Wednesday, August 25, 2010

'வராமல் போன ஹெலிகாப்டர்!' காத்திருந்த பிரபாகரன் குடும்பம் '

கே.பி. எனப்படும் குமரன் பத்மநாபன் தினந்தோறும் அவிழ்த்துவிடும் கதைகள்
இலங்கை விவகாரத்தின் திகில் நிறைந்த பக்கங்களை மீண்டும் புரட்டிப் பார்ப்பதாக இருக்கின்றன. இதில் மிக முக்கியமானது பத்திரிகையாளர் டி.பி.எஸ்.ஜெயராஜுக்கு கே.பி. அளித்திருக்கும் பேட்டி!
டி.பி.எஸ்.ஜெயராஜ்... 56 வயதான பத்திரிகையாளர். தமிழீழப் போராட்டம் தொடர்பாக ஆங்கிலத்தில் எழுதி உலகளாவ அதிகம் கவனம் ஈர்த்தவர். இப்போது கே.பி-யிடம் மிக நீண்ட பேட்டி எடுத்துள்ளார் டி.பி.எஸ்.ஜெயராஜ். 2009-ம் ஆண்டு மே மாதம் பிரபாகரனின் மர்மத்துக்குப் பிறகு, 'தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்' எனத் தன்னை அறிவித்துக்கொண்ட குமரன் பத்மநாபன், மலேசியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். கொழும்பு சிறையில் அவரை அடைத்து சிங்கள ராணுவம் தொல்லை கொடுப்பதாக முதலில் தகவல் வந்தது. அதன் பிறகு, அமைச்சர் ஒருவரது இல்லத்தில் பாதுகாப்பாகத் தங்கி இருக்கிறார் என்று செய்தி பரவியது. திடீரென ஒருநாள், பத்திரிகையாளர்களுக்கு வெளிப்படையாகப் பேட்டியும் கொடுத்தார் குமரன் பத்மநாபன். வெளிநாட்டில் இருந்து வந்த புலம் பெயர் தமிழ்ப் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசவும் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு, 'கே.பி. இலங்கை அரசாங்கத்தின் கைப்பாவையாக மாறிவிட்டார். அவர் புலிகளின் நெட்வொர்க்கைக் காட்டிக் கொடுக்கும் காரியங்களை இப்போது திறம்படச் செய்கிறார்' என்று புலிகளின் ஆதரவு இணையதளங்கள் சொல்ல ஆரம்பித்தன. இலங்கை அரசு ஒருவரை எதிரியாகக் கைது செய்துவிட்டால், அதன் பிறகு அவர் ஒருக்காலும் இவ்வளவு சுதந்திரமாக நடமாட முடியாது. அதனால், கே.பி-யின் பேச்சும் செயல்பாடுகளும் ஒருவித சந்தேகத்துடன் பார்க்கப்படுவது இப்போது தவிர்க்க முடியாத ஒன்று!
