Tuesday, August 17, 2010

மறந்துபோன தென்னிந்தியா... மானம்காத்த தென்னாப்பிரிக்கா..!

சாந்தியை ஞாபகமிருக்கிறதா? கத்தார் நாட்டின் தலைநகரம் தோஹாவில், 2006-ம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில், வெள்ளிப்பதக்கம் வாங்கிய புதுக்கோட்டை பெண். வாங்கிய பதக்கத்தை சாந்தி சந்தோஷத்தோடு உச்சி முகர்வதற்குள், 'அவர் பெண்ணே இல்லை' என்று கிளம்பிய பாலின சர்ச்சையின் பின்னணியில் அந்தப் பதக்கம் பறிமுதல் செய்யப்பட்டதும், சர்வதேச தடகள விளையாட்டு ஆணையத்தின் இந்த அநாகரிக போக்கை தடுக்க திராணியின்றி வாய்மூடி இந்திய தடகள கூட்டமைப்பு மௌனித்திருந்ததும்... மறந்து போகக் கூடியதா என்ன?!
அந்த 'ஃப்ளாஷ்பேக்'கை சில மாற்றங்களோடு மறுபடியும் ஓடவிடுவோமா?!
சாந்திக்கு எதிராக பாலின சர்ச்சை கிளப்பப்பட்டதும் நாடே திரண்டு வந்து அவர் துவண்டு போகாதிருக்க ஆதரவாக தோள் தருகிறது; சாலையில் இறங்கி பேரணி, கூட்டங்கள் என்று உலக சமுதாயத்தின் சட்டையைப் பிடித்து மக்கள் உலுக்குகின்றனர்; அரசியல் பேதங்களை மறந்து கட்சிகள் போராடுகின்றன; நாட்டின் உச்சபீடத்தின் தலைவர்கள்கூட இந்த போராட்டங்களில் கலந்து கொள்கிறார்கள். அரண்டுபோன சர்வதேச தடகள விளையாட்டு ஆணையம், பதக்கத்தை சாந்திக்கு திருப்பித் தருகிறது. ஆனந்த கண்ணீரோடு சாந்தி அடுத்த சாதனைக்குத் தயாராகிறார்.
'அடடே நன்றாகத்தான் இருக்கிறது கதை' என்கிறீர்களா? இது கதையல்ல... இதில் சொல்லப்பட்ட சம்பவங்களும், கண்ணீரும், போராட்டங்களும் நிஜமோ நிஜம். ஆனால், சம்பவம் நடந்தது இங்கல்ல, தென்னாப்பிரிக்காவில். அந்த தென்னாப்பிரிக்க சாந்தியின் பெயர் கேஸ்டர் செமன்யா.
கேஸ்டர் செமன்யா பிறந்தது, தென்னாப்பிரிக்காவில் இருக்கும் காமேசலாங் என்ற கிராமத்தில். மூன்று சகோதரிகள், ஒரு சகோதரர் என்று சராசரி குடும்பத்தில் பிறந்த செமன்யா, சிறுவயதிலேயே தடகளத்தில் தடம் பதிக்க ஆரம்பித்தார். வளர வளர உள்ளூர் போட்டிகள், உள்நாட்டு போட்டிகள் என்று அவர் சூடிய வெற்றிகள், தாய்நாட்டின் சார்பில் அவரை வெளிநாடுகளில் விளையாடவும் அனுப்பியது. பிரிட்டோரியா பல்கலைக்கழகத்தில், விளையாட்டு அறிவியல் முதலாமாண்டு மாணவியாக, பட்டப்படிப்பிலும் விளையாட்டை சேர்த்துக் கொண்ட செமன்யாவின் சுவாசமே தடகளம்தான் என்றாகிப் போனது.
சர்வதேச போட்டிகள் ஒவ்வான்றாக ஓடியோடி தங்கங்களை வாரிய செமன்யாவுக்கு, இறுதி இலக்காக ஒலிம்பிக்கிலும் தங்கம் வென்று, தன்னை செதுக்கிய தாய்நாட்டுக்குப் பெருமைச் சேர்க்க வேண்டுமென்பது கனவு. செமன்யாவின் அந்தக் கனவை தென்னாப்பிரிக்க தேசத்து மக்கள் ஒவ்வொருவரும் தீர்க்கமாக நம்பினர். அவரை உற்சாகப்படுத்துவதற்காகவே நாட்டில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு செமன்யாவின் பெயரைச் சூட்டினார்கள்.
தேசத்துக்கு நற்செய்தி கிடைத்தது! சென்ற வருடம் ஆகஸ்ட்டில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தடகளப்போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார் செமன்யா. தங்கள் வீட்டுப் பெண்ணே வென்றதாக தென்னாப்பிரிக்க மக்கள் மகிழ்ந்தனர். ஆனால், அந்த சந்தோஷத்துக்கு ஆயுள் அத்தனை கெட்டியாக இல்லை.
