார்ப்பு எகிறியது. ஆனால், அறிமுகக் கூட்டத்துக்கு அப்புறம் குஷ்பு பெரிதாக ஏதும் பேசவில்லை. வாய்ப்பு கிடைக்கவில்லையா... அவர் காரசார அரசியல் பேச விரும்பவில்லையா என்பது விளங்காத ஒன்றாகவே இருந்தது. இந்நிலையில் ஜெயலலிதாவும் விஜயகாந்த்தும் தொடர்ந்து தங்கள் தலைவரைக் காய்ச்சி எடுப்பது... தி.மு.க. தலைமையை யோசிக்கவைத்தது. இருவருக்கும் பதிலடி கொடுக்க... சீக்கிரமே குஷ்புவை சுதந்திரமாகக் களத்தில் இறக்கிவிட தி.மு.க. தரப்பு தயாராகி வருவதாகச் சொல்லப்படுகிறது. ஜூ.வி-யிடம் இங்கே பேசுகிறார் குஷ்பு -
''கோவை, திருச்சி என ஜெயலலிதா செல்கிற இடம் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறதே..?''
''உண்மைதான்... ஆனால், அது மக்கள் கூட்டம் அல்ல. இன்னமும் ஏதோ ஒரு நம்பிக்கையில் அ.தி.மு.க-வில் அல்லாடிக்கொண்டு இருக்கும் அனைத்து மாவட்டத் தொண்டர்களின் கூட்டம் அது. கடந்த தேர்தலில் தோற்றவுடன் தூக்கம், ஓய்வு என்று அறையைவிட்டு வெளியே வராமல் இருந்த எதிர்க் கட்சித் தலைவர், இப்போதுதான் வெளியே தலை காட்டத் தொடங்கி இருக்கிறார். அவரை நேரில் பார்த்தே நாலரை வருடங்களாகிவிட்டன. அதனால், அவரை வேடிக்கை பார்க்க அவருடையகட்சிக்காரர்கள் திரளத்தானே செய்வார்கள்! 'கவுன்ட் டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது' என்கிறார் அவர். ஆனால், அது எதற்கான கவுன்ட் டவுன் தெரியுமா? விரலைச் சுண்டியவர் அடியோடு விழப்போகிறார் என்பதற்கான கவுன்ட் டவுன் தான் இது!''
''திருச்சி பொதுக்கூட்டத்தில் முதல்வர் மகள் செல்வி உள்பட குடும்ப உறுப்பினர்களையும் ஜெயலலிதா தாக்கி இருக்கிறாரே?''
''தலைவருக்கும் எதிர்க் கட்சித் தலைவருக்கும் தான் இங்கே போட்டி! அப்படி இருக்க தலைவரின் குடும்ப உறுப்பினர்களை வம்புக்கு இழுப்பது கொஞ்சமும் பண்பு இல்லை. பண்பாடு, கலாசாரம் என மரபுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தமிழகத்தில், மூத்தோர்களை மதிக்க வேண்டும் என்பதுதான் முக்கியமானது. அந்த விதத்தில் தலைவர் கலை ஞரின் வயதையாவது மனதில்கொண்டு பேசி இருக்க வேண்டும். ஆக்கபூர்வ வாதங்களை வைப்பதற்கு பதிலாக, அடுப்படிக்குள் நுழையலாமா?
எங்கள் தரப்பிலும் இந்த அளவுக்குக் கீழே இறங்கி வந்து பேச எவ்வளவு நேரமாகிவிடும்? ஆனால், தலைவர் கலைஞர் எங்களைப் அப்படிப் பழக்கவில்லை. சமீபத்தில் நடந்த பேச்சாளர்கள் கூட்டத்தில்கூட, 'எதிரிகளையும் நாகரிகமாகப் பேசுங்கள்' என்றுதான் சொல்லி இருக்கிறார்!''
''செல்வியின் பெங்களூரு வீட்டுக்கு ஓய்வு என்கிற பெயரில் கருணாநிதிசெல்வதே கர்நாடக அரசுடன் பிசினஸ் குறித்து பேசுவதற் காகத்தான் என்கிறாரே ஜெயலலிதா?''
''மகளின் வீட்டுக்கு ஓய்வெடுக்கப் போகா மல், அடுத்தவர் வீட்டுக்கா போக முடியும்? இது என்ன பேச்சு? மாநிலத்துக்கே தலைவராக இருந்தாலும், மகளுக்கு தந்தை என்கிற கடமையை அவர் கைவிட முடியுமா என்ன? பொறுப்பான எதிர்க் கட்சித் தலைவராக இருந்து போராட வேண்டிய அவர், எந்நேரமும் கொடநாடு, சிறுதாவூர் பங்களாக்களில் தங்கி இருந்தாரே... அதை என்ன சொல்வதாம்? இன்றைக்கு இருக்கும் நவீன யுகத்தில், யாருக்கும் தெரியாமல் எதையாவது பேச வேண்டும் என்றால்... அதை நேரில் போய்ப் பார்த்துத்தான் பேச வேண்டும் என்கிற தேவை இல்லை. இதுகூடத் தெரியாமல் மகள் வீட்டுக்குப் போனதைவைத்து, கர்நாடக அரசுடன் கூட்டு எனக் கதை கட்டுவது கணக்கிலும் அடங்காத அவதூறு. எதையாவது பேசி மக்களை நம்பவைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அவரைக் கண்டுகொள்ளாமல் விடுவதுதான் நல்லது!''