பிரபாகரனுக்கும் மதிவதனிக்கும் திருமணம் நடந்தபோது மாப்பிள்ளைத் தோழனாக இருந்தவர் இதே கே.பி. ஈழத்துக்கான இறுதிப் போர் தருணத்தில் வெளிநாட்டில் இருந்தபடி தான் மேற்கொண்டதாகச் சில நடவடிக்கைகளை இப்போது பேட்டியில் கூறியுள்ளார் கே.பி. அதுதான், படுகூர்மையாக உலக அளவில் கவனிக்கப்படுகிறது. 'பிரபாகரன் தனது மரணத்தை எப்படிச் சந்தித்தார்?" என்ற தலைப்பில் கே.பி. அளித்துள்ள அந்தப் பேட்டியின் சில பகுதிகள் இதோ... "போர் உக்கிரம் அடைந்துவிட்ட நிலையில், வெளிநாட்டில் இருந்த என்னிடம் பிரபாகரனின் மகன் சார்லஸ் ஆண்டனி ஒரு விருப்பத்தை வெளியிட்டார். 'எனது குடும்பத்தினரை இங்கே இருந்து வேறு இடத்துக்குக் கொண்டுபோய்விட வேண்டும். எப்படியாவது அவர்களை வெளிநாட்டுக்குக் காப்பாற்றிக் கொண்டுபோக வேண்டும்' என்று சார்லஸ் சொன்னார். அதற்கான திட்டத்தை நான் வகுக்க ஆரம்பித்தேன். இலங்கையின் கடல் எல்லைக் குச் சற்று தூரத்தில் ஒரு கப்பலை நிறுத்தி வைத்துவிட்டு, நான் அங்கே காத்திருப்பது. பிரபாகரனின் குடும்பத்தினரை ஒரு ஹெலி காப்டர் மூலம் அந்தக் கப்பலுக்கு எப்படி யாவது கொண்டுவந்துவிடுவது. பிறகு, அங்கே இருந்து வெளிநாட்டுக்குக் கூட்டிச் செல்வது என்பதே திட்டம். இருந்த உக்ரேனியத் தொடர்பைப் பயன்படுத்தி, பழைய ஹெலிகாப்டர் ஒன்றை வாங்கிக்கொள்ளத் தீர்மானித்தேன். வான் புலிகளில் திறமையான விமானிகள் இருக்கிறார்கள். அவர்களில் யாரேனும் இருவரை இதற்காகப் பயன்படுத்தலாம் என்று நினைத்தேன். இந்த ஹெலிகாப்டரை வன்னிக்குக் கொண்டுபோய் இறக்குவது என்றும், பிரபாகரன், சார்லஸ் ஆண்டனி தவிர, அவரது குடும்பத்தில் இருந்த மற்றவர்களை ஏற்றிக்கொண்டு செல்வது எனவும் திட்டமிட்டேன்.
முடிந்தால், பிரபாகரனையும் அவருடன் இருக்கும் இயக்கத்தின் மூத்த தளபதிகள் மற்றும் அவரது மெய்க்காப்பாளர்களையும் சிங்களப் படையால் நெருங்க முடியாதபடி இலங்கையின் வேறு அடர் காட்டுப் பகுதிக்குள் கொண்டுசேர்ப்பது என்றும் திட்டமிட்டேன். இரண்டு ஆப்பிரிக்க நாடுகளும் ஓர் ஆசிய நாடும் 'பிரபாகரன் குடும்பத்தினர் வந்தால் அடைக்கலம் தர' ஒப்புதல் அளித்திருந்தன. ஆனால், இந்தத் திட்டத்தை அமல்படுத்த ஒன்றரை மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்பட்டன. அவ்வளவு பணம் என்னிடத்தில் இல்லை. ஆனால், புலிகளின் கடல் கடந்த அமைப்புகளுக்கு இந்தப் பணத்தைத் தரக்கூடிய சக்தி இருந்தது. முக்கியமாக, சர்வதேசப் பொறுப்புகளைக் கவனித்து வந்த காஸ்ட்ரோ! அவரும் வேண்டிய பணத்தைத் தருவதாகச் சம்மதித்தார். நார்வேயில் இருக்கும் நெடியவன் மூலமாக இந்தப் பணம் எனக்கு கைமாற்றப்படும் என்றும், அதைத் தொடர்ந்து நான் இந்தத் திட்டத்தை நிறைவேற்றலாம் என்றும் காஸ்ட்ரோ கூறியிருந்தார்.
இறுதிப் போர் மேலும் மேலும் இறுகுவதை எடுத்துச் சொல்லி நான் பதறிக்கொண்டே இருந்தேன். பணம் வரவே இல்லை. அந்தச் சமயம், இலங்கைக்கு வெளியே இருந்தார் புலிப் படையின் முக்கிய விமானத் தளபதியாக இருந்த அச்சுதன். அவர் மூலமாக திறமையான விமானிகளை ஏற்பாடு செய்துகொடுப்பதாக நெடியவன் வாக்குறுதி கொடுத்தார். ஆனால், அச்சுதன் திடீரென என்னிடம் தொடர்பைத் துண்டித்துக்கொண்டார்.
