Friday, August 6, 2010

ரஜினியை மறந்த ஐஸ்!

திரையரங்குகள் திமிலோகப்படும் டிஜிட்டல் திருவிழாவுக்கு உத்தரவாதம் தருகிறது 'எந்திரன்' படத்தின் இசையும், டிரெய்லர் காட்சிகளும். இந்தியாவே எதிர்பார்த்திருக்கும் படத்தின் (அப்படித்தான் 'பில்டப்'!) இசை வெளியீட்டு விழா நடந்தது மலேசியாவின் கோலாலம்பூர் நகரத்தில்.பாராட்டு உரைகளின் இறுதியில் குறுந்தகடின் பெருவடிவம் பிடித்து போஸ் கொடுக்க, ஸ்வீட், காரம், காபிகளுக்குக் கூட்டம் கலையும் தமிழகத்தின் சம்பிரதாய இசை வெளியீடுகளுக்கு மத்தியில் 'எந்திரன்' இசை வெளியீடு... நிச்சயம் ஆகப் பெரிய விசேஷம். கிட்டத்தட்ட ஒரு கலை இரவாகவே நடந்தது. ரஜினி, ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், வைரமுத்து, ஐஸ்வர்யா பச்சன், ராஜசேகர், சாபு சிரில் என ஒட்டுமொத்த படக் குழுவினரும் அரங்கில் ஆஜர். கலா மாஸ்டர் குழுவினரின் நடனங்களோடு துவங்கியது விழா. ஷங்கர் கலெக்ஷன் பாடல்கள், ரஹ்மான் கலெக்ஷன் பாடல்களுக்குக் குழுவினர் நடனமாட, ரஜினி கலெக்ஷன் பாடல்களுக்கு ஆடியது சிம்பு. 'ஜெயம்' ரவி, வடிவேலு, ரம்யா கிருஷ்ணன், விஜயலெட்சுமி ஆகியோரும் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்கள்.
டிரெய்லர் காட்சிகளுக்கு அபார அப்ளாஸ். 'இதுதான் நான் கண்டுபிடிச்ச ரோபோ. சிட்டி தனபால். 100 பேரோட அறிவும் திறமை யும்கொண்டு புரொகிராம் செய்யப்பட்டது. இவனுக்கு எல்லாக் கலைகளும் தெரியும். உலகத்தின் எல்லா மொழிகளும் புரியும்!' என்று 'எந்திரனை' விஞ்ஞானி ரஜினி அறிமுகம் செய்ய, அருகில் பரம சாது வாக அடக்க ஒடுக்கமாக நிற்கிறார் 'எந்திரன்' ரஜினி. மனித எலும்புக் கூடுபோல இருக்கும் 'ரோபா' அப்படியே ரஜினியின் நிஜமான துள்ள லும் உடல் மொழியும் கலந்து நடக்கும் இடங்களில்... நிச்சயம் இந்திய சினிமா ரசிகர்களுக்கு விஷுவல் விருந்துதான்! ஷங்கர் முதல் சாபு சிரில் வரை அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுகளையும் அள்ளி வழங்கிய ஐஸ்வர்யா மைக்கில் இருந்து விலகி நடக்கத் தொடங்கிய பிறகு, அமர்ந்திருந்த ரஜினியைப் பார்த்ததும் பதறித் துடித்து மீண்டும் மைக் நோக்கி திடுதிடுவென ஓடி வந்தார். "ஓ ரஜினி சார்... உங்க ளைப்பற்றி கடைசியில் சொல்லலாம் என்று இருந்தேன். ஆனால், அதற்குள் நேரம் குறைவாக இருக்கிறதே என்ற பதற்றத்தில் ஓடி வந்துவிட்டேன். பொறுமை, திறமை, பெருமை ஆகியவற்றுக்கு ரஜினி சார்தான் உருவகம். அவர் ஒரு பவர் ஹவுஸ். 'எந்திரன்' ஷூட்டிங்கின் ஒவ்வொரு நாளும் எங்களுக்குக் கிட்டத்தட்ட அக்னிப் பரீட்சைபோல இருக்கும். ஏனெனில், ஒவ்வொரு நாளும் நாங்கள் ஷூட்டிங்கில் மேஜிக்போல காரியங்களைச் சாதிக்க வேண்டும். நான் டென்ஷனில் பரபரப்பாக இருப்பேன். ஆனால், அவர் எந்த டென்ஷனும் இல்லாமல் ரொம்ப ரிலாக்ஸாக இருப்பார். கேமரா ரோல் ஆனதும் அசாத்தியமாக நடிப்பார். 'இவ்வளவு ஹோம்வொர்க் எப்போ, எங்கே செய்தார்?' என்று எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். ஹாட்ஸ் ஆஃப் ரஜினி சார்!" என்று ஏகத்துக்கும் பாராட்டிக்கொண்டே இருக்க, ரஜினி முகத்தில் வெட்கமும் கூச்சமும்!