'எங்களது மருத்துவப் பரிசோதனைகளில் செமன்யாவின் பெண்தன்மை நிரூபணமாகவில்லை. அதனால் செமன்யா பெற்ற வெற்றியை செல்லாதது என அறிவிக்கிறோம்; பதக்கத்தையும் பறிமுதல் செய்கிறோம்' என்று குண்டுபோட்டது சர்வதேச தடகள விளையாட்டு ஆணையம்.
பெருமிதத்தோடு தாய்நாடு திரும்பிக் கொண்டிருந்த செமன்யா, பாதியிலேயே சோர்ந்து போனார். ஆனால், அவரை வரவேற்க ஜோஹன்ஸ்பெர்க் விமான நிலையத்தில் காத்திருந்த மக்கள் வெள்ளம் துளியும் கலையவில்லை. ஏற்பாடு செய்திருந்த கொண்டாட்டங்களில் இம்மி பிசகாது தங்களது வீராங்கனையை பெருமிதத்தோடு கௌரவித்தார்கள். செமன்யா, அதிபர் மாளிகைக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். அதிபர் ஜேக்கப் ஜுமா, வரவேற்று வாழ்த்துக்கள் சொன்னதோடு, 'பதக்கத்தைத் திருப்பித் தரவேண்டாம். சர்வதேச அரசியலை நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று தைரியம் சொன்னார்.
அதிபர் மட்டுமல்ல... செமன்யாவுக்கு ஆதரவாக நாடே உணர்வுப்பூர்வமாக திரண்டது. வழக்கமாக உலகப் பிரச்னைகளில் அடையாளம் காணப்படும் கறுப்பு - வெள்ளை கச்சேரி இதிலும் களைகட்டியது. இன துவேஷத்தோடு ஒரு சில ஐரோப்பிய நாடுகள் மருத்துவ அறிவியலைக் கக்கத்தில் வைத்துக் கொண்டு, செமன்யாவை வார்த்தைகளால் சுட்டன.
தென்னாப்பிரிக்க விளையாட்டுத்துறை தலைவர் லியோனார்ட், "எங்கள் நாட்டுப் பெண்ணை வரையறை செய்ய ஐரோப்பியர்கள் யார்? உங்கள் உயிரியல் பரிசோதனைகளை தூக்கி உடைப்பில் போடுங்கள். எங்களைப் பொறுத்தவரை செமன்யா பெண்தான். அவள் எங்கள் தேசத்தின் ஹீரோயின். செமன்யாவுக்கு நியாயம் கிடைக்க எந்த உச்ச வரையறையையும் உரசிப் பார்க்க நாங்கள் தயார். இந்த விவகாரத்தில் மூன்றாம் உலகப்போரே மூண்டாலும் சரி... நாங்கள் சும்மா விடப்போவதில்லை" என்றார் உச்சகட்ட கோபத்தோடு.
அமைச்சரின் இந்த உஷ்ணம் மக்கள் கொந்தளிப்பின் ஒட்டுமொத்த பிரதிலிப்பு. தென்னாப்பிரிக்காவின் இந்த எழுச்சி உலககெங்கிலும் மருத்துவம், உளவியல், விளையாட்டு, அரசியல் என பலப்பல மட்டங்களிலும் ஆரோக்கிய விவாதங்களை கிளப்பிவிட்டது.
குறிப்பாக, பாலினம் பற்றி உலக சமுதாயத்தில் ஆரோக்கியமான அனுகூலங்கள் உரசிப் பார்க்கப்பட்டன. உளவியல்பூர்வமாகவும் சரி, உடலியல்பூர்வமாகவும் சரி... ஆண் என்றோ, பெண் என்றோ திட்டவட்ட வரையறைகள் சொல்லிவிட முடியாது என்பதுதான் உண்மை. உணர்வுப்பூர்வமாக ஒவ்வொரு ஆணும் சில சந்தர்ப்பங்களில் தன்னுள் பெண்மையை உணர்வதும், ஒவ்வொரு பெண்ணும் தன்னுள் ஆண்மையை உணர்வதும் இயற்கையே. ஆண், பெண் தன்மைகளை தீர்மானிக்கும் ஹார்மோன்கள் எதிரெதிர் பாலினரிடமும் ஓரளவு உண்டு என்பதும் மருத்துவ உண்மை. இந்த ஹார்மோன் விகிதாச்சாரம், சிலசமயம் களேபரமாகும்போதுதான் சாந்திக்களும், செமன்யாக்களும் உயிரோடு அணு அணுவாகக் கொல்லப்படுகிறார்கள்.
