Tuesday, August 10, 2010

தன்னம்பிக்கையின் மறுபெயர்... ஜெஸிக்கா!

'கம்பெனியை திறம்பட எப்படி நடத்துவது?' என்று ஒவ்வொரு மாதமும் ஒரு புகழ்பெற்ற நிபுணரை அழைத்து வந்து கம்பெனியின் உயர் அதிகாரிகளுக்குப் பயிற்சி கொடுப்பது அந்த நிறுவனத்தின் வழக்கம். வழக்கம்போல அன்றும் உயர் அதிகாரிகள் கான்ஃபரன்ஸ் ஹாலில் குழுமியிருக்க... ஜெஸிக்கா காக்ஸ் என்ற 25 வயது பெண், அவர்கள் முன்வந்து நின்று மைக்கை பிடிக்க... அத்தனை பேரும் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள். காரணம், அந்த இளம் பெண்ணுக்கு இரண்டு கைகளும் இல்லை.

'இன்னும் ஒரு நிமிடம் மௌனமாக நின்றால், தன்னை பரிதாபப் பார்வை பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள்' என்பதை உணர்ந்த ஜெஸிக்கா, "கம்பெனியை திறம்பட நடத்துவது எப்படி என்பது சொல்லிக் கொடுப்பதில் நான் 'கை' தேர்ந்தவள் இல்லைதான். ஆனால்... தடைகளை எப்படித் தாண்டி வருவது என்பதை என் அனுபவம் உங்களுக்கு சொல்லிக் கொடுக்கக் கூடும்" என்று ஆரம்பிக்க, சில நிமிடங்களிலேயே ஜெஸிக்காவின் பேச்சோடு அங்கிருந்த ஒவ்வொருவரும் ஒன்றி விட்டார்கள்.
ஆம்! தன்னுடைய வாழ்க்கையைத்தான் அடுத்தவர்களுக்கு பாடமாக சொல்கிறார் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த இந்த ஜெஸிக்கா. பிறக்கும்போதே இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்த குழந்தையான ஜெஸிக்காவைப் பார்த்துப் பதைபதைத்துப் போன தாயும், தந்தையும் 'எப்படியாவது மகளின் குறையைச் சரிசெய்துவிடவேண்டும்' என்று துடித்தார்கள். உலகத்தின் எந்தனை பெரிய மருத்துவமனைக்கு சென்றாலும், எத்தனை பெரிய டாக்டரைப் பார்த்தாலும் அந்தக் கைகளைச் சரி செய்ய முடியாது என்பதை ஒருகட்டத்தில் உணர்ந்தவர்கள்... ஜெஸிக்காவின் மீது நம்பிக்கை வைக்கத் துவங்கினார்கள்.
மூன்றாவது வயதிலேயே ஜிம்னாசியம் வகுப்புகளுக்கு செல்லத் துவங்கி னாள் ஜெஸிக்கா. ஆறாவது வயதில் நீச்சல் வகுப்புகளுக்கு சென்றாள். இரண்டு கைகள் இல்லையென்றாலும் தன் கால்களைக் கொண்டு தானே தலை வாரிக்கொள்வது துவங்கி, கண்களுக்கு மை இட்டுக் கொள்வது வரை அத்தனை காரியங்களையும் செய்து கொண்டாள். வளர வளர... டைப் அடிப்பது, கார் ஓட்டுவது, சமைப்பது, பாத்திரம் கழுவுவது என்று ஒரு வேலை பாக்கியில்லாமல் தன்னுடைய அத்தனை வேலைகளையும் தானே பார்த்துக் கொண்டாள். 'டொக்குவான் டூ' எனப்படும் தற்காப்புச் சண்டையில் கறுப்பு பெல்ட் வாங்கும் அளவுக்கு முன்னேறினார்.
இதையெல்லாம் பார்த்து எல்லோரும் அசந்து கொண்டிருக்க... அத்தனைக்கும் சிகரம் வைத்த மாதிரி, யாரின் துணையும் இல்லாமல் பயிற்சி விமானத்தில் தன்னந்தனியாக பறந்து ஜெஸிக்கா சாதனை படைக்க... அரசு விமான பைலட்டுக்கான உரிமத்தை சமீபத்தில் கொடுத்திருக்கிறது அமெரிக்க அரசு.
"விமானத்தின் காக்பிட்டில் உட்கார்ந்தபிறகு ஸீட் பெல்ட் போடுவதைவிட, ஸீட்பெல்ட் போட்டுக்கொண்டே உட்காருவதுதான் வசதி என்பது துவங்கி, விமானம் ஓட்டுவதில் இருக்கும் ஒவ்வொரு நுட்பமான விஷயத்தையும் எனக்கேற்றவாறு கற்றுக்கொள்ள எனக்கு மூன்று பயிற்சியாளர்களும் மூன்று வருடங்களும் தேவைப்பட்டன!" என்கிறார் ஜெஸிக்கா எளிமையாக.
மனிதன், இயற்கையின் படைப்பு! என்றாலும் அது எல்லோரையும் சமமாக படைத்துவிடுவதில்லை. அவ்வப்போது தப்புகளையும் தவறுகளையும் செய்துவிடுகிறது இயற்கை. ஆனால், 'அதையெல்லாம் தன்னம்பிக்கையால் திருத்த முடியும்' என்று செயலில் காட்டிக் கொண்டிருக்கும் ஜெஸிக்கா, உலகத்துக்கே ஓர் உன்னத உதாரணம்!

No comments:

Post a Comment