நான் அப்போதும் தளராமல், கூலிக்காக எந்த அதிரடியும் செய்யக்கூடிய இரண்டு விமானிகளை பேசித் தயார்ப்படுத்தி வைத்திருந்தேன். கடைசி வரை பணம் வராததால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. ஒருவேளை, 'தலை வரின் குடும்பத்தைக் காப்பாற்றிய நற்பெயர் கே.பி-க்கு வந்துவிடக் கூடாது' என்றுகூட சம்பந்தப்பட்டவர்கள் நினைத்திருக்கலாம்.
ஒரு கட்டத்துக்கு மேல் சிங்களப் படைகள் பலமாக முன்னேறி சுற்றி வளைத்துவிட்டதை அறிந்தபோது, காஸ்ட்ரோ மற்றும் நெடியவன் மீது நான் கடும் கோபமும் வருத்தமும் அடைந்தேன். சார்லஸ் ஆண்டனி மற்றும் அவர் சகோதரி துவாரகா இருவருமே போர்க்களத்தில் வீரத்தோடு போராடி வீரச் மரணத்தைத் தழுவிக்கொண்டார்கள். மதிவதனி கொல்லப்பட்டார். பிரபாகரனின் இளைய மகனான சிறுவன் பாலச்சந்திரனின் மரணம் என்னை இன்னும் பலமாகப் பாதித்தது'' என்று பேட்டியில் கூறுகிறார் கே.பி.
கூடவே, பிரபாகரனின் கடைசி நிமிடங்கள்பற்றியும் சில விஷயங்களைச் சொல்கிறார்-
''தொலைக்காட்சியில் காட்டப்பட்டது பிரபாகரனின் சடலம்தான்'' என்று இவர் அந்தப் பேட்டியில் அழுத்திச் சொல்ல...
''அது எப்படி? தான் கொல்லப்பட்டால் எதிரிகளிடம் உடல் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காகவே தன்னோடு இருக்கும் ஒருவரிடம் எப்போதும் பெட்ரோல் தயாராக வைத்திருக்கச் சொல்லிஇருந்தாராமே பிரபாகரன்? அவர் உடல் எப்படி எதிரிகளுக்குக் கிடைத்திருக்க முடியும்?'' என்று பேட்டியாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் கேட்கிறார்.
அசராத கே.பி., ''பிரபாகரனும் பொட்டு அம்மானும் ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு தப்பிச் சென்று இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் செல்ல நினைத்த இடத்தை அடைய முடியாமல் தடங்கல் ஏற்பட்டு இருக்கிறது. பிரபாகரனுக்கு முன்பே பொட்டு அம்மான் இறந்திருக்க வேண்டும். அவர் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்திருக் கக்கூடும். அதன் பின், பிரபாகரனின் மறைவுக்கு முன்பே அந்த பெட்ரோல் சுமக்கும் மனிதர் சிங்களப் படையால் கொல்லப்பட்டு இருக்க வேண்டும். அல்லது பெட்ரோல் டின் தண்ணீரில் விழுந்திருக்க வேண்டும்'' என்று ஒரு விளக்கம் கொடுக்கிறார்.
இறுதி நிமிடங்களில் பிரபாகரன் உயிரோடு பிடிபட்டார் என்றும், அவரை சிங்கள ராணுவத் தளபதி மண்டியிடச் செய்து சுட்டுக் கொன்றார் என்றும் சிலர் பரப்பிய தகவல்களைக் கடுமையாக மறுக்கிறார் கே.பி. ''பிரபாகரனும் சரி... அவரோடு இருந்தவர்களும் சரி... மிக வீரமாக, கடுமையாகப் போரிட்டு வீர மரணம்தான் எய்தினார்கள். புலிகளுக்கான சர்வதேச விவகாரங்களைக் கவனிக்கும் சிலருக்கும் பிரபாகரன் இறந்துவிட்டார் என்பது தெரியும். முதலில், 'தலைவர் மரணத்துக்கு வீர அஞ்சலி செலுத்தி, துக்கம் அனுஷ்டிப்பதற்கு அறிவிக்க' அவர்கள் தயாராகவே இருந்தார்கள். திடீரென்று அந்த முடிவை மாற்றி, 'மரணச் செய்தியை உறுதிப் படுத்த' மறுத்துவிட்டார்கள்'' என்றும் கே.பி. சொல்லியிருக்கிறார் அந்தப் பேட்டியில்!