செமன்யாவின் கண்ணீர் துடைக்க ஒவ்வொரு தென்னாப்பிரிக்கரும் முன்வந்தார்கள். உலக கவன ஈர்ப்பாக குடிமக்கள் ஏற்பாடு செய்த பிரமாண்ட பேரணியில் அதிபர் ஜேக்கப் ஜுமா கலந்து கொண்டார். செமன்யா... விளையாட்டு வீராங்கனை, பெண் என்பதையெல்லாம் தாண்டி, ஒரு மனிதப் பிறவியாக அவரது சிவில் மற்றும் லீகல் உரிமைகள் நசுக்கப்படுகின்றன என்று சொல்லி, சட்ட பாதுகாப்புக்காக 'டீவி அண்டு லிபோயட்' என்ற சர்வதேச சட்ட ஆலோசனை நிறுவனத்தை நாடினார் அந்நாட்டு விளையாட்டு அமைச்சர்.
தென்னாப்பிரிக்க ஃபேஷன் பத்திரிகைகள், செமன்யாவின் படங்களை அட்டையில் தாங்கி அழகாக வெளியாகின. சர்வதேச விளையாட்டு ஆணையத்தின் மருத்துவப் பரிசோதனை முறைகள் கடும் விமர்சனத்துக்குள்ளாகின. 'ஆணாதிக்க வெளிப்பாடே இந்த சச்சரவுகளுக்கு ஆழமான காரணம்' என்று சர்வதேச பெண்ணிய அமைப்புகள் சப்போர்ட்டுக்கு வந்தன.
இப்படியாக ஒரு சாதாரண கறுப்பின பெண்ணை மையப்படுத்தி இனவெறி, பெண்ணியம் என்றெல்லாம் சமுதாய சுனாமி உருவாவதை பார்த்து சர்வதேச தடகள விளையாட்டு ஆணையம் மிரண்டது. ஒருவழியாக ஓர் ஆண்டு இழுபறிக்குப் பின், ஜூலை ஆறாம் தேதி செமன்யாவுக்கு எதிரான தடைகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. தனக்காக போராடிய தேசத்துக்கு நன்றிக்கடன் தீர்க்க இப்போது நெகிழ்ச்சியுடன் பயிற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார் கேஸ்டர் செமன்யா. அக்டோபர் காமன்வெல்த் போட்டிகளில் அவரின் மின்னல் ஓட்டம் காத்திருக்கிறது.
சரி... இனி நம் தேசத்துக்கு வருவோம். எப்படி இருக்கிறார் புதுக்கோட்டை சாந்தி?
பதக்கம் பறிக்கப்பட்ட வேதனை, தற்கொலை வரை உந்திய சொந்த சோகம்... இன்னும் விடிவு பிறக்கவில்லை சாந்திக்கு. துவண்டு கிடப்பவரின் ஒரே ஆறுதல் மாநில அரசு வழங்கிய 15 லட்ச ரூபாய் ரொக்கப் பணம்... 5 ஆயிரம் ரூபாய் தொகுப்பு ஊதியத்துடன் விளையாட்டுப் பயிற்சியாளர் பொறுப்பு ஆகியவைதான். கிடைத்த லட்சங்களை வைத்துக் கொண்டு, புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார ஏழைக் குழந்தைகளுக்கு தடகள விளையாட்டுப் பயிற்சியளிப்பதில் ஆறுதல் தேடிக் கொண்டிருந்தார். ஆனால், கிடைத்த சொற்ப சம்பளத்தை வைத்துக் கொண்டு காலம் தள்ள முடியவில்லை. அதைப் பற்றி அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்தார். யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளாத நிலையில், மனம் வெறுத்துப்போய் விளையாட்டுப் பயிற்சியாளர் பொறுப்பை தற்போது ராஜினாமா செய்திருக்கிறார். 'பெங்களூரு, கொல்கத்தாவுல இருந்து, ஃபிட்னஸ் டிரெயினரா வர முடியுமா... 15 ஆயிரம் சம்பளம் தர்றோம்'னு கூப்பிட்டிருக்காங்க. அங்கயாச்சும் போகலாம்னுதான் வேலையை விட்டுட்டேன்' என்று சோகம் பொங்கச் சொல்லியிருக்கிறார் சாந்தி!
காந்தி, பின்னாளில் மகாத்மா என்று உருவாவதற்கு தென்னாப்பிரிக்க ரயில் சம்பவ மும் ஒரு காரணம் என்பது வரலாறு. மகாத்மா காந்திக்கு வழி செய்த தென்னாப்பிரிக்கா, அபலை சாந்திக்கும்கூட வழி காட்டியிருக்கிறது. ஆனால், நடைமுறையில் சாந்திகள் கடைத்தேறுவது நம்மூரில் சாத்தியம்தானா?

No comments:

Post a Comment