விழாவில் பேசிய அனைவரும் ரஜினியைச் சர மாரியாகப் பாராட்டிக்கொண்டே இருக்க, ரஜினி யின் பேச்சிலோ அத்தனை அடக்கம். "எல்லாப் புகழும் இறைவனுக்கே!" என்று ஆரம்பித்தவர், வழக்கமான குட்டிக் கதை, சுவாரஸ்ய சம்பவப் பகிர்வுகள் என்று அரங்கத்தைக் கலகலக்கச் செய்தார்.
" 'சிவாஜி' படம் பண்றதுக்கு முன்னாடி கமல்கிட்ட, 'ஷங்கர் எப்படி?'ன்னு கேட்டேன். 'மகா கெட்டிக்காரன், ஆனா, ரொம்ப சிரமம் கொடுப்பார். ரொம்பவே வலிக்கும். பார்த்துக்கங்க!'ன்னு சிரிச்சுட்டே சொன்னார். இப்போ 'எந்திரன்' வேலைகள் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி கலாநிதிகிட்ட நான் சொன்னேன். 'ஷங்கர் ஒரு வைல்டு ஹார்ஸ் மாதிரி. பயங்கரமான முரட்டுக் குதிரை. டெஃபனிட்டா இலக்கை அடையும். ஆனா, நாமதான் கெட்டியாப் பிடிச்சுக்கணும்'னு. ஏன்னா, படத்துல நடிக்கிறவங்க, படத்தைத் தயாரிக்கிறவங்க, அதை வாங்குறவங்க, பார்க்கிறவங்கன்னு எல்லாருக்கும் ஒரே படத்துல லாபம் வெச்சிருப்பாரு.
ஐஸ்வர்யா பத்தி சொல்லியே ஆகணும். பியூட்டி வித் பிரைட். அன்னம் இயல்பாவே அழகுன்னு சொல்வாங்க. அது நின்னா, நடந்தா, தண்ணியில மிதந்தாலே அழகு. ஐஸ்வர்யாவும் அப்படித்தான்... என்ன செஞ்சாலும் அழகு. அவங்க கதக் டான் ஸர். எனக்கு டான்ஸ் தெரியாது. ஆனா, எனக்காக அவங்க அவ்வளவு இறங்கி வந்து கோ-ஆபரேட் பண்ணுவாங்க. காதல் காட்சிகளில் எனக்கு ஒரு மாதிரி இருக்கும். எதிர்தாப்ல அமிதாப் நின்னுட்டு, 'ரஜினி கபர்தார்!'ன்னு சொல்ற மாதிரி இருக்கும். நம்ம ஆளு அவரு... பெரிய ஆளு வேற. ஆனா, ஐஸ்வர்யாகிட்ட எந்தத் தயக்கமும் மயக்கமும்இருக் காது. பென்டாஸ்டிக் ஆர்டிஸ்ட் அவங்க. யோகி, மகான், சித்தர்லாம் இமய மலையில்தான் இருப்பாங்கன்னு நினைக்காதீங்க. இங்கேயும் இருப்பாங்க. ஜீன்ஸ் போட்டு இருப்பாங்க... கோட் போட்டு இருப்பாங்க. நம்ம ரஹ்மான் கோட் போட்ட யோகி. அவர் மாதிரி ஆட்கள் நம்மகூட இருக்க நாம கொடுத்துவெச்சிருக்கணும்!பெரியவங்க குழந்தையைச் சுத்தி உக்காந்துகிட்டு அதைப் பாடச் சொல்லி, ஆடச் சொல்லி சந்தோஷமா இருப்பாங்க. அதுபோலத்தான் இந்த ரஜினிகாந்த்துங்கிற குழந்தைக்கு நீங்கள்லாம் சேர்ந்து டிரெஸ் போட்டு, மேக்கப் போட்டு நடிக்கவெச்சு பேர் வாங்கித் தர்றீங்க. ஆனா, நான் இவ்வளவு பேர், புகழுக்கு உரியவனான்னு தெரியலை!" என்று ரஜினி சொன்னபோது, ஒரு கணம் தாமதித்து அதிர்ந்து மகிழ்ந்துகொண்டே இருந்தது அரங்கம்!

No comments:

Post a Comment