'மிக சாமர்த்தியமாக அளிக்கப்பட்டுள்ள பேட்டி இது! புலிகள் இயக்கத்தின் வீரத்தையும் வீரியத்தையும் தொடர்ந்து கொண்டுசெல்ல நினைப்பவர்களைப் பலவீனப்படுத்துவதற்கான கண்ணிவெடிகள் இதனுள் திறமையாகப் பொதித்துவைக்கப்பட்டுஉள்ளன' என்று சொல்வோரும் இருக்கிறார்கள்.
எப்படியோ... அடுத்த கதைக்காகக் காத்திருப்பதைத் தவிர வேறு வழி இல்லை!
கே.பி-யின் பேட்டியைத் தொடர்ந்து கேள்விகள் சில வேகமாக எழுந்து வருகின்றன! அவர் விவரிக்கும் சம்பவங்கள் நடந்த காலகட்டம் குறித்துத் தெளிவான தகவல் இல்லை. தமிழீழக் கடல் பகுதியாகச் சொல்லப்பட்ட அத்தனை இடங்களையும் தன்னுடைய கப்பற்படை வசம் ஒப்படைத்து, அங்கே இருந்து எதையும் உள்ளேவிடாமல், வெளியேவிடாமல் தடுப்பு அரண் போட்டு இருந்தது இலங்கை அரசு. இலங்கைக் கடற்படையின் தளபதி வசந்த கரண கோடா சொன்னதின்படி, 2006-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி ஒரு கப்பலும், 2007-ம் ஆண்டு செப்டம்பர் 10, 11 தேதிகளில் மூன்று கப்பல்களும், அக்டோபர் 7-ம் தேதி நான்கு கப்பல்களுமாக புலிகளுக்காக ஆயுதம் ஏற்றி வந்த எட்டு கப்பல்கள் வீழ்த்தி மூழ்கடிக்கப்பட்டன. அப்படிப்பட்ட நிலையில், கே.பி. எப்படி ஒரு கப்பலை இலங்கையின் கடல் எல்லைக்கு அருகில் கொண்டுவர முடியும்?
இலங்கையின் எல்லைக்குள் தரை மார்க்கமாக ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு புலிகள் நகர்வதே கடினமாக இருந்த சூழலில் 'வன்னிப் பகுதியில் ஹெலிகாப்டரைக் கொண்டுவந்து இறக்கத் திட்டமிட்டோம், அதன் பிறகு பறக்கத் திட்டமிட்டோம்' என்பதெல்லாம் எந்த அளவுக்குச் சாத்தியம்?
ஒருவேளை, ஹெலிகாப்டர் அங்கே சிங்கள ராணுவக் கண்காணிப்பைத் தாண்டி இறங்கி இருக்க முடியும் என்றால், காசு கொடுத்து ஒரு செகண்ட் ஹாண்ட் ஹெலிகாப்டரை வாங்குகிற அளவுக்கா புலிகளின் வெளிநாட்டுத் தொடர்பு இருந்தது? அவர்கள் நினைத்தால், சேட்டிலைட் போனில் ஒரே ஒரு தகவல் சொன்னால், ஒன்றுக்கு நாலாக ஹெலிகாப்டர்களை அவர்களுக்காக கே.பி-யிடம் ஒப்படைக்க எத்தனையோ பேர், வெவ்வேறு நாடுகளில் தயாராக உண்டே?
- இப்படி முரண்பட்ட காட்சிகள்கொண்டதாக கே.பி-யின் பேட்டியைப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஆனால், டி.பி.எஸ்.ஜெயராஜ் எழுதினால், அதில் ஓர் அர்த்தம் இருக்கும் என்ற பேச்சையும் கேட்க முடிகிறது!

No comments:

Post a Comment