''காய்கறி தொடங்கி மளிகை சாமான்கள் வரை விலைவாசி உயர்ந்துவிட்டதாக மாஜி முதல்வர் பேசும் பேச்சில் நியாயம் உள்ளதாகத்தானே தெரிகிறது?''
''அண்மையில் ஒரு புத்தகம் படித்தேன். அதில் ஒரு பழமொழி... 'யானை கட்டிப் போரடிச்சாலும், பானை சட்டி சரியில்லை!'ன்னு கிராமங்களில் சொல்வார்களாம். எத்தனையோ ஆக்கபூர்வ முன்னேற்றங்களைத் தமிழகம் செய்தாலும், தவிர்க்க முடியாத சில பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். விலைவாசி உயர்வு உலகளாவிய விஷயம். நடுத்தரக் குடிமகளாக நானும் கடைக்கு நேரடியாகப் போய் காய்கறி வாங்குகிற ஆள்தான். இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டால், தமிழகத்தில் காய்கறி, மளிகைப் பொருட்களின் விலை எவ்வளவோ குறைவு. சென்னையில் மழைக் காலத்தில் டிராஃபிக் ஜாம் ஏற்படுகிறது என்றுகூட அ.தி.மு.க-வினர் போராட்டம் நடத்துகிறார்கள். மழையை சமாளிக்க முடியாமல் தலைநகர் டெல்லியே தடுமாறுகிறது. சீனாவில் மழைக் காலத்தில் 100 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க 10 நாட்களுக்கும் மேலாகிறது. இத்தகைய நிகழ்வுகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால், தமிழகம் எந்த அளவுக்கு வளமாக இருக்கிறது என்பது புரியும். தி.மு.க-வைக் குற்றம்சாட்டும் குறிக்கோளுடன் இயங்குபவர்களுக்கு இதெல்லாம் புரியாது!''
''அடுத்தபடியாக மதுரையிலும் சக்தி மிகுந்த கூட்டத்தைத் திரட்ட ஜெ. தயாராகி வருகிறாரே?''
''மதுரையில் என்ன... அவர் மலேசியாவுக்கு வேண்டுமானாலும் போய் போராட்டம் நடத்தட்டும். எங்களைப் பொறுத்தமட்டில் அவருடைய கூட்டத்தை வேடிக்கையாகத்தான் பார்க்கிறோமே தவிர, போட்டியாகப் பார்க்க வில்லை. மதுரையில் அவர் எத்தகைய கூட் டத்தைக் கூட்டினாலும், அதனால் தி.மு.க-வுக்குத் துரும்புகூட பாதிக்காது!''
''தி.மு.க-வின் பிரசார சக்தியாகப் பேசப்பட்ட நீங்கள், இதுகாலம் வரை பெரிதாக ஏதும் தடாலடி காட்டவில்லையே... நீங்களும் கோஷ்டிப் பூசலில் சிக்கிவிட்டீர்களா?''
(சிரிக்கிறார்) ''அப்படி எல்லாம் ஏதும் இல்லை... நான் தி.மு.க-வில் அடிப்படைத் தொண்டராகத்தானே இணைந்தேன். பெரிய தலைவராகவோ, மாபெரும் கூட்டத்தோடோ நான் கட்சிக்குள் வரவில்லை. அதனால், ஈகோ, மன வருத்தம் என எந்தப் பிரச்னைகளும் இல்லை. நான் அரசியலுக்கு வருவதற்கு முன்னரே நன்றாகப் பேசக்கூடிய ஆள். இப்போது தடாலடியாகப் பேச வேண்டிய இக்கட்டோ கட்டாயமோ இல்லை! நான் இப்போது தேர்தல் களத்தில் பேசுவதற்கான தயாரிப்புகளில் இருக்கிறேன். கட்சியின் வரலாறுகளில் தொடங்கி தலைவரது போராட்ட வாழ்க்கை வரை அனைத்தையும் எடுத்துப் படித்துக்கொண்டு இருக்கிறேன். கழக ஆட்சியின் சாதனைகளையும் படித்து வருகிறேன். எதிர்க் கட்சிகளின் பிரசாரத்தைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. தலைவர் செய்த நல்ல காரியங்களைச் சொன்னாலே போதும்!''
''எதிர்க் கட்சியினர் திட்டுவது இருக்கட்டும்... உங்கள் கூட்டணியில் இருக்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களே தி.மு.க-வை வறுத்தெடுக்கிறார்களே?''
''கூட்டணி குறித்த கருத்து வேறுபாடுகளைப் பேசுகிற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. அதே நேரம் சம்பந்தமே இல்லாத காரணங்களுக்காகத் தலைவரைக் குறிவைத்து சிலர் பேசுவதைத் தாங்கிக்கொள்ள முடிய வில்லை. ஆனாலும், தலைவருக்காகவே அத்தனையையும் பொறுத்துக்கொண்டு அமைதி யாக இருக்கிறோம்!''

No comments:

Post